» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
ஊராட்சி செயலாளர் சரமாரி வெட்டிக்கொலை: பட்டப்பகலில் மர்மநபர்கள் வெறிச்செயல்!
செவ்வாய் 4, பிப்ரவரி 2025 8:25:29 AM (IST)
பணகுடியில் பட்டப்பகலில் ஊராட்சி செயலாளரை சரமாரியாக வெட்டிக்கொலை செய்த மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
நெல்லை மாவட்டம் பழவூர் பகுதியைச் சேர்ந்தவர் சங்கர் (53). இவர் வள்ளியூர் யூனியன் வேப்பிலாங்குளம் ஊராட்சி செயலாளராக பணிபுரிந்து வந்தார். நேற்று காலையில் வழக்கம்போல் பழவூரில் இருந்து வேப்பிலாங்குளத்திற்கு மோட்டார் சைக்கிளில் வேலைக்கு சென்று கொண்டிருந்தார்.
பணகுடியை அடுத்த வடக்கு பெருங்குடி அருகே சென்றபோது, அவரை மர்மநபர்கள் திடீரென வழிமறித்தனர். பின்னர் கண்ணிமைக்கும் நேரத்தில் தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து சரமாரியாக சங்கரை வெட்டினர். பின்னர் அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
இதில் சங்கர் ரத்த வெள்ளத்தில் சரிந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். தகவல் அறிந்ததும் பணகுடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். சங்கர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். முன்விரோதம் காரணமாக சங்கர் வெட்டிக் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் நடந்த இந்த கொடூர கொலை சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.