» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

ஐ.பி.எல். கிரிக்கெட்: பஞ்சாப்பை வீழ்த்தி பெங்களூரு கோப்பையை வென்றது

புதன் 4, ஜூன் 2025 8:57:27 AM (IST)



ஐ.பி.எல். கிரிக்கெட் இறுதிப்போட்டியில் பஞ்சாப்பை வீழ்த்தி பெங்களூரு அணி கோப்பையை வென்றது.

18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில், ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நேற்றிரவு அரங்கேறிய இறுதி ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ்- பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இரு அணிகளும் தங்களது முதல் கோப்பைக்காக மல்லுக்கட்டியதால் எதிர்பார்ப்பு எகிறியது. மாலையில் அங்கு லேசாக மழை பெய்தது. நல்லவேளையாக இரவில் போட்டிக்கு வருணபகவான் வழிவிட்டதால் ரசிகர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

இரு அணியிலும் ஆடும் லெவனில் மாற்றமில்லை. காயத்தில் இருந்து குணமடையாததால் பெங்களூரு வீரர் டிம் டேவிட் சேர்க்கப்படவில்லை. ‘டாஸ்’ ஜெயித்த பஞ்சாப் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து விராட் கோலியும், பில் சால்ட்டும் பெங்களூரு அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் புகுந்தனர். முதல் ஓவரிலேயே சிக்சர், பவுண்டரியுடன் அட்டகாசமாக தொடங்கிய பில் சால்ட் 16 ரன்னில் (9 பந்து, 2 பவுண்டரி, ஒரு சிக்சர்) ஜாமிசன் வீசிய பந்தை தூக்கியடித்து கேட்ச் ஆகிப்போனார். அடுத்து வந்த மயங்க் அகர்வால் 24 ரன்களிலும், கேப்டன் ரஜத் படிதார் 26 ரன்களிலும் நடையை கட்டினர்.

மறுமுனையில் விராட் கோலி மந்தமாக ஆடினார். 15 ஓவர் வரை களத்தில் நின்றும் அவர் அரைசதம் கூட அடிக்கவில்லை. 43 ரன்களில் (35 பந்து, 3 பவுண்டரி) ஓமர்ஜாய் பந்து வீச்சில் அவரிடமே சிக்கினார். இருப்பினும் ஐ.பி.எல்.-ல் குறிப்பிட்ட ஒரு அணிக்கு எதிராக அதிக ரன் குவித்த வீரர் (பஞ்சாப்புக்கு எதிராக மொத்தம் 1,159 ரன்) என்ற சாதனையோடு கோலி வெளியேறினார்.

5-வது விக்கெட்டுக்கு லியாம் லிவிங்ஸ்டனும், ஜிதேஷ் ஷர்மாவும் இணைந்து ஸ்கோரை கணிசமாக உயர்த்தினர். ஜாமிசனின் ஒரே ஓவரில் 3 சிக்சர் நொறுக்கி குஷிப்படுத்தினர். ஸ்கோர் 167-ஐ (16.5 ஓவர்) எட்டிய போது லிவிங்ஸ்டன் 25 ரன்னில் எல்.பி.டபிள்யூ. ஆனார். ஜிதேஷ் ஷர்மா தனது பங்குக்கு 24 ரன்கள் (10 பந்து, 2 பவுண்டரி, 2 சிக்சர்) திரட்டினார். ஆனால் இவர்கள் வீழ்ந்ததும் ரன்ரேட் சற்று தளர்ந்து போனது. 18-வது ஓவரில் 5 ரன் மட்டுமே வந்தது.

இதே போல் வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப்சிங் இறுதி ஓவரில் ரொமாரியோ ஷெப்பார்டு (17 ரன்), குருணல் பாண்ட்யா (4 ரன்), புவனேஷ்வர்குமார் (1 ரன்) ஆகியோரை காலி செய்து மிரட்டினார். அந்த ஓவரில் 3 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்தார். இதனால் 200 ரன்களை தாண்டும் என்று கணிக்கப்பட்டிருந்த பெங்களூருவின் ஸ்கோர் அதற்குள் அடங்கிப் போனது.

20 ஓவர் முடிவில் பெங்களூரு அணி 9 விக்கெட்டுக்கு 190 ரன்கள் சேர்த்தது. பஞ்சாப் தரப்பில் வேகப்பந்து வீச்சாளர்கள் கைல் ஜாமிசன், அர்ஷ்தீப்சிங் தலா 3 விக்கெட்டுகளை சாய்த்தனர். பின்னர் 191 ரன் இலக்கை நோக்கி பஞ்சாப் அணி ஆடியது. 5 ஓவர் முடிந்திருந்த போது ஒரு விக்கெட்டுக்கு 44 ரன்கள் எடுத்திருந்தது. 20 ஓவர் முடிவில் இந்த அணி 7 விக்கெட் இழப்புக்கு 184 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory