» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
இந்தியாவின் விண்வெளிப் பயணத் திட்டத்தில் முக்கிய மைல்கல் : ககன்யான் சோதனை வெற்றி!
திங்கள் 6, ஜூலை 2026 12:17:52 PM (IST)

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன விஞ்ஞானிகள் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் நோக்கில் தயாரித்து வரும் 'ககன்யான்' திட்டத்தின் மிக முக்கியமான தரைத்தள சோதனையை நேற்று வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளனர்.
பிரதமர் மோடி கடந்த 2018-ஆம் ஆண்டு அறிவித்த இந்த ககன்யான் திட்டத்தின்படி, 3 பேர் கொண்ட குழுவினர் பூமியில் இருந்து 400 கி.மீ. உயரத்திலுள்ள சுற்றுப்பாதைக்கு 3 நாட்கள் பயணமாக அனுப்பி வைக்கப்பட உள்ளனர். பின்னர் அவர்களை இந்தியக் கடற்பரப்பில் பாதுகாப்பாகத் தரையிறக்குவதன் மூலம் இந்தியாவின் விண்வெளிப் பயணத்திறனை நிரூபிப்பதே இதன் முதன்மை நோக்கமாகும்.
இத்திட்டத்திற்காக இஸ்ரோ விஞ்ஞானிகள் இதுவரை 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சோதனைகளை மேற்கொண்டுள்ள நிலையில், தற்போது 85 சதவீத சோதனைகள் முழுமையாக நிறைவடைந்துள்ளன. இந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஆளில்லா ராக்கெட்டில் 'வயோமித்ரா' என்ற இயந்திர மனிதனை (ரோபோ) விண்வெளிக்கு அனுப்பி சோதனை நடத்தப்பட உள்ளது. அதனைத் தொடர்ந்து மேலும் 2 ஆளில்லா ராக்கெட்டுகளை அனுப்பவும், அடுத்த ஆண்டு (2027) மார்ச் மாதம் மனிதர்களை விண்ணுக்கு அனுப்பவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த தொடர் சோதனைகளின் ஒரு பகுதியாக, துணை சுற்றுப்பாதை ராக்கெட் ககன்யான் குழு கலனுக்கான முக்கிய அமைப்புகளை, குறிப்பாக விண்கலத்தின் வேகத்தைக் குறைக்கும் பாராசூட் அமைப்பைச் சரிபார்ப்பதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு பிரத்யேக திட மோட்டாரின் முதல் தரைத்தள சோதனை, ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டா சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் நேற்று வெற்றிகரமாக நடத்தப்பட்டது.
இதுகுறித்து இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறும்போது, "ககன்யான் சோதனைப் பயணங்களை நடத்துவதற்கு இந்த திட மோட்டார் ஒரு மிக முக்கிய அங்கமாகும். குழுவினர் பயணிக்கும் கலம் தரையில் இருந்து 10 முதல் 17 கி.மீ. உயரத்துக்குக் கொண்டு செல்லப்பட்டு, விண்கலத்தில் இருந்து பிரிக்கப்படும். அது கடலில் விழுவதற்கு முன்பு, கலத்தின் வேகத்தைக் குறைப்பதற்காக 10 பாராசூட்டுகள் தொடர்ச்சியாக விரிக்கப்படும்.
இதற்காக உருவாக்கப்பட்ட ஒருங்கிணைந்த பாராசூட் சோதனைத் தளத்தில் நடத்தப்பட்ட இந்த சோதனையின்போது, மோட்டாரின் செயல்திறன் அளவுகள் அனைத்தும் நாம் எதிர்பார்த்தபடியே துல்லியமாக இருந்தது. இதன் மூலம் இந்த சோதனை முழுமையாக வெற்றி பெற்றுள்ளது" என்று விஞ்ஞானிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஜோத்பூர் விமான நிலையத்தில் ₹480 கோடி புதிய முனையக் கட்டிடம்: பிரதமர் மோடி திறந்து வைத்தார்!
சனி 4, ஜூலை 2026 5:14:30 PM (IST)

வாக்கு, சீட், காணிக்கைத் திருட்டு நடக்கும் மூன்று இன்ஜின் அரசு இது: பாஜகவைச் சாடும் காங்கிரஸ்!
சனி 4, ஜூலை 2026 4:35:46 PM (IST)

கரூர் துயர சம்பவம்: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேச்சுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் திமுக மனு!
வெள்ளி 3, ஜூலை 2026 4:26:43 PM (IST)

எத்தனால் கலப்பால் மைலேஜ் சற்றுக் குறைய வாய்ப்பு : மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஒப்புதல்!
வெள்ளி 3, ஜூலை 2026 11:52:24 AM (IST)

இந்தியாவில் ஜப்பான் நிறுவனங்கள் ரூ. 1.18 லட்சம் கோடி முதலீடு: சானே டகாயிச்சி உறுதி!
வியாழன் 2, ஜூலை 2026 5:00:33 PM (IST)

பீகார், குஜராத் உள்பட 3 மாநிலங்களில் 30-ம் தேதி இடைத்தேர்தல் : தமிழகத்திற்கு அறிவிப்பு இல்லை
வியாழன் 2, ஜூலை 2026 4:00:09 PM (IST)


