» செய்திகள் - விளையாட்டு » உலகம்
நேபாளத்தில் தொடர் போராட்டம் வன்முறை எதிரொலி: பிரதமர் ஷர்மா ஒலி ராஜினாமா
செவ்வாய் 9, செப்டம்பர் 2025 3:30:07 PM (IST)
நேபாளத்தில் நடைபெற்ற போராட்டம் வன்முறையாக மாறியதை அடுத்து, போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 19 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், அந்நாட்டின் பிரதமர் ஷர்மா ஒலி பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

இந்நிலையில், இரண்டாவது நாளாக இன்றும் போராட்டம் நடைபெற்றது. இதையடுத்து, ஷர்மா ஒலி அரசுக்கு அளித்து வரும் ஆதரவைத் திரும்பப் பெறுவது குறித்து நேபாள காங்கிரஸ் பரிசீலித்து வருவதாக தகவல் வெளியானது. நேபாள காங்கிரஸ் தலைவரான வேளாண் அமைச்சர் ராம் நாத் அதிகாரி, பிரதமர் கே.பி. ஒலி தலைமையிலான அரசாங்கத்தின் அடக்குமுறையைக் கண்டித்து தனது பதவியை ராஜினாமா செய்தார். நேற்று அரசாங்கம் போராட்டங்களைக் கையாண்டதற்கு தார்மீகப் பொறுப்பேற்று உள்துறை அமைச்சர் ரமேஷ் லேகாக் ராஜினாமா செய்தார்.
காத்மாண்டுவுக்கு அப்பாலும் போராட்டங்கள் விரிவடைந்ததால், பல நகரங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஊரடங்கு உத்தரவை மீறி போராட்டக்காரர்கள் பல இடங்களில் வன்முறையில் ஈடுபட்டனர். லால்பாண்டி நகராட்சி அலுவலகத்துக்கு தீ வைத்த போராட்டக்காரர்கள், பல இடங்களில் போலீஸ் வாகனங்கள் மீது கல்வீசி தாக்கினர்.
இந்நிலையில், தனது பதவியை ராஜினாமா செய்துள்ள பிரதமர் ஷர்மா ஒலி, பிரச்சினைக்குத் தீர்வு காணவும், அரசியல் ரீதியாக தீர்வுகள் முன்னெடுக்கப்படுவதற்கு உதவவும் பதவியை ராஜினாமா செய்துள்ளதாக கூறியுள்ளார்.
போராட்டங்கள் ஏற்படுத்திய விளைவு: கடந்த ஆண்டு செப்டம்பரில் நேபாள உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை தொடர்ந்து, சமூகவலைதள நிறுவனங்கள் பதிவு செய்யவும், குறைதீர்ப்பு அதிகாரியை நியமிக்கவும் ஏழு நாட்கள் அவகாசம் வழங்க நேபாள அமைச்சரவை கடந்த மாதம் முடிவு செய்தது. இந்த நிலையில், பதிவு செய்துகொள்ளாத பேஸ்புக், யூ டியூப், எக்ஸ் உள்ளிட்ட26 சமூக வலைதளங்களை கடந்த வெள்ளிக்கிழமை முடக்கி நேபாள அரசு நடவடிக்கை மேற்கொண்டது. ஆன்லைன் மோசடி மற்றும் பண மோசடி ஆகியவற்றை சுட்டிக்காட்டி இதேபோன்று, கடந்த ஜூலையில் டெலிகிராம் மெசேஜ் செயலியை நேபாள அரசு தடை செய்தது.
இந்த நிலையில், சமூக ஊடகங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்தும், ஆட்சியாளர்களின் ஊழலைக் கண்டித்தும் இளைஞர்கள் அதிக அளவில் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, சமூக ஊடகங்கள் மீது விதிக்கப்பட்ட தடையை நேபாள அரசு வாபஸ் பெற்றது. எனினும், ஊழல் எதிர்ப்பு போராட்டங்கள் தொடர்ந்தன. இதன் காரணமாக, நேபாள காங்கிரஸ் தனது ஆதரவை விலக்கிக் கொள்ள பரீசீலித்த நிலையில் பிரதமர் ஷர்மா ஒலி பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சார்லி கிர்க் கொலை: குற்றவாளி குறித்த தகவல் அளித்தால் ஒரு லட்சம் டாலர் சன்மானம்!
வெள்ளி 12, செப்டம்பர் 2025 12:37:14 PM (IST)

சார்லி கிர்க்கை சுட்டுக் கொன்றவரை அரசாங்கம் கண்டுபிடித்து தண்டிக்கும் : டிரம்ப் ஆவேசம்!!
வியாழன் 11, செப்டம்பர் 2025 12:38:45 PM (IST)

நேபாளத்தில் தொடரும் வன்முறை: வணிக வளாகங்களை கொள்ளையடிக்கும் பொதுமக்கள்!
புதன் 10, செப்டம்பர் 2025 5:25:44 PM (IST)

இந்தியாவுடன் வர்த்தகத் தடைகளைத் தீர்க்க டிரம்ப் விருப்பம்: பிரதமர் மோடி வரவேற்பு!
புதன் 10, செப்டம்பர் 2025 11:31:53 AM (IST)

ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு அமெரிக்கா கடும் வரி விதிப்பு: ஜெலன்ஸ்கி வரவேற்பு
திங்கள் 8, செப்டம்பர் 2025 5:44:39 PM (IST)

சமூக வலைதளங்களுக்கு தடை: நேபாளத்தில் போராட்டம் - துப்பாக்கி சூட்டில் 9பேர் பலி!
திங்கள் 8, செப்டம்பர் 2025 4:11:10 PM (IST)
