» செய்திகள் - விளையாட்டு » உலகம்
இஸ்ரேல்-ஹமாஸ் போரை நிறுத்த டிரம்பின் 21 அம்ச அமைதித் திட்டம்: முஸ்லிம் நாடுகள் ஆதரவு!
செவ்வாய் 30, செப்டம்பர் 2025 5:01:26 PM (IST)
இஸ்ரேல்-ஹமாஸ் இடையே போரை நிறுத்த 21 அம்ச அமைதித் திட்டத்தை அமெரிக்கா அறிவித்துள்ளது. இதற்கு பாகிஸ்தான் உள்ளிட்ட முஸ்லிம் நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
காசா மீது ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில், பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்பட 65 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டு உள்ளனர். போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தலைமையில் மத்தியஸ்தம் செய்யும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அமெரிக்காவுக்கு நேற்று சென்றார். காசா போரை இஸ்ரேல் தீவிரப்படுத்தி உள்ள சூழலில், இது பரபரப்பாக பார்க்கப்பட்டது. அப்போது, வெள்ளை மாளிகையின் வாசலுக்கு வந்த டிரம்ப், காரில் இருந்து வெளியே வந்த நெதன்யாகுவை கைகுலுக்கி வரவேற்றார்.
நடப்பு ஆண்டில் 4-வது முறையாக நெதன்யாகு அமெரிக்காவுக்கு சென்றுள்ளார். அவர், டிரம்பை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். வெள்ளை மாளிகையில் நடந்த இந்த பேச்சுவார்த்தையில் காசா போரை முடிவுக்கு கொண்டு வர டிரம்ப் சார்பில் தீவிர அழுத்தம் தரப்பட்டது. இதனால் காசா போர் விரைவில் முடிவுக்கு வருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் என தெரிகிறது.
எனினும், காசா மற்றும் மேற்கு கரை பகுதியை தன்வசம் எடுத்து கொள்ளும் முடிவில் நெதன்யாகு இருக்கிறார் என கூறப்படுகிறது. காசாவை வருங்காலத்தில் யார் நிர்வகிப்பது? என்பது பற்றியும் இந்த சந்திப்பில் ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. காசா விவகாரத்தில் அதிக நம்பிக்கையுடன் இருக்கிறேன் என செய்தியாளர்களிடம் பேசும்போது டிரம்ப் கூறினார்.
ஹமாஸிடமிருந்து பிணைக் கைதிகளை மீட்டு போரை முடிவுக்குக் கொண்டு வருவோம் என்று வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கடந்த வெள்ளிக்கிழமை தெரிவித்தார். மேலும், ஹமாஸ் பிணைக் கைதிகளை விடுவிக்க 48 மணி நேரம் கெடுவைவும் அமெரிக்கா விதித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் இஸ்ரேல், பாலஸ்தீனம் இடையே போரை நிறுத்த 21 அம்ச அமைதித் திட்டத்தையும் அமெரிக்கா தற்போது அறிவித்துள்ளது.
அமெரிக்கா அறிவித்துள்ள 21 அம்சத் திட்டத்தில் இடம்பெற்றுள்ள முக்கிய பிரிவுகள்: காசா பகுதி தீவிரவாதம் இல்லாத, அமைதியான மண்டலமாக மாற்றப்படும். காசா மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதே இதன் முக்கிய நோக்கம்.
இரு தரப்பும் இந்தத் திட்டத்தை ஒப்புக்கொண்டால், உடனடியாக மோதல்கள் நிறுத்தப்படும். இஸ்ரேல் தனது நடவடிக்கைகளை நிறுத்தி, காசாவிலிருந்து படிப்படியாக வெளியேறத் தொடங்கும். பாலஸ்தீனர்களை கொண்ட ஒரு குழுவைக் கொண்டு காசாவில் இடைக்கால நிர்வாகம் அமைக்கப்படும். அந்த அமைப்பே காசாவில் அன்றாட நிர்வாகத்தைக் கவனிக்கும்.
அமெரிக்காவின் தலைமையில் அரபு மற்றும் ஐரோப்பிய நாடுகளைக் கொண்ட ஒரு புதிய சர்வதேச குழு இதைக் கண்காணிக்கும். பாலஸ்தீனிய ஆணையம் தனது சீர்திருத்தத் திட்டத்தை முடிக்கும் வரை காசாவின் மறுசீரமைப்புக்கு நிதி திரட்டுவது இக்குழுவின் பணியாகும்.
இந்தத் திட்டத்துக்கு இஸ்ரேல் சம்மதம் தெரிவித்த 48 மணி நேரத்துக்குள், உயிருடன் உள்ள மற்றும் இறந்த அனைத்துப் பிணைக் கைதிகளும் இஸ்ரேல் வசம் ஒப்படைக்கப்படுவார்கள். போர் உடனடியாக நிறுத்தப்படும் என்பன போன்ற அம்சங்கள் இந்தப்பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
அதேநேரத்தில் பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்க இங்கிலாந்து உள்ளிட்ட சில நாடுகள் முடிவு செய்துள்ளன. அதற்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு ஒப்புக்கொள்ளவில்லை. இதை நாங்கள் ஒருபோதும் ஏற்கமாட்டோம் என்று அவர் அறிவித்துள்ளார். இதனிடையே டிரம்பின் காசா அமைதி திட்டத்திற்கு பாகிஸ்தான் உள்ளிட்ட முஸ்லிம் நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பாகிஸ்தானில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு: பள்ளிகளுக்கு 2 வாரம் விடுமுறை அறிவிப்பு!
செவ்வாய் 10, மார்ச் 2026 4:53:28 PM (IST)

ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
திங்கள் 9, மார்ச் 2026 11:38:21 AM (IST)

ஈரான் நிபந்தனையின்றி சரண் அடைய வேண்டும்: அமெரிக்க அதிபர் டிரம்ப் கடும் எச்சரிக்கை
ஞாயிறு 8, மார்ச் 2026 8:56:43 PM (IST)

வளைகுடா நாடுகளைத் தாக்க மாட்டோம்: ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான் உறுதி
சனி 7, மார்ச் 2026 5:53:56 PM (IST)

அமெரிக்காவிடம் இந்தியா கேள்வி கேட்க வேண்டும்! - ஈரானின் அதிரடி கோரிக்கை!
சனி 7, மார்ச் 2026 11:47:53 AM (IST)

ரஷியாவிடமிருந்து இந்தியா 30 நாள்கள் கச்சா எண்ணெய் வாங்க அமெரிக்கா அனுமதி!
வெள்ளி 6, மார்ச் 2026 12:17:23 PM (IST)


உண்மSep 30, 2025 - 09:51:03 PM | Posted IP 172.7*****