» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
ஓட்டு போட வந்த முதியவருக்கு ஷாக் கொடுத்த தேர்தல் அதிகாரி: கோவில்பட்டியில் பரபரப்பு!!
வெள்ளி 19, ஏப்ரல் 2024 4:47:33 PM (IST)
கோவில்பட்டியில் ஓட்டு போட வந்த முதியவரை "நீங்க செத்துப் போயிட்டீங்க" என்று தேர்தல் அதிகாரி கூறியதாக சர்ச்சை எழுந்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சிந்தாமணி நகர் பகுதியை சேர்ந்தவர் மருதப்பன்(70). இவர் தனியார் திருமண மண்டபத்தில் வாட்ச்மேனாக பணியாற்றி வருகிறார். இவர் இன்று (ஏப்ரல் 19) புதுக்கிராமத்தில் உள்ள 192வது ஓட்டுச்சாவடி மையத்தில் அரசு கொடுத்த பூத் சிலிப்பினை கொண்டு தனது வாக்கினை செலுத்த சென்ற போது அங்கிருந்த தேர்தல் அதிகாரி நீங்கள் செத்துப் போய்விட்டதாக வாக்காளர் பட்டியலில் உள்ளது.
எனவே நீங்கள் வாக்களிக்க முடியாது என்று தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த முதியவர் மருதப்பன் அரசு தான் தனக்கு ஓட்டளிக்க பூத் சிலிப் வழங்கி உள்ளது. எப்படி நான் செத்துப் போயிட்டேன் ஓட்டு போட முடியாது என்று கூற முடியும் என அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் அந்த ஓட்டுச்சாவடியில் சிறிது நேரம் ஓட்டுப்பதிவு நிறுத்தப்பட்டது.
இதையடுத்து தேர்தல் அதிகாரி கோவில்பட்டி தாசில்தார் சரவணபெருமாளை தொடர்பு கொண்டு பிரச்னையை எடுத்து கூறினார். முதியவரை தேர்தலில் ஓட்டளிக்க அனுமதிக்கலாம் என்று தாசில்தார் கூறியதை தொடர்ந்து ஒரு விண்ணப்பத்தில் முதியவர் மருதப்பனிடம் அவரது கைரேகை மற்றும் கையெழுத்து பெற்ற பின்னர் அவரை ஓட்டளிக்க அதிகாரிகள் அனுமதித்தனர்.
''தனக்கு வயது 70 ஆகிறது. உயிரோடு இருக்கும்போது என்னை இறந்ததாக கூறி பட்டியலில் இருந்து நீக்கியது எப்படி?. தனக்கு கடும் மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது. இதற்கு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என மருதப்பன் கோரிக்கை வைத்துள்ளார்.