» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

நெல்லையில் கல்லூரி பேருந்து மோதி விபத்து: பள்ளி மாணவி உயிரிழப்பு!

செவ்வாய் 24, பிப்ரவரி 2026 11:47:09 AM (IST)

நெல்லையில் கல்லூரிப் பேருந்து மோதிய விபத்தில் படுகாயம் அடைந்த  பள்ளி மாணவி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

நெல்லை மாவட்டம் சுத்தமல்லி விலக்கு, வ.உ.சி. நகரைச் சேர்ந்தவர் இசக்கியப்பன் (30). இவர் தச்சநல்லூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் பேருந்து ஓட்டுநராகப் பணியாற்றி வருகிறார். கடந்த 20-ஆம் தேதி காலை, இசக்கியப்பன் கல்லூரிப் பேருந்தை மதுபோதையில் ஓட்டிச் சென்றுள்ளார். 

நெல்லை - கடையம் சாலையில் சுத்தமல்லி அருகே உள்ள விஸ்வநாதன் நகர் பகுதியில் பேருந்து சென்றபோது, முன்னால் சென்று கொண்டிருந்த ஆட்டோ மீது அதிவேகமாக மோதியது. இதில் நிலைதடுமாறிய ஆட்டோ, சாலையோரப் பள்ளத்தில் தலைகுப்புறக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஆட்டோ ஓட்டுநர் நடுக்கல்லூரைச் சேர்ந்த மனக்காவலம் பெருமாள் (49) மற்றும் ஆட்டோவில் பயணம் செய்த பத்தாம் வகுப்பு மாணவிகளான யஸ்வனி (15), செல்வபாலா (15) மற்றும் மாணவன் முத்து அருள் (15) ஆகியோர் படுகாயமடைந்தனர்.

காயமடைந்த நான்கு பேரும் நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதில் மாணவி செல்வபாலாவின் உடல்நிலை தொடக்கம் முதலே கவலைக்கிடமாக இருந்ததால், அவருக்குத் தீவிர சிகிச்சைப் பிரிவில் செயற்கை சுவாசக் கருவி (Ventilator) பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. சுமார் நான்கு நாட்களாக மருத்துவர்கள் போராடியும், சிகிச்சை பலனின்றி மாணவி செல்வபாலா இன்று காலை பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த விபத்து குறித்து சுத்தமல்லி காவல் ஆய்வாளர் சுந்தரமூர்த்தி விசாரணை மேற்கொண்டு, ஓட்டுநர் இசக்கியப்பனை ஏற்கனவே கைது செய்திருந்தார். முதலில் 'கொலைச் செய்ய நோக்கமில்லாமல் மரணம் விளைவிக்க முயற்சித்தல்' என்ற பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. தற்போது மாணவி உயிரிழந்ததைத் தொடர்ந்து, இவ்வழக்கு 'கொலைக்கு நிகரான மரணம் விளைவித்தல்' (Culpable Homicide not amounting to murder) என்ற பிரிவின் கீழ் மாற்றப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory