» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
குற்றாலத்தில் தை அமாவாசை தர்ப்பணம் : பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது!
வெள்ளி 9, பிப்ரவரி 2024 4:40:21 PM (IST)
குற்றாலத்தில் தை அமாவாசையை முன்னிட்டு தர்ப்பணம் செய்ய பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.
தை மாத அமாவாசையில் நீர் நிலைகளில் நீராடி தங்களின் மூதாதையர்களை நினைத்து வழிபாடு நடத்துவதும், தர்ப்பணம் செய்வதும் வழக்கம். மூதாதையர் ஆன்மா சாந்தி பெறவும், ஆன்மா புகலிடம் பெறவும் தை மற்றும் ஆடி மாத அமாவாசை தினத்தில் தர்ப்பணம் செய்து வருகின்றனர். இந்நிலையில், குற்றாலம் மெயின் அருவியில் தை அமாவாசையை முன்னிட்டு இன்று தர்ப்பணம் செய்ய பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.
அருவியில் மக்கள் புனித நீராடி, அப்பகுதியில் அமர்ந்திருந்த புரோகிதர்கள் மூலம் பொதுமக்கள் தங்களின் மூதாதையர்களுக்கு தர்ப்பணம் செய்தனர். புரோகிதர்கள் கொடுத்த எள், நீரை மெயின் அருவியில் இருந்து வெளியேறிய தண்ணீரில் விட்டு வழிபாடு நடத்தினர். தர்ப்பணம் முடிந்ததும் பொதுமக்கள் செண்பக விநாயகர் கோயில், குற்றாலநாதர் கோயிலுக்கு சென்று வழிபாடு நடத்தினர்.