» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
மருத்துவக் கல்லூரி மீது விமானம் மோதிய விபத்து : உயிரிழப்பு 274 ஆக உயர்வு
சனி 14, ஜூன் 2025 12:47:37 PM (IST)
ஆமதாபாத் விமான விபத்தில் உயிரிழப்பு 274 ஆக உயர்ந்துள்ளது. விமானம் மருத்துவக் கல்லூரி மீது மோதியதில் மாணவர்கள் 10 பேர் உள்பட மொத்தம் 33 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது.
ஆமதாபாத் சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து லண்டனுக்கு ஏர் இந்தியாவுக்கு சொந்தமான விமானம் ஒன்று நேற்று முன்தினம் மதியம் புறப்பட்டது. அந்த விமானத்தில் இந்தியா, இங்கிலாந்து, கனடா மற்றும் போர்ச்சுக்கல் நாடுகளை சேர்ந்த 230 பயணிகள் மற்றும் 2 விமானிகள், 10 பணியாளர்கள் என 242 பேர் இருந்தனர்.
ஓடு பாதையில் இருந்து விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் கட்டுப்பாட்டை இழந்தது. இதையடுத்து அவசர கால அழைப்பை விடுத்த விமானி, அந்த விமானத்தை விமான நிலையத்தின் அருகில் இருந்த மேகனிநகர் பகுதியில் இருந்த குதிரைப்பந்தய மைதானத்தில் இறக்க முயன்றார். அதற்குள் கட்டுப்பாட்டை இழந்த அந்த விமானம், அந்த பகுதியில் இருந்த பி.ஜே. மருத்துவக்கல்லூரி விடுதி கட்டிடத்தில் விழுந்து, வெடித்து சிதறியது.
இந்த கோர விபத்தில் விமானத்தில் இருந்த 241 பேரும், மருத்துவக்கல்லூரி விடுதிக்கட்டிடத்தில் இருந்த மருத்துவ மாணவர்கள் மற்றும் அந்த மருத்துவக்கல்லூரி வளாகத்தில் இருந்த 19 பேர் என 265 பேர் உடல் கருகி உயிரிழந்ததாக தகவல் வெளியாகி இருந்தது. அவர்களில் குஜராத் மாநில முன்னாள் முதல்-மந்திரி விஜய் ரூபானியும் ஒருவர்.
பலியான பலரது உடல் அடையாளம் காணமுடியாத நிலையில் உள்ளதால், உடல்களை அடையாளம் காண்பதற்கு மரபணு பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. பரிசோதனை முடிந்து 6 பேரின் உடல்கள் அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்நிலையில் ஆமதாபாத் விமான விபத்தில் பலி எண்ணிக்கை தற்போது 274 ஆக உயர்ந்துள்ளது. ஏற்கனவே விமானத்தில் பயணித்த 241 பேர் உயிரிழந்த நிலையில், மருத்துவக் கல்லூரி மீது மோதியதில் மாணவர்கள் 10 பேர் உள்பட மொத்தம் 33 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது. இதற்கிடையே விமானம் விழுந்த கட்டிடத்தின் ஒரு பகுதியில் கிடந்த விமானத்தின் கருப்பு பெட்டியை பாதுகாப்பு படையினர் நேற்று மீட்டனர்.
இதில் பதிவாகி உள்ள விவரங்களை ஆய்வு செய்தால்தான், விமானத்தில் கடைசி நேரத்தில் என்ன நடந்தது என்ற விவரம் தெரியவரும். அப்போதுதான் விபத்துக்கான காரணமும் தெளிவாகும் என்று கூறப்படுகிறது. விமான விபத்து குறித்து விமான விபத்து புலனாய்வுப் பணியகம் ஏற்கனவே விசாரணையைத் தொடங்கிவிட்டது. உள்ளூர் போலீசாரும் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்தநிலையில் தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) அதிகாரிகளும், பிற மத்திய நிறுவனங்களும் விசாரணையில் இறங்கி உள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நீட் தேர்வு முடிவுகள் வெளியீடு: தமிழகத்தில் 76,181 மாணவ, மாணவிகள் தேர்ச்சி!
சனி 14, ஜூன் 2025 3:44:23 PM (IST)

விமான விபத்தில் முன்னாள் முதல்வர் உயிரிழப்பு: குடும்பத்தினரை சந்தித்து பிரதமர் மோடி ஆறுதல்!
வெள்ளி 13, ஜூன் 2025 3:53:11 PM (IST)

மனைவியின் அஸ்தியைக் கரைக்க வந்தவர் விமான விபத்தில் பலி: லண்டனில் குழந்தைகள் தவிப்பு!
வெள்ளி 13, ஜூன் 2025 3:29:14 PM (IST)

விமான விபத்தில் இருந்து தப்பியது எப்படி? உயிர் பிழைத்த ஒரே பயணி பேட்டி!
வெள்ளி 13, ஜூன் 2025 3:16:36 PM (IST)

விமான விபத்துக்கு தார்மீக பொறுப்பேற்று மோடி, அமித் ஷா பதவி விலக வேண்டும்: சுப்பிரமணியன் சுவாமி
வெள்ளி 13, ஜூன் 2025 11:00:47 AM (IST)

ஆமதாபாத் விமான விபத்து: மீட்பு பணிகளை பிரதமர் மோடி ஆய்வு!
வெள்ளி 13, ஜூன் 2025 10:17:24 AM (IST)
