» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

சிறு நகைக்கடன்களுக்கான கட்டுப்பாடுகளை தளர்த்த ரிசர்வ் வங்கிக்கு மத்திய அரசு பரிந்துரை

வெள்ளி 30, மே 2025 12:07:50 PM (IST)



ரூ.2 லட்சத்திற்கும் குறைவாக சிறு நகை கடன் வாங்குபவர்கள் பாதிக்கப்படாமல் இருக்க கட்டுப்பாடுகளை தளர்த்துமாறு ரிசர்வ் வங்கிக்கு மத்திய அரசு பரிந்துரை செய்துள்ளது. 

இந்தியாவில் வங்கிகளுக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் 30 ஆம் தேதி ரிசர்வ் வங்கியில் இருந்து சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. ரிசர்வ் வங்கியின் முதன்மை பொது மேலாளர் தருண் சிங் அனுப்பிய அந்தச் சுற்றறிக்கையில் தங்க நகைக்கடனில் முறைகேடு நடப்பதாகவும் தங்க நகைகளை அடமானம் வைத்து கடன் பெறுவதில் ஒழுங்கற்ற நடைமுறைகள் பின்பற்றப்படுவதாகவும் தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில் தங்க நகைக்கடன் வழங்குவதில் வங்கிகளுக்கான புதிய வரைவு விதிமுறைகளை இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டது மேலும் நகைக்கடனில் முறைகேடு நடப்பதை தடுக்கும் வகையில் நகை வாங்கிய ரசீதைச் சமர்ப்பிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட புதிய விதிகள் கொண்டு வரப்பட உள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

வங்கிகளில் நகைகளை அடகு வைப்பவர்கள், ஆண்டுதோறும் வட்டியை மட்டுமே செலுத்தி, மறு அடகு வைக்கலாம் என்றிருந்த நிலையை மாற்றி, அசலுடன் வட்டியையும் சேர்த்து செலுத்த வேண்டும் என்று ரிசர்வ் வங்கி புதிய வழிகாட்டு நெறிமுறையைக் கொண்டு வந்தது. இந்த புதிய விதிமுறைகளுக்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. அவசர தேவைகளுக்காக வங்கியில் நகைகளை வைத்து கடன் பெறுபவர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாவார்கள் என கவலை தெரிவித்தனர்.

இந்த நிலையில், சிறு நகைக்கடன்களுக்கான கட்டுப்பாடுகளை தளர்த்த ரிசர்வ் வங்கிக்கு மத்திய அரசு பரிந்துரை செய்துள்ளது. அதாவது, ரூ.2 லட்சத்திற்கும் குறைவாக கடன் வாங்குவோருக்கு புதிய விதிகளில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்; புதிய விதிமுறைகளை அடுத்த ஆண்டு ஜனவரி முதல் செயல்படுத்தலாம் எனத்தெரிவித்துள்ளது. நகைக்கடன் நிறுவனங்கள், பொதுமக்களிடம் இருந்து பெற்ற கருத்துக்களின் அடிப்படையில் விதிகளை தளர்த்த மத்திய நிதி அமைச்சகம் ரிசர்வ் வங்கிக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory