» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
தென்காசி மாவட்டத்தில் ப்கரீத் சிறப்புத் தொழுகை - திரளான இஸ்லாமியர்கள் பங்கேற்பு
திங்கள் 17, ஜூன் 2024 10:15:30 AM (IST)
தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை நடைபெற்றது. இதில் இஸ்லாமியர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.
கடையநல்லூரில் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் 9 இடங்களில் ஹஜ் பெருநாள் தொழுகை திடல்களில் நடத்தப்பட்டது. இதில் காயிதே மில்லத் திடல் முழுவதும் இஸ்லாமியர்கள் நிறைந்திருந்தனர். பெரியதெரு, புதுத்தெரு, மணிக்கூண்டு ஆகிய இடங்களிலும் தொழுதனர். இதில் அதிகாலை 6 மணி முதலே இஸ்லாமியர்கள் ஆண்களும், பெண்களும் மற்றும் சிறுவர், சிறுமியர்களும் காயிதே மில்லத் திடல் நோக்கி வரத் தொடங்கினர்.
6.30 மணியளவில் மாநில பேச்சாளர் அப்துர் ரஹ்மான் ஃபிர்தவ்ஸி, தலைமை ஏற்று பெருநாள் சிறப்பு தொழுகையை நடத்தினார். இதில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் பெருநாள் தொழுகையில் கலந்து கொண்டனர்.
பேட்டை கிளை சார்பில் மர்க்கஸுந் நூர் தவ்ஹீத் திடலில் ஜலாலுதீன், ரஹ்மானியாபுரம் மர்யம் பள்ளி திடலில் அப்துல்நாசர், மக்காநகர் தவ்ஹீத் திடலில் அப்துல் சலாம், தவ்ஹீத் நகர் ரபீக்ராஜா, பாத்திமா நகர் பள்ளி திடலில் சஹாத் இக்பால் நகர் ரய்யான் திடலில் ரய்யான்மைதீன், இ.பி.மஹ்மூதாநகர் மீரான்கனி, மதினா நகர் பள்ளி திடலில் அஹ்மது தலைமையில் தொழுகை நடை பெற்றது .
தென்காசி மாவட்டத்தில் தென்காசி, பொட்டல்புதூர், முதலியார்பட்டி, செங்கோட்டை, அச்சன்புதூர், வடகரை, வீரணம், சங்கரன்கோவில், புளியன்குடி, வாசுதேவநல்லூர், திரிகூடபுரம் உட்பட பல்வேறு பகுதிகளில் ஹஜ்ஜுப்பெருநாள் தொழுகை நடைபெற்றது.