» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

படி... படி... என்று கூறியதால் தந்தையின் தலையில் கல்லைப்போட்டு கொன்ற கல்லூரி மாணவர்!

வியாழன் 26, ஜூன் 2025 8:59:08 AM (IST)

மேலப்பாளையம் அருகே படி... படி... என்று கூறியதால் தந்தையின் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்த கல்லூரி மாணவரை போலீசார் கைது செய்தனர்.

நெல்லை மேலப்பாளையம் அருகே மேலகருங்குளம் அசோகபுரத்தைச் சேர்ந்தவர் மாரியப்பன் (46). கூலி தொழிலாளி. இவருடைய மனைவி சகுந்தலா. இவர்களுக்கு தங்கபாண்டி (19) உள்ளிட்ட 3 பிள்ளைகள் உள்ளனர். மாரியப்பன் ஆடுகள் வளர்த்து வந்தார். தங்கபாண்டி, பாளையங்கோட்டையில் உள்ள அரசு உதவிபெறும் தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். 

இவர் சரியாக படிக்காமல் ஊர்சுற்றி வந்ததாக கூறப்படுகிறது. எனவே, மாரியப்பன் அடிக்கடி தங்கபாண்டியிடம் நன்றாக படிக்குமாறு அறிவுறுத்தி கண்டித்து வந்தார். நேற்று முன்தினம் காலையில் மாரியப்பன் வழக்கம்போல் வேலைக்கு சென்று விட்டு இரவில் வீட்டுக்கு திரும்பி வந்தார். அப்போது அவர் தங்கபாண்டியிடம், ‘‘ஒழுங்காக படிக்கும் வேலையை மட்டும் பார், மற்றவர்களுடன் சேர்ந்து ஊர் சுற்றுவதை நிறுத்திவிட்டு படிப்பில் முழு கவனம் செலுத்து’’ என்று அறிவுறுத்தினார். 

இதனால் தந்தை-மகனுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்ட பிறகு தூங்க சென்றனர். மாரியப்பன் வீட்டுக்கு வெளியே வராண்டாவில் படுத்து தூங்கினார். தந்தை அடிக்கடி படி... படி... என்று கூறி கண்டித்ததால் ஆத்திரமடைந்த தங்கபாண்டி அவரை கொலை செய்ய முடிவு செய்தார். அவர் வீட்டின் வெளியே ஆடுகளை கயிற்றில் கட்டுவதற்காக வைத்திருந்த பெரிய கல்லை எடுத்து வந்து, தூங்கி கொண்டிருந்த தந்தை மாரியப்பனின் தலையில் போட்டார். 

இதில் பலத்த காயமடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மாரியப்பனின் அலறல் சத்தம் கேட்டு கண்விழித்த குடும்பத்தினர் இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து கதறி அழுதனர். பின்னர் தங்கபாண்டி அங்கிருந்து தப்பி சென்றார்.

இதுகுறித்து மேலப்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, இறந்த மாரியப்பனின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான தங்கபாண்டியை வலைவீசி தேடினர்.

இந்த நிலையில் வெளியூர் செல்வதற்காக நெல்லை புதிய பஸ் நிலையத்தில் பதுங்கியிருந்த தங்கபாண்டியை போலீசார் பிடித்து கைது செய்தனர். படி... படி.. என்று கூறியதால் தந்தையின் தலையில் கல்லை தூக்கிப்போட்டு கல்லூரி மாணவர் பயங்கரமாக கொலை செய்த சம்பவம் நெல்லையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory