» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
திருப்பதியில் கூட்ட நெரிசலில் தமிழகத்தை சேர்ந்த 2பேர் உட்பட 6 பேர் உயிரிழப்பு: பிரதமர் இரங்கல்
வியாழன் 9, ஜனவரி 2025 11:20:53 AM (IST)

திருப்பதி கோயிலில் கூட்ட நெரிசலில் சிக்கி தமிழகத்தை சேர்ந்த 2பேர் உட்பட 6பேர் உயிரிழந்தனர். இந்த துயர சம்பவத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
ஆந்திராவின் திருப்பதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற திருமலையில் உள்ள ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு வைகுண்ட துவார தரிசனத்துக்கான இலவச டோக்கன் விநியோகிக்கப்படும் என திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் அறிவித்திருந்தது. இதற்காக பல்வேறு இடங்களில் 90 கவுண்டர்கள் அமைக்கப்பட்டிருந்தன. டோக்கன் இன்று (ஜன.9) காலை 5 மணி முதல் விநியோகிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இந்த சூழலில் நேற்று (புதன்கிழமை) இரவு இலவச தரிசன டிக்கெட்டை பெற ஆயிரக்கணக்கான பக்தர்கள் கவுண்டர்களில் திரண்டிருந்தனர். அப்போது விஷ்ணு நிவாசம், பைரகிபட்டேடா, ராமச்சந்திர புஷ்கரிணி உள்ளிட்ட கவுண்டர்களில் கூட்டம் அதிகம் இருந்தது. அந்த பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகளும் முறையாக இல்லை என தகவல் கிடைத்துள்ளது. அங்கு ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர். சுமார் 30-க்கும் மேற்பட்டோருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. அவர்கள் திருப்பதியில் உள்ள அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போலீஸார் தவித்துள்ளனர்.
பிரதமர் மோடி இரங்கல்: "திருப்பதியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலை அறிந்து நான் மிகுந்த மன வேதனை அடைந்தேன். எனது எண்ணமெல்லாம் தங்கள் நெருங்கிய உறவுகளை இழந்து வாடுபவர்களுடன் உள்ளது. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆந்திர அரசு அனைத்து உதவிகளையும் வழங்கி வருகிறது” என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். இன்று காலை 11 மணி அளவில் முதல்வர் சந்திரபாபு நாயுடு திருப்பதி வர உள்ளதாக தகவல். அவர் காயமடைந்தவர்களை நேரில் சந்திக்க உள்ளார். இந்த சம்பவத்துக்கு காரணமான அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

குதிரை பேர அச்சம்: 8 எம்எல்ஏ-க்களை கர்நாடகாவுக்கு மாற்றியது ஒடிசா காங்கிரஸ்!
சனி 14, மார்ச் 2026 12:50:01 PM (IST)

தமிழகத்தில் பெண்களுக்குப் பாதுகாப்பில்லாத சூழல்: மாநிலங்களவையில் குரல் எழுப்பிய அ.தி.மு.க.!
சனி 14, மார்ச் 2026 8:51:29 AM (IST)

மாதவிடாய் கால ஊதியத்துடன் கூடிய விடுப்பு: மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்!
வெள்ளி 13, மார்ச் 2026 5:00:23 PM (IST)

தமிழக டிஜிபி நியமனம்: மார்ச் 20-ல் ஆலோசனைக் கூட்டம் - யுபிஎஸ்சிக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு
வெள்ளி 13, மார்ச் 2026 12:23:23 PM (IST)

ஜம்முவில் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா மீது துப்பாக்கிச் சூடு முயற்சி - முதியவர் கைது!
வெள்ளி 13, மார்ச் 2026 8:49:29 AM (IST)

மேற்கு வங்கத்தின் 22-வது ஆளுநராக ஆர்.என். ரவி பதவியேற்பு: மம்தா பானர்ஜி வாழ்த்து!
வியாழன் 12, மார்ச் 2026 5:17:05 PM (IST)

