» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

மனைவியின் அஸ்தியைக் கரைக்க வந்தவர் விமான விபத்தில் பலி: லண்டனில் குழந்தைகள் தவிப்பு!

வெள்ளி 13, ஜூன் 2025 3:29:14 PM (IST)



மனைவியின் அஸ்தியை நர்மதை ஆற்றில் கரைக்க லண்டனில் இருந்து வந்த அர்ஜுன் பட்டோலியா, இறுதிச் சடங்குகளை செய்து முடித்துவிட்டு லண்டன் திரும்பும்போது விமான விபத்தில் பலியாகியுள்ளார்.

மனைவியின் இறுதி ஆசையை நிறைவேற்றிவிட்டு லண்டன் திரும்பும்போது ஏர் இந்தியா விமான விபத்தில் சிக்கி அவரும் பலியான நிலையில் அவரது இரண்டு மகள்களும் தந்தை வருவார் என லண்டனில் காத்திருக்கிறார்கள். தாயை ஒரு வாரத்துக்கு முன்பு இழந்து, தந்தையையும் நேற்று இழந்த நிலையில், யார் அவர்களுக்கு ஆறுதல் சொல்வார்கள் என்பது தெரியவில்லை.

லண்டனில், அர்ஜூன் தனது மனைவி பாரதிபென் மற்றும் இரண்டு மகள்களுடன் வாழ்ந்து வந்த நிலையில், ஏழு நாள்களுக்கு முன்புதான் பாரதி பென் உயிரிழந்துள்ளார். சிகிச்சையில் இருந்து வந்த பாரதி பென், தான் உயிரிழந்துவிட்டால், எனது அஸ்தியை இந்தியாவில் உள்ள சொந்த ஊருக்குக் கொண்டு சென்று அங்குள்ள ஆற்றில் கரைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

அவரது கடைசி ஆசையை நிறைவேற்ற பாரதி பென் அஸ்தியுடன் இந்தியா வந்து, உள்ளூர் ஆற்றில் கரைத்துவிட்டு, இந்தியாவிலிருந்து லண்டன் திரும்ப ஏர் இந்தியா விமானத்தில் ஏறிய அர்ஜூன், அகமதாபாத் விமான விபத்தில் பலியான 241 பயணிகளில் ஒருவர் என்ற தகவல் கிடைத்துள்ளது.

அர்ஜூனுக்கு 8 மற்றும் 4 வயதில் இரண்டு மகள்கள் இருந்த நிலையில், தாயின் அஸ்தியைக் கொண்டு சென்ற தந்தையும் விமான விபத்தில் உயிரிந்தார். பெற்றோரை இழந்து லண்டனில் தவிக்கும் மகள்களின் நிலை சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

லண்டனில் குடியேறும் கனவு சிதைந்தது!



அகமதாபாத் விமான விபத்தில் உதய்ப்பூரைச் சேர்ந்த மருத்துவ தம்பதி மற்றும் அவர்களது மூன்று குழந்தைகள் பலியாகினர்.

அவர்களில் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவைச் சேர்ந்த மருத்துவர் பிரதீக் ஜோஷி, அவரது மனைவியும் மருத்துவருமான கோமி வியாஸ் மற்றும் 3 குழந்தைகளும் அடங்குவர். இவர்கள் விமானத்துக்குள் அமர்ந்தபடி, சிரிப்புடன் எடுத்த புகைப்படம் இணையத்தில் பரவி கண்போரை கலங்கடித்து வருகின்றது.

பன்ஸ்வாராவரைச் சேர்ந்த மருத்துவர் பிரதீக் ஜோஷி, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னதாக லண்டனுக்குச் சென்று தனது மருத்துவப் பணியைத் தொடர்ந்து வந்தார். தற்போது நீண்ட முயற்சிகளுக்கு பிறகு, தனது மனைவி மற்றும் மூன்று குழந்தைகளையும் (ஒரு பெண், இரண்டு ஆண் குழந்தைகள்) லண்டனுக்கு அழைத்துச் சென்று குடும்பத்தோடு குடியேற திட்டமிட்டிருந்தார்.

லண்டனில் வீட்டை ஏற்பாடு செய்ததுடன், குழந்தைகளின் கல்விக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்துவிட்டு, அவர்களை அழைத்துச் செல்வதற்காக இந்தியாவுக்கு ஒரு மாதத்துக்கு முன்னதாகவே வந்துள்ளார். மேலும், லண்டனில் குடியேறுவதற்கு தேவையான ஆடைகள், வீட்டு உபயோகப் பொருள்கள், குழந்தைகளுக்கு தேவையானவற்றை வாங்கி பேக்கிங் செய்துள்ளனர்.

பிரதீக்கின் மனைவி கோமி வியாஸ், உதய்ப்பூர் மருத்துவக் கல்லூரியில் மருத்துவராகப் பணிபுரிந்து வந்த நிலையில், லண்டனில் குடியேறுவதற்கு வசதியாக வேலையை ராஜிநாமா செய்துள்ளார். இரண்டு நாள்களுக்கு முன்னதாக தனது நண்பர்களை சந்தித்த கோமி, லண்டன் செல்வது குறித்தும் அங்கு பணிபுரியப் போவது குறித்தும் மிக மகிழ்ச்சியுடன் பேசியிருக்கிறார்.

இந்த நிலையில், பன்ஸ்வாராவிலிருந்து அகமதாபாத்துக்கு வந்த பிரதீக் - கோமி மற்றும் 3 குழந்தைகள், லண்டன் புறப்பட்ட விமானத்தில் தங்களின் ஆயிரமாயிரம் கனவுகள் நிறைவேறப்போகிறது என்று நினைத்துத்தான் ஏறியிருக்கிறார்கள். மூன்று குழந்தைகள் ஒரு புறத்திலும், பிரதீக் - கோமி அருகிலிருந்த இருக்கைகளிலும் அமர்ந்துள்ளனர்.

இந்தியாவைவிட்டு பிரிந்து, புதிய மண்ணில் புதிய வாழ்க்கையைத் தேடிச் செல்வதற்கான நினைவு பொக்கிஷமாக 5 பேரும் சிரித்தபடி செல்ஃபி ஒன்றை எடுத்துள்ளனர். அதனை குடும்பத்தாருக்கு அனுப்பியிருந்த நிலையில், அதுவே அவர்களது கடைசி செல்ஃபியாக மாறியிருக்கிறது. விமானம் புறப்பட்ட சில நொடிகளில், அவர்களின் கனவு இந்தியாவிலேயே எரிந்து நாசமானது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory