» சினிமா » செய்திகள்
முரசொலி செல்வம் மறைவு : முதல்வர் மு.க.ஸ்டாலின், நடிகர் ரஜினிகாந்த் இரங்கல்!
வியாழன் 10, அக்டோபர் 2024 4:11:46 PM (IST)

முரசொலி செல்வம் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் உருக்கமாக இரங்கல் தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் மருமகனான முரசொலி செல்வம் வயது மூப்பு, உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். முரசொலி மாறனின் சகோதரரும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சகோதரி செல்வியின் கணவருமான முரசொலி செல்வம் முரசொலி நாளிதழை மேம்படுத்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக உழைத்தவர்.
இந்நிலையில், தமிழக முதல்வர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "மறைந்த முதல்வர் கருணாநிதியின் மருமகனும், அவரது மனசாட்சியான முரசொலி மாறனின் இளவலும், தங்கை செல்வியின் கணவருமான என் அன்புக்குரிய முரசொலி செல்வம் மறைந்தார் என்ற செய்தி இடி போல என் நெஞ்சத்தைத் தாக்கி, வேதனைக் குருதியை வடியச் செய்கிறது.
கருணாநிதியின் மூத்த பிள்ளையான முரசொலியின் பணிகளைத் தன் தோளில் சுமந்துகொண்டு இளமைப் பருவம் முதலே திறம்படச் செயலாற்றியவர் முரசொலி செல்வம். கருணாநிதியும் அவரது மனசாட்சியான முரசொலி மாறனும் மனதில் நினைப்பதை எழுத்தில், செயலில் நிறைவேற்றியவர் பாசத்துக்குரிய முரசொலி செல்வம். திமுகவின் போர்வாளான முரசொலி நாளேட்டின் ஆசிரியராகப் பொறுப்பேற்று தன் எழுத்துகளால் ஜனநாயகக் குரலாக ஒலித்தவர்.
அடக்குமுறைக்கு அஞ்சாமல் சட்டமன்றத்தில் கூண்டிலேறி கருத்துரைத்தவர். "முரசொலி சில நினைவுகள்" என்ற அவரது புத்தகத் தொகுப்பு முரசொலி எதிர்கொண்ட நெருக்கடிகளையும் முரசொலியோடு செல்வத்துக்கு இருக்கும் பின்னிப் பிணைந்த உறவையும் எடுத்துரைப்பது ஆகும். தேர்தல் களம் முதல் திரைப்படப் பணிகள் வரை அனைத்துத் துறைகளிலும் முத்திரையைப் பதித்தவர். எந்த நிலையிலும் கட்சியே மூச்சு என வாழ்ந்த கொள்கைச் செல்வம் அவர்.
அதிர்ந்து பேசாதவர். ஆனால், ஆழமான கொள்கைவாதி. சிலந்தி என்ற பெயரில் முரசொலியில் அவர் எழுதிய நையாண்டியும் நகைச்சுவையும் ததும்பும் கட்டுரைகள் கழகத்தின் இளைய தலைமுறையினருக்குக் கொள்கை ரத்தம் பாய்ச்சும் வலிமை கொண்டவை. நேற்று முன்தினம்கூட முரசொலியில் கட்டுரை எழுதிய அவர், இன்று காலையில் அடுத்த கட்டுரைக்கான குறிப்புகளை எடுத்துவைத்துவிட்டு, சற்று கண்ணயர்ந்த நேரத்தில் மாரடைப்பால் மரணமடைந்தார் என்பதைக் கேட்டதும் இதயம் அதிர்ந்து, நொறுங்கிவிட்டேன்.
சிறுவயது முதலே எனக்கு அண்ணனாக - வழிகாட்டியாக, இயக்கப் பணிகளில் ஆலோசனைகள் வழங்கி, நெருக்கடி நேரங்களில் தெளிவான தீர்வுகளை முன்வைத்து, கட்சியுடனான என் வளர்ச்சியில் தோளோடு தோள் நின்றவர் என் பேரன்புக்குரிய அண்ணன் முரசொலி செல்வம். தலைவர் கருணாநிதி நம்மை விட்டுப் பிரிந்த பிறகு, நான் சாய்வதற்குக் கிடைத்த கடைசித் தோளை, கொள்கைத் தூணை இழந்து நிற்கிறேன். என்னை நானே ஆற்றுப்படுத்த முடியாத நிலையில், கட்சியிலும் குடும்பத்திலும் யாருக்கு எப்படி ஆறுதல் சொல்லப் போகிறேன்!
செல்வமே.. முரசொலி செல்வமே.. பண்பின் திருவுருவமே... திராவிட இயக்கத்தின் படைக்கலனே... கட்சியின் கொள்கைச் செல்வமே.. நெஞ்சிலும் நினைவிலும் என்றும் நிலைத்திருப்பீர்!” என்று முதல்வர் உருக்கமாகப் பதிவிட்டுள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் இரங்கல்
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் சகோதரி செல்வியின் கணவர் முரசொலி செல்வம் மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.
ரஜினி தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது: முரசொலி செல்வம் என்னுடைய நீண்ட கால நண்பர் மற்றும் அருமையான மனிதர். அவருடைய மறைவு எனக்கு மிகவும் வருத்தமளிக்கிறது. அவருடைய ஆத்மா சாந்தியடையட்டும். அவருடைய குடும்பத்தினருக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கல் என பதிவிட்டுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஏ.ஆர். ரஹ்மானுடன் மத்திய அமைச்சர் எல். முருகன் சந்திப்பு!
திங்கள் 30, ஜூன் 2025 5:32:42 PM (IST)

சிம்பு படத்திற்கு கண்டிஷன் போட்ட தனுஷ்..? வெற்றி மாறன் விளக்கம்!
திங்கள் 30, ஜூன் 2025 12:25:38 PM (IST)

எஸ்.ஜே.சூர்யா இயக்கி நடிக்கும் கில்லர் அதிகாரபூர்வ அறிவிப்பு
வெள்ளி 27, ஜூன் 2025 4:21:57 PM (IST)

வேல்ஸ் நிறுவனம் தயாரிப்பில் 10 படங்கள்: இயக்குநர்கள் பட்டியல் அறிவிப்பு!
வெள்ளி 27, ஜூன் 2025 4:15:45 PM (IST)

ஆஸ்கர் விருது விழா: கமல்ஹாசனுக்கு அழைப்பு!
வெள்ளி 27, ஜூன் 2025 10:41:00 AM (IST)

கண்ணப்பா படத்தை ட்ரோல் செய்தால் கடும் நடவடிக்கை: படக்குழு எச்சரிக்கை!
வியாழன் 26, ஜூன் 2025 5:44:50 PM (IST)
