» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

குஜராத் அணியை போராடி வென்றது பஞ்சாப் : ஷ்ரேயாஸ் ஐயர் புதிய சாதனை!

புதன் 26, மார்ச் 2025 12:20:23 PM (IST)



ஐபிஎல் 18வது தொடரின் 5வது லீக் போட்டியில் குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 11 ரன் வித்தியாசத்தில் போராடி வெற்றி பெற்றது. 

ஐபிஎல் 18வது தொடரின் 5வது லீக் போட்டி, குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் நேற்று குஜராத், பஞ்சாப் அணிகள் இடையே நடந்தது. டாஸ் வென்ற குஜராத் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. பஞ்சாப் அணியின் துவக்க வீரர்கள் பிரப்சிம்ரன் சிங், பிரியன்ஷ் ஆர்யா களமிறங்கினர்.

பிரப்சிம்ரன் 5 ரன், பிரியன்ஷ் ஆர்யா 47 ரன்னில் ஆட்டமிழந்தனர். கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் அதிரடி காட்ட 9.1 ஓவரில் பஞ்சாப், 100 ரன்னை எட்டியது. 11வது ஓவரை வீசிய தமிழகத்தை சேர்ந்த சாய் கிஷோர், அஸ்மதுல்லா ஒமர்ஸாய்யும், கிளென் மேக்ஸ்வெல்லையும் அடுத்தடுத்த பந்துகளில் அவுட்டாக்கி பஞ்சாப் அணிக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்தார். தொடர்ந்து வந்த மார்கஸ் ஸ்டோய்னிஸ் 20 ரன்னில் வெளியேறினார். 20 ஓவர் முடிவில் பஞ்சாப், 5 விக்கெட் இழப்புக்கு 243 ரன் குவித்தது.

ஸ்ரேயாஸ் 97, சஷாங்க் சிங் 47 ரன் எடுத்து களத்தில் இருந்தனர். கடைசி ஓவரில் சஷாங்க 5 பவுண்டரி, 2 ரன் எடுத்தார். இதனால் கடைசி ஓவரில் ஸ்டிரைக் கிடைக்காததால் சதம் அடிக்க வாய்ப்பு ஸ்ரேயாசுக்கு பறிபோனது. குஜராத் தரப்பில் சாய் கிஷோர் 3, ரபாடா, ரஷித் கான் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். 244 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் குஜராத் அணி களமிறங்கியது. தொடக்க வீரர்கள் கேப்டன் சுப்மன் கில், சாய் சுதர்சன் ஆகியோர் அதிரடியாக விளையாடினர்.

5.5 ஓவரில் 61 ரன் எடுத்திருந்த நிலையில் கில் 33 ரன்னில் (14 பந்து, 3 சிக்சர், 2 பவுண்டரி) ஆட்டமிழந்தார். அடுத்த வந்த பல்டர், சாய் சுதர்சனுடன் ஜோடி சேர்ந்த அதிரடியாக விளையாடினார். சாய் சுதர்சன் 74 ரன்னிலும் (41 பந்து, 6 சிக்சர், 5 பவுண்டரி), பல்டர் 54 ரன்னிலும் (33 பந்து, 2 சிக்சர், 4 பவுண்டரி) வெளியேறினர். அடுத்த வந்த ஷெர்பேன் ரதர்ஃபோர்ட் 46 ரன்னில் (28 பந்து, 3 சிக்சர், 4 பவுண்டரி) அவுட்டாக குஜராத் அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 232 ரன் எடுத்து 11 ரன்னில் தோல்வியடைந்தது.

2025 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனாக முதல் போட்டியிலேயே களமிறங்கிய ஸ்ரேயாஸ் ஐயர் இரண்டு முக்கிய சாதனைகளைச் செய்திருக்கிறார். ஐபிஎல் வரலாற்றிலேயே மூன்று அணிகளுக்கு கேப்டனாக இருந்த இரண்டாவது இந்திய வீரர் என்ற சாதனையைச் செய்திருக்கிறார்.

2025 ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக அஜிங்க்ய ரஹானே களமிறங்கிய நிலையில், அடுத்ததாக ஸ்ரேயாஸ் ஐயர் இந்த சாதனையைச் செய்திருக்கிறார். இதற்கு முன் குமார் சங்ககாரா, மஹிளா ஜெயவர்தனே மற்றும் ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர் மூன்று ஐபிஎல் அணிகளின் கேப்டனாக செயல்பட்டுள்ளனர். அவர்களுடன் தற்போது அஜிங்க்யா ரஹானே மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் இணைந்துள்ளனர்.

ஐபிஎல் வரலாற்றில் மூன்று அணிகளுக்கு கேப்டனாக இருந்த இரண்டாவது இந்திய வீரர் ஆனார்.அஜிங்க்ய ரஹானேவுக்குப் பிறகு இந்த சாதனையை ஸ்ரேயாஸ் ஐயர் நிகழ்த்தினார். கேப்டனாக அறிமுகமான போட்டியில் மூன்று ஐபிஎல் அணிகளிலும் அரை சதம் அடித்த ஒரே வீரர் என்ற சாதனையையும் படைத்தார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory