» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

திருப்பதி லட்டு தயாரிப்பில் மாட்டுக் கொழுப்பு: ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் மறுப்பு

வெள்ளி 20, செப்டம்பர் 2024 10:05:49 AM (IST)

திருமலை பிரசாதம் குறித்த ஆந்திர முதல்வர்  சந்திரபாபு நாயுடுவின் கருத்து மிகவும் மோசமானது என்று ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் மறுப்பு
தெரிவித்துள்ளது. 

ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் ஆட்சியின் போது,​​ திருப்பதி லட்டு தயாரிப்பில் பயன்படுத்தப்பட்ட நெய்யில் விலங்குகளின் கொழுப்பு கலப்படம் செய்யப்பட்டது குறித்து, தெலுங்கு தேசம் கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு, தீவிர விசாரணை நடத்தும் என ஆந்திர மாநில அமைச்சர் நாரா லோகேஷ் மீண்டும் தெரிவித்துள்ளார்.

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, "திருமலையில் உள்ள ஏழுமலையான் கோயில் மிகவும் புனிதமானது. ஆனால் முந்தைய ஜெகன்மோகன் ஆட்சியில் அங்கு கொடுக்கப்பட்ட லட்டு பிரசாதத்தில் நெய்க்கு பதில், விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக கிடைத்த தகவலைக் கேட்டு அதிர்ச்சியடைந்தேன். கோடிக்கணக்கான பக்தர்களின் நம்பிக்கைக்கு மதிப்பளிக்க முடியாத ஜெகன்மோகனும், ஒய்எஸ்ஆர் காங்கிரஸும் வெட்கப்பட வேண்டும்." எனத் தெரிவித்தார்.

ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் மறுப்பு

இந்தக் குற்றச்சாட்டை ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் மறுத்தது. இது தொடர்பாக ஒய்எஸ்ஆர் காங்கிரஸின் எம்.பி சுப்பா ரெட்டி வெளியிட்ட எக்ஸ் பதிவில், "திருமலையின் புனிதத்தையும், பல நூறு கோடி இந்துக்களின் நம்பிக்கையையும் சேதப்படுத்தி சந்திரபாபு நாயுடு பெரும் பாவம் செய்துள்ளார். 

திருமலை பிரசாதம் குறித்த சந்திரபாபு நாயுடுவின் கருத்து மிகவும் மோசமானது. மனிதப் பிறவியில் பிறந்த எவரும் இப்படிப்பட்ட குற்றச்சாட்டுகளைச் சொல்ல மாட்டார்கள். அரசியலுக்காக எந்த மோசமான செயலையும் செய்ய சந்திரபாபு நாயுடு தயங்க மாட்டார் என்பது மீண்டும் நிரூபணமாகியுள்ளது." எனக் கூறினார்.

இந்நிலையில், திருப்பதி லட்டு செய்ய பயன்படுத்தப்பட்ட நெய்யில் விலங்கு கொழுப்புகள் இருந்ததாக ஆய்வக ரிப்போர்ட் வெளியிடப்பட்டுள்ளது. திருப்பதி லட்டு தயாரிக்கப் பயன்படுத்தப்பட்ட நெய்யில், விலங்குகளின் கொழுப்பு இருந்தது பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. லட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய்யில், மீன் எண்ணெய், மாட்டிறைச்சி மற்றும் பன்றிக் கொழுப்பு ஆகியவற்றின் தடயங்கள் இருக்கின்றன என லேப் ரிப்போட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், சந்திரபாபு நாயுடுவின் மகனும், ஆந்திர மாநில அமைச்சருமான நாரா லோகேஷ் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், "ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் ஆட்சியின் போது,​​திருப்பதி லட்டு தயாரிப்பில் பயன்படுத்தப்பட்ட நெய்யில் விலங்குகளின் கொழுப்பு கலப்படம் செய்யப்பட்டது குறித்து, தெலுங்கு தேசம் கட்சி தலைமையிலான NDA கூட்டணி அரசு, தீவிர விசாரணை நடத்தும். தரமான நெய்யை வழங்கும் கர்நாடக பால் கூட்டமைப்பு ஏன் அப்போதைய ஆளும் கட்சித் தலைவர்களால் விரும்பப்படும் சப்ளையர்களுக்கு இடமளிப்பதற்காக விநியோகச் சங்கிலியிலிருந்து வெளியேற்றப்பட்டது என்று சுப்பா ரெட்டி தெளிவுபடுத்த வேண்டும்.

உலகப் புகழ்பெற்ற திருப்பதி லட்டுகளைத் தயாரிப்பதில் விலங்குகளின் கொழுப்புகள் மற்றும் தரமற்ற மூலப்பொருள்கள் கலந்த நெய்யைப் பயன்படுத்த அனுமதித்ததன் மூலம் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் ஆட்சி செய்தது பெரும் பாவம். லட்டு பிரசாதத்தின் தரம், சுவையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. பல பக்தர்கள் இதுபற்றி புகார் அளித்துள்ளனர், தங்கள் ஆட்சியின் போது திருப்பதி தேவஸ்தானத்துக்கு வழங்கப்பட்ட நெய்யில் விலங்குகளின் கொழுப்புகள் இருப்பதை ஆய்வக அறிக்கைகள் உறுதி செய்த பிறகும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் தலைவர்கள் தங்கள் செயல்களை பாதுகாக்க முயற்சிப்பது துரதிருஷ்டவசமானது.

ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர்.சி.பி ஆட்சியின் போது திருப்பதி திருமலை தேவஸ்தானத்தில் நடந்த அனைத்து ஊழல்கள் மற்றும் முறைகேடுகள் குறித்து எங்கள் அரசாங்கம் ஏற்கனவே விசாரணையைத் தொடங்கியுள்ளது. ஊழல் அதிகாரிகள் மீது கடுமையான சட்ட நடடிக்கைகள் பாயும்.

கடவுளின் பெயரை தவறாகப் பயன்படுத்தினால், அது பேரழிவிற்கு வழிவகுக்கும் என்று நாங்கள் எச்சரித்தோம். 2019 முதல் 2024 வரை, எங்கள் கூட்டணி அப்போதைய ஜெகன் மோகன் அரசை பல முறை விமர்சித்தோம். கடந்த கால அரசின் தவறான ஆட்சியால், விலங்குகளின் கொழுப்பைப் பயன்படுத்தி, திருமலை லட்டு தயாரிப்பது, திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியது. NDA கூட்டணி அரசு திருப்பதி திருமலை தேவஸ்தானத்தில் புதிய சீர்திருத்தங்களை கொண்டு வரும்." எனத் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Tirunelveli Business Directory