» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
மாணவி குறித்து சமூகவலைதளங்களில் அவதூறு: அரசு கல்லூரி பெண் முதல்வர்,கணவருடன் கைது
புதன் 7, ஜனவரி 2026 8:09:34 AM (IST)
மாணவி குறித்து சமூகவலைதளங்களில் அவதூறு பரப்பியதாக நெல்லை ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரி பெண் முதல்வர் தனது கணவருடன் கைது செய்யப்பட்டார்.
நெல்லை பழையபேட்டையில் ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் முதுகலை 2-ம் ஆண்டு தமிழ் படிக்கும் மாணவி ஒருவர், ஆசிரியர் ஒழுங்காக பாடம் நடத்தவில்லை என்று யூடியூப்பில் பேசியிருந்தார்.இதுகுறித்து அந்த மாணவியை பற்றி சமூகவலைதளங்களில் அவதூறாகவும், ஆபாசமாகவும் கருத்துக்கள் பதிவு செய்யப்பட்டது. இதுதொடர்பாக, அந்த மாணவி கடந்த மாதம் நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் புகார் கொடுத்தார். அதில், தமிழ்த்துறை தலைவராக இருந்த சுமிதா (தற்போதைய கல்லூரி பொறுப்பு முதல்வர்) சமுகவலைதள பக்கத்தில் இருந்தே அவதூறு கருத்துகள் பதிவு செய்யப்படுவதாக தெரிவித்து இருந்தார்.
பின்னர் அந்த மனு நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதையடுத்து மாணவியின் புகார் குறித்து நெல்லை மாநகர சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணையில், கல்லூரி முதல்வர் (பொறுப்பு)சுமிதாவும், தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் பணியாற்றும் அவரது கணவர் பொன்னுதுரையும் அவதூறு, ஆபாச கருத்துக்களை பதிந்து பரப்பியது தெரியவந்தது.
இதையடுத்து நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் மணிவண்ணன் உத்தரவின் பேரில், உதவி கமிஷனர் செந்தாமரை கண்ணன் நேரடி மேற்பார்வையில் சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் சண்முகவடிவு, சப்-இன்ஸ்பெக்டர் கலை சந்தனமாரி ஆகியோர் நேற்று காலையில் சுமிதா, பொன்னுதுரை ஆகியோரிடம் சைபர் கிரைம் அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தினர்.
நீண்ட நேர விசாரணைக்கு பிறகு, 2 பேரையும் போலீசார் அதிரடியாக கைது செய்தனர். பின்னர் அவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். இந்த சம்பவம் நெல்லையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதுதொடர்பாக நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் மணிவண்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘நெல்லையில் பெண் ஒருவர் யூடியூப்பில் பேசியது குறித்து ஆபாசமாக கருத்து பதிவிட்டது சம்பந்தமாக சைபர் கிரைம் இணையதளத்தில் புகார் அளித்தார்.
அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி 2 பேரை கைது செய்து உள்ளோம். பொதுமக்கள் இணைய வழி குற்றங்களால் பாதிக்கப்பட்டால் உடனடியாக சைபர் கிரைம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கலாம். மேலும் www.cybercrime.gov.in என்ற இணையதள முகவரியிலும் புகார் அளிக்கலாம்’ என்று கூறி உள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பணகுடி இராமலிங்க சுவாமி கோயில் கும்பாபிஷேக விழா : ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
திங்கள் 23, பிப்ரவரி 2026 12:14:04 PM (IST)

குழந்தைகளுக்கு விட்டமின் ஏ திரவம் வழங்கும் முகாம்: ஆட்சியர் சுகுமார் தகவல்
வெள்ளி 20, பிப்ரவரி 2026 5:57:24 PM (IST)

தூய்மைப்பணியாளர்களுக்கு ரூ.1கோடி நலதிட்ட உதவிகள்: நலவாரிய தலைவர் வழங்கினார்
வியாழன் 19, பிப்ரவரி 2026 10:39:12 AM (IST)

ஒடிசாவிலிருந்து லாரியில் கடத்திய 10 கிலோ கஞ்சா பறிமுதல்: 5 பேர் கைது
வியாழன் 19, பிப்ரவரி 2026 8:32:34 AM (IST)

பெண்ணிடம் 8½ பவுன் நகை பறிப்பு : காவல் நிலையத்தின் அருகிலேயே கைவரிசை!
வியாழன் 19, பிப்ரவரி 2026 8:04:29 AM (IST)

மது போதையில் ஆட்டோ ஓட்டி 5 பள்ளி மாணவர்கள் காயம் : ஓட்டுநர் மீது கடும் பிரிவில் வழக்கு
புதன் 18, பிப்ரவரி 2026 5:53:22 PM (IST)

