» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ஜம்முவில் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா மீது துப்பாக்கிச் சூடு முயற்சி - முதியவர் கைது!

வெள்ளி 13, மார்ச் 2026 8:49:29 AM (IST)



ஜம்முவில் திருமண விழா ஒன்றில், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வரும் தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவருமான பரூக் அப்துல்லாவைத் துப்பாக்கியால் சுட்டுக் கொல்ல முயன்ற முதியவர் ஒருவரை போலீசார் கைது செய்தனர். நல்வாய்ப்பாக பரூக் அப்துல்லா காயமின்றி உயிர் தப்பினார்.

ஜம்முவின் கிரேட்டர் கைலாஷ் பகுதியில், தேசிய மாநாட்டுக் கட்சி நிர்வாகி பி.எஸ்.சவுகான் மகனின் திருமண விழா நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. இதில் பரூக் அப்துல்லா, துணை முதல்வர் சுரிந்தர் சவுத்ரி மற்றும் முதல்வரின் ஆலோசகர் நசிர் அஸ்லம் வானி ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சி முடிந்து பரூக் அப்துல்லா மண்டபத்தை விட்டு வெளியே வந்தபோது, பின்னால் நெருங்கி வந்த ஒரு நபர் திடீரெனத் தனது கைத்துப்பாக்கியால் அவரை நோக்கிக் குறிவைத்துச் சுட்டார்.

துப்பாக்கிச் சத்தம் கேட்டவுடன் பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார் துரிதமாகச் செயல்பட்டனர். அங்கிருந்த இன்ஸ்பெக்டர் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் அந்த நபரைத் தரையோடு அழுத்திப் பிடித்துக் கட்டுப்படுத்தினர். இலக்கு தவறியதால் பரூக் அப்துல்லா மீதோ அல்லது அங்கிருந்த மற்றவர்கள் மீதோ குண்டு பாயவில்லை.

கைது செய்யப்பட்ட நபர் புரானி மண்டி பகுதியைச் சேர்ந்த கமல்சிங் ஜம்வால் (63) என்பது தெரியவந்தது. போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் சில அதிர்ச்சித் தகவல்கள் கிடைத்துள்ளன: கமல்சிங் மதுபோதையில் இருந்தார். அவர் பயன்படுத்தியது உரிமம் பெற்ற துப்பாக்கி ஆகும்.பரூக் அப்துல்லாவைக் கொலை செய்ய கடந்த 20 ஆண்டுகளாகத் தான் காத்திருந்ததாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா தனது கவலையைத் தெரிவித்துள்ளார். 'இசட் பிளஸ்' (Z+) பாதுகாப்பில் உள்ள ஒரு முன்னாள் முதல்வர் அருகே ஆயுதத்துடன் ஒருவர் எப்படிச் செல்ல முடிந்தது? என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

துணை முதல்வர் சுரிந்தர் சவுத்ரியும் இச்சம்பவத்தைக் கண்டித்ததுடன், இது ஒரு மிகப்பெரிய பாதுகாப்பு குறைபாடு என்று சாடியுள்ளார். இச்சம்பவம் குறித்து ஜம்மு போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory