» செய்திகள் - விளையாட்டு » உலகம்
ட்ரம்ப் அறிவிப்புக்கு வரவேற்பு: வரி விதிப்பை 90 நாட்களுக்கு ஐரோப்பிய யூனியன் நிறுத்தி வைப்பு
வெள்ளி 11, ஏப்ரல் 2025 4:59:58 PM (IST)

பரஸ்பர வரி விதிப்பை நிறுத்திய அமெரிக்காவின் செயலை வரவேற்கும் விதமாக பதிலடி வரி விதிப்பு நடவடிக்கையை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் நிர்வாக ஆணையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் நேற்று கூறியதாவது: அமெரிக்க அதிபர் பரஸ்பர வரி விதிப்பை 90 நாட்களுக்கு நிறுத்தி வைத்ததற்கு இணையாக நாங்களும் பதிலடி வரி விதிப்பு நடவடிக்கைகள் எடுப்பதை ஒத்திவைக்க முடிவு செய்துள்ளோம். அதன்படி, 20.9 பில்லியன் யூரோக்கள் (23 பில்லியன் டாலர்) அமெரிக்கப் பொருட்களின் மீதான புதிய வரிகள் 90 நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்படுகிறது. ஏனெனில், அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு ஒரு வாய்ப்பை வழங்க விரும்புகிறோம். இந்த பேச்சுவார்த்தைகள் திருப்திகரமாக இல்லை என்றார், எங்கள் எதிர் நடவடிக்கைகள் தொடங்கும்.
பரஸ்பர வரி விதிப்பை 90 நாட்கள் நிறுத்தி வைக்கும் அதிபர் ட்ரம்பின் முடிவு வரவேற்புக்குரியது. இது உலகப் பொருளாதாரத்தை நிலைப்படுத்துவதற்கான ஒரு முக்கியமான படியாகும். இவ்வாறு உர்சுலா தெரிவித்துள்ளார்.
வரிவிதிப்பு நிறுத்தம் குறித்து அதிபர் ட்ரம்ப் நேற்று முன்தினம் கூறியுள்ளதாவது: அமெரிக்க பொருட்களின் இறக்குமதிக்கு அதிக அளவில் வரி விதிக்கும் நாடுகளுக்கான பரஸ்பர வரி விதிப்பு அறிவிப்பை 90 நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 75-க்கும் மேற்பட்ட நாடுகள் பரஸ்பர வரி விதிப்பு தொடர்பாக அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த விரும்புவதாக தெரியவந்ததையடுத்து இந்த நிலைப்பாட்டை எடுத்துள்ளேன். மேலும், இந்த நாடுகள் இதுவரை அமெரிக்காவின் நடவடிக்கைக்கு பதிலடி எதுவும் கொடுக்கவில்லை. இதனை கருத்தில் கொண்டு இந்த நிறுத்த காலத்தில் அந்த நாடுகளின் பொருட்களுக்கு அடிப்படையான 10% வரி மட்டுமே விதிக்கப்படும். ஐரோப்பிய ஒன்றியத்தின் வரி 20%-மாக இருக்கும்.
பரஸ்பர வரி நிறுத்தம் செய்துள்ள நாடுகளின் பட்டியலில் சீனா சேர்க்கப்படவில்லை. அந்த நாட்டுக்கான வரி விகிதம் 104% உயர்த்தப்பட்ட பிறகு சீனா அமெரிக்க பொருட்களுக்கான வரி விகிதத்தை 84%-மாக உயர்த்தி பதிலடி தந்தது. இதனால், சீனாவின் இறக்குமதி மீதான வரி விகிதம் மட்டும்125%-மாக உயர்த்தப்படுகிறது. இவ்வாறு ட்ரம்ப் கூறியுள்ளார். ட்ரம்ப்பின் இந்த முடிவு அமெரிக்கா மற்றும் சீனா இடையே ஏற்கெனவே உள்ள வர்த்தக போரின் தீவிரத்தை மேலும் அதிகப்படுத்தியுள்ளது.
இந்திய ஏற்றுமதியாளர்கள் மகிழ்ச்சி: இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கான பரஸ்பர வரி விதிப்பில் 90 நாள் நிறுத்தம் முக்கியமான வியூகத்தை வகுப்பதற்கான வாய்ப்பை இந்தியாவுக்கு வழங்கியுள்ளதாக ஏற்றுமதியாளர்கள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக, சீனாவுக்கு அப்பால் தங்களது உற்பத்தி தளங்களை அமைக்க விரும்பும் நிறுவனங்களிடமிருந்து உற்பத்தி முதலீடுகளை ஈர்ப்பதற்கானமுயற்சிகளை மத்திய அரசு விரைவுபடுத்த வேண்டும் என்று ஏற்றுமதியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இந்திய செல்லுலார் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் அசோசியேஷன் தலைவர் பங்கஜ் மொஹிந்த்ரூ கூறுகையில், ‘‘அமெரிக்காவின் அறிவிப்பால் வியட்நாம் போன்ற நாடுகள் பயனடைய தயார் நிலையில் உள்ளன. இதனை கருத்தில் கொண்டு, இந்தியா இந்த விவகாரத்தில் விரைவாகவும், தீவிரமாகவும் செயல்பட வேண்டும். அப்போதுதான் எலக்ட்ரானிக்ஸ் உள்ளிட்ட பல துறைகளில் கணிசமான முதலீடுகளை ஈர்க்க முடியும்” என்றார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மாஸ்கோ வரை பாயும் ஏவுகணைகளை உக்ரைனுக்கு வழங்குவேன்: ரஷியாவுக்கு டிரம்ப் மிரட்டல்!
செவ்வாய் 14, அக்டோபர் 2025 10:28:15 AM (IST)

2025ஆம் ஆண்டு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு 3 பேருக்கு பகிர்ந்தளிப்பு
திங்கள் 13, அக்டோபர் 2025 5:21:39 PM (IST)

வர்த்தக போரை விரும்பவில்லை; அமெரிக்காவின் மிரட்டலுக்கு பயப்பட மாட்டோம் - சீனா உறுதி
திங்கள் 13, அக்டோபர் 2025 12:02:17 PM (IST)

ராஜினாமா செய்த 4 நாட்களில் பிரான்ஸ் பிரதமராக செபாஸ்டியன் மீண்டும் நியமனம்
ஞாயிறு 12, அக்டோபர் 2025 11:24:27 AM (IST)

படைகள் வாபஸ் பெறப்பட்டன காசா போர்நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வந்தது
சனி 11, அக்டோபர் 2025 4:30:39 PM (IST)

இந்தியா-ஆஸ்திரேலியா இடையே பாதுகாப்பு ஒப்பந்தங்கள் : ராஜ்நாத் சிங் முன்னிலையில் கையெழுத்து
வெள்ளி 10, அக்டோபர் 2025 9:25:54 PM (IST)
