» செய்திகள் - விளையாட்டு » உலகம்

நேபாளத்தில் முன்னாள் பிரதமர் கைது: புதிய அரசு பதவியேற்ற 24 மணி நேரத்திற்குள் நடவடிக்கை!

ஞாயிறு 29, மார்ச் 2026 10:48:06 AM (IST)



நேபாளத்தில் கடந்த ஆண்டு இளைஞர்கள் நடத்திய போராட்டத்தின் போது ஏற்பட்ட வன்முறையில் 76 பேர் பலியான சம்பவத்திற்காக, முன்னாள் பிரதமர் சர்மா ஒலி மற்றும் முன்னாள் உள்துறை அமைச்சர் ரமேஷ் லேகாக் ஆகியோர் நேற்று அதிகாலை கைது செய்யப்பட்டனர்.

கடந்த ஆண்டு நேபாள அரசு 26 சமூக ஊடகங்களுக்குத் தடை விதித்தது. இதனை எதிர்த்து அந்நாட்டின் இளம் தலைமுறையினர் (Gen-Z) நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தத் தடை நீக்கப்பட்ட பின்னரும் போராட்டம் தீவிரமடைந்து வன்முறையாக மாறியது. போலீசாரின் துப்பாக்கிச் சூடு மற்றும் வன்முறைச் சம்பவங்களில் சுமார் 76 பேர் உயிரிழந்தனர். இந்த விவகாரத்தால் சர்மா ஒலியின் ஆட்சி கவிழ்ந்தது.

இந்த வன்முறை குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட நீதிபதி கவுரி பகதூர் கார்கி தலைமையிலான கமிஷன், முன்னாள் பிரதமர் சர்மா ஒலி மற்றும் உள்துறை அமைச்சர் ரமேஷ் லேகாக் ஆகியோரின் தவறான உத்தரவுகளே இத்தனை உயிரிழப்புகளுக்குக் காரணம் எனக் குற்றம் சாட்டியது.

சமீபத்தில் நடந்த தேர்தலில் வெற்றி பெற்று, காத்மாண்டு நகர மேயர் பாலேந்திர ஷா நேபாளத்தின் புதிய பிரதமராகப் பதவியேற்றார். அவர் பதவியேற்ற 24 மணி நேரத்திற்குள் நடந்த முதல் அமைச்சரவைக் கூட்டத்திலேயே, விசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டது.

கைது நடவடிக்கை: நேற்று அதிகாலை 5 மணியளவில் காத்மாண்டு அருகே உள்ள சர்மா ஒலியின் வீட்டை நூற்றுக்கணக்கான போலீசார் சுற்றி வளைத்து அவரைக் கைது செய்தனர். அதேபோல் முன்னாள் உள்துறை அமைச்சர் ரமேஷ் லேகாக் என்பவரும் அவரது இல்லத்தில் வைத்துக் கைது செய்யப்பட்டார்.

இந்தக் கைது நடவடிக்கையை அடுத்து சர்மா ஒலியின் ஆதரவாளர்கள் வீதிகளில் இறங்கிப் போராட்டம் நடத்தி வருவதால் நேபாளத்தில் பதற்றம் நிலவுகிறது. இது குறித்துத் தற்போதைய உள்துறை அமைச்சர் சுதன் குருங் கூறுகையில், "இது பழிவாங்கும் நடவடிக்கை அல்ல; சட்டத்தின் முன்னால் அனைவரும் சமம் என்பதற்கான நீதியின் தொடக்கம்" என்று தெரிவித்துள்ளார். கைதான இருவருக்கும் 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory