» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தூத்துக்குடியில் இளைஞர்களுக்காக புத்தொழில் களம் : கனிமொழி எம்பி தகவல்

ஞாயிறு 30, மார்ச் 2025 9:24:49 AM (IST)

தூத்துக்குடி மாவட்ட இளைஞர்களுக்காக "புத்தொழில் களம்” என்ற புதிய முன்னெடுப்பை துவங்க உள்ளதாக கனிமொழி எம்பி அறிவித்துள்ளார்,

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், "தூத்துக்குடியின் இளைஞர்கள் உயர்ந்த கனவுகளும் இலட்சியமும் கொண்டவர்கள். அவர்களின் கனவுகளை நிறைவேற்றுவதற்காக, நாங்கள் "புத்தொழில் களம்" என்ற ஒரு முன்னெடுப்பை தொடங்கியுள்ளோம். 

இந்த நிகழ்வு ஏப்ரல் 5, 2025 அன்று தூத்துக்குடி மாநகராட்சி மாநாட்டு மையத்தில் நடைபெறவுள்ளது. இந்த "புத்தொழில் களம்" முயற்சி எனக்கு மிகவும் நெருக்கமானது. நம் தூத்துக்குடி இளைஞர்களின் திறமையை உறுதியாக நம்பும் ஒருவராக, நமது மாவட்டத்தில் புதுமை மற்றும் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் ஒரு இயக்கமாக இது அமையும் என நம்புகிறேன்.

இந்த நிகழ்வில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, மீன்வளத்துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பெ. கீதா ஜீவன் கலந்து கொள்ள உள்ளார்கள் என்பதை தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

இந்த நிகழ்வின் நடுவர் குழுவில் Naturals Beauty Salon India Pvt. Ltd. நிறுவனத்தின் இணை நிறுவனர்  சி.கே. குமரவேல், CIEL HR Services Pvt Ltd, Ma Foi Foundation and Groups நிறுவனங்களின் இணை நிறுவனர் மற்றும் இயக்குநர்  லதா பாண்டியராஜன், Pearl Shipping Agencies நிறுவனத்தின் நிறுவனர்  ஆர். எட்வின் சாமுவேல் ஆகியோர் இடம் பெறுகின்றனர்.

இவர்கள் அனைவருடன் நானும் நடுவர் குழுவில் இணைந்து, இளம் தொழில் முனைவோர்களின் திட்டங்களை மதிப்பீடு செய்து, தூத்துக்குடி மாவட்டத்தின் முன்னேற்றத்திற்காக மூன்று சிறந்த திட்டங்களைத் தேர்ந்தெடுக்கப் போகிறோம்.

புத்தொழில் களம்: தூத்துக்குடி இளைஞர்களுக்கு நான் எவ்வாறு மேலும் உதவ முடியும் என சிந்திக்கும் ஒவ்வொரு முறையும், நமது மாவட்டத்தின் ஒவ்வொரு மூலையிலும் நிறைந்திருக்கும் திறமைகள், படைப்பாற்றல் மற்றும் உறுதியை நினைவுகூர்கிறேன். ஆனால், பல இளைஞர்களுக்கு தங்கள் சிந்ததைகளுக்குச் செயல் வடிவம் கொடுக்கத் தேவையான ஆதரவு, நிதியுதவி மற்றும் வழிகாட்டுதல் கிடைப்பதில்லை. இந்த இடைவெளியை நிரப்பவும், நமது இளைஞர்களுக்கு வாய்ப்புகளை வழங்கவும், நமது சமூகத்தின் முன்னேற்றத்திற்கு பங்களிக்கவும் உருவாக்கப்பட்ட முயற்சியே 'புத்தொழில் களம்'.

இந்த முயற்சி, 18 முதல் 35 வயது வரையிலான தொழில் முனைவோர்களை, லாபம் ஈட்டுவதை மட்டும் நோக்கமாகக் கொள்ளாமல், தூத்துக்குடி மாவட்டத்தின் சவால்களுக்கு தீர்வு காணவும் சமூகத்தில் அர்த்தமுள்ள மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய திட்டங்களை முன்வைக்கவும் ஊக்குவிக்கும்.

தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்று சிறந்த இளம் தொழில் முனைவோரின் திட்டங்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும். இந்த நிதி ஒரு வருட காலத்திற்குள் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் வழங்கப்படுவதால், அவர்களின் முயற்சிக்கு அதன் தொடக்கத்திலிருந்து தேவையான நிதி உதவி கிடைக்கும்.

தேசிய இளைஞர் தினத்தில் தொடங்கிய இந்த முயற்சி மூலம், 400க்கும் மேற்பட்ட விண்ணப்பங்களை நாங்கள் பெற்றுள்ளோம். நானும் என் குழுவுடன் இந்த திட்டங்களை கவனமாக மதிப்பாய்வு செய்து வருகிறோம். இறுதிப் போட்டியாளர்களின் பட்டியலை வரும் நாட்களில் அறிவிப்போம் என தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து

அந்தோணிசாமிApr 1, 2025 - 10:28:39 AM | Posted IP 104.2*****

வாழ்த்துக்கள்

அதிMar 31, 2025 - 07:41:37 PM | Posted IP 172.7*****

இப்படியொரு திட்டம் மிகவும் வரவேற்கதக்கது ஆனால் மாவட்ட நிர்வாகமோ மத்திய அமைச்சரோ இத்திட்டத்தை மக்களிடையே இளைஞர்களிடையே பிரபல படுத்தாத்து (promote) மிகவும் வருந்ததக்கது. விழா மட்டுமே விளம்பரபடுத்தப்படுகறது.

செ. ராமச்சந்திரன்Mar 30, 2025 - 11:44:02 PM | Posted IP 104.2*****

தூய்மையான தூத்துக்குடி மாவட்டத்தில் புது தொழில் களம் புத்துணர்ச்சியோடு தொடங்கி இருக்கும் புதுமையான முயற்சி ஒவ்வொரு வட்டத்திற்கும் ஒவ்வொரு வட்டத்திற்கும் குறிப்பிட்ட சில இளைஞர்களை தேர்வு செய்து அவர்களுக்கு தொழில் தொடங்க வழிகாட்டி அதன்மூலம் கிராமப்புற மற்ற இளைஞர்களுக்கும் தொழில் தொடங்க வழிவகை செய்யலாம் பலதரப்பட்ட தொழில் முனைவோர்களாக உருவாகி அணைத்து இளைஞர்களுக்கும் வேலை வாய்ப்பு பெருகி தூத்துக்குடி மாவட்டம் தொழில் பூங்காவாக உருவாக புதிய முயற்சியாக தாங்கள் உருவாக்கி இருக்கும் இந்தப் பயணம் நல்ல த த தொடக்கமாக அமைய இறைவா வழிகாட்டு

என்னத்த சொல்லMar 30, 2025 - 12:52:24 PM | Posted IP 162.1*****

மாஃபா நிறுவனம் அதிமுக

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory