தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவப்பிரசாத் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் போதை பொருள் ஒழிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதில் காவல் சரகங்கள் வாரியாக போலீசார் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தூத்துக்குடி பகுதியில் விற்பனை செய்ய வாலிபர்கள் சிலர் கஞ்சாவை கடத்திக் கொண்டு வருவதாக ஏ.என்.டி.எப் போதை பொருள் தடுப்பு பிரிவு போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் முத்துராஜாவுக்கு தகவல் கிடைத்தது.
இதனைத் தொடர்ந்து அவரது தலைமையிலான போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு தூத்துக்குடியில் வைத்து விற்பனைக்காக கடத்தி வரப்பட்ட 14 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
மேலும் கடத்தலில் ஈடுபட்ட தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு,காந்தாரி அம்மன் கோவில் எதிர்ப்புற தெரு பகுதியை சேர்ந்த காசி பாண்டி( 22 ), திருநெல்வேலி மன்சூர் காவல் சரகம் பள்ளிக்கோட்டை வடக்கு தெரு பகுதியைச் சேர்ந்த ரமேஷ் (23) தாழையூத்து, சங்கர்நகர் சாரதாம்பாள்நகர் பகுதி ராஜகோபால் (23 ) ஆகிய மூன்று பேரையும் கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

