» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
அமெரிக்காவுக்கு பார்சல் சேவை நிறுத்தம்: நாளை முதல் அமலுக்கு வருவதாக இந்தியா அதிரடி அறிவிப்பு
ஞாயிறு 24, ஆகஸ்ட் 2025 10:22:57 AM (IST)
அமெரிக்க சுங்கத்துறை வெளியிட்ட புதிய விதிமுறைகளால், அந்த நாட்டுக்கு ‘பார்சல்’ சேவையை நாளை (திங்கட்கிழமை) முதல் தற்காலிகமாக நிறுத்துவதாக இந்தியா அதிரடியாக அறிவித்துள்ளது.
ரஷியாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்திய ெபாருட்களுக்கு கூடுதலாக 50 சதவீதம் வரிவிதிக்கப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவித்தார். இதற்கு இந்தியா கடும் ஆட்சேபத்தை தெரிவித்தது.
இந்தநிலையில் கடந்த மாதம் (ஜூலை) 30-ந்தேதி அமெரிக்கா வெளியிட்ட மற்றொரு அறிவிப்பில், 100 அமெரிக்க டாலர்களுக்கு மேலான பொருட்கள் வருகிற 29-ந்தேதி முதல் அமெரிக்காவில் சுங்க வரிகளுக்கு உட்பட்டவை என்று கூறப்பட்டு இருந்தது.
அதாவது அமெரிக்காவுக்கு அனுப்பப்படும் சுமார் ரூ.70 ஆயிரம் (800 டாலர்) வரையிலான சரக்குகளுக்கு வழங்கப்பட்டு வந்த வரிவிலக்கு ரத்து செய்யப்படுவதாகவும், 29-ந்தேதி முதல் அனைத்து தபால் பொருட்களுக்கும் அதன் மதிப்புக்கு ஏற்றவாறு கட்டணம் வசூலிக்கப்படும். அதே நேரம் சுமார் ரூ.9 ஆயிரம் மதிப்புள்ள (100 டாலர்) பொருட்களுக்கு மட்டுமே வரிவிலக்கு வழங்கப்படும் என்று தெரிவித்து இருந்தது.
இதையடுத்து அமெரிக்க சுங்கத்துறை அதிகாரிகளால் அங்கீகரிக்கப்படாத நிறுவனங்களின் தபால் பார்சல்களை அமெரிக்க விமானங்களில் ஏற்றிச்செல்ல நாளை (திங்கட்கிழமை) முதல் அனுமதி இல்லை என்று அந்த நாட்டு சுங்கத்துறை அறிவித்தது.
அமெரிக்க சுங்கத்துறை வெளியிட்ட இந்த புதிய விதிமுறைகள் தெளிவற்ற முறையில் இருப்பதால் அமெரிக்காவுக்கு பார்சல் சேவைகளை நாளை முதல் தற்காலிகமாக நிறுத்தப்படும் என்று இந்தியா அதிரடியாக அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக இந்திய தகவல் தொடர்பு அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அமெரிக்க சுங்கத் துறையால் வெளியிடப்பட்ட புதிய விதிமுறைகளில் தெளிவு இல்லாததால், அமெரிக்காவுக்கு செல்லும் விமான நிறுவனங்கள் பொருட்களை எடுத்துச்செல்ல மறுத்துள்ளதால் அமெரிக்காவுக்கு தபால் மூலம் அனுப்பப்படும் அனைத்து வகையான ‘பார்சல்’ சேவைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகிறது.
இருப்பினும், சுமார் ரூ.9 ஆயிரம் (100 டாலர்) வரையிலான கடிதங்கள், ஆவணங்கள் மற்றும் பரிசுப் பொருட்களுக்கான சேவைகள் தொடரும். விலக்கு அளிக்கப்பட்ட பிரிவுகள் அமெரிக்க சுங்கத்துறையிடம் தெளிவான அறிக்கை பெற்று அமெரிக்காவிற்கு அனுப்பப்படும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து அமெரிக்காவுக்கு பார்சல்களை அனுப்ப ஏற்கனவே முன்பதிவு செய்து இருந்தவர்களுக்கு தபால் கட்டணம் திரும்ப வழங்கப்படும் என்று தபால்துறை அறிவித்துள்ளது.
இதுதொடர்பான அறிவிப்பில், சூழ்நிலைகள் காரணமாக அமெரிக்காவிற்கு அனுப்ப முடியாத பொருட்களை ஏற்கனவே முன்பதிவு செய்த வாடிக்கையாளர்கள் தபால் கட்டணத்தைத் திரும்ப பெறலாம். வாடிக்கையாளர்களுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு தபால் துறை வருத்தம் தெரிவிப்பதோடு, அமெரிக்காவிற்கு முழு சேவைகளையும் விரைவில் தொடங்க அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்படுகின்றன என்று உறுதியளிக்கிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வீட்டு உபயோகப்பொருட்கள் அதிரடி வரிகுறைப்பு: ஜிஎஸ்டி குறைக்கப்பட்ட பொருட்களின் பட்டியல்
வியாழன் 4, செப்டம்பர் 2025 10:59:36 AM (IST)

வங்கியில் கொள்ளைபோன ரூ.5 கோடி நகை, பணம் மீட்பு: ஊழியர் உள்பட 5 பேர் கைது
வியாழன் 4, செப்டம்பர் 2025 8:51:08 AM (IST)

தெலங்கானா சட்டமேலவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் கவிதா!
புதன் 3, செப்டம்பர் 2025 5:25:09 PM (IST)

சிங்கப்பூர் பிரதமர் இந்தியா வருகை: மகாத்மா காந்தி நினைவிடத்தில் அஞ்சலி!
புதன் 3, செப்டம்பர் 2025 5:20:16 PM (IST)

பாரதிய ராஷ்டிர சமிதி கட்சியில் இருந்து மகள் கவிதாவை நீக்கிய சந்திரசேகர் ராவ்!
செவ்வாய் 2, செப்டம்பர் 2025 4:02:50 PM (IST)

ஆசிரியர்களுக்கு டெட் தகுதி தேர்வு கட்டாயம் : உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
செவ்வாய் 2, செப்டம்பர் 2025 11:53:18 AM (IST)
