» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

137 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை: பாதுகாப்பு குறித்து குமரி மாவட்ட ஆட்சியர் ஆய்வு!

வியாழன் 26, மார்ச் 2026 12:48:58 PM (IST)

பதற்றமான வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிப்பதை அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா அறிவுறுத்தினார்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட 6 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி, மாவட்டத்தில் கண்டறியப்பட்டுள்ள பதற்றமான வாக்குச்சாவடிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.அழகுமீனா, நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மாவட்டம் முழுவதும் மொத்தம் 137 வாக்குச்சாவடிகள் பதற்றமான மற்றும் கவனிக்கத்தக்கவை என கண்டறியப்பட்டுள்ளன. அதன் தொகுதிவாரியான விவரம்:

கன்னியாகுமரி: 36

கிள்ளியூர்: 35

பத்மநாபபுரம்: 23

நாகர்கோவில்: 18

குளச்சல்: 15

விளவங்கோடு: 10

ஆய்வு செய்யப்பட்ட இடங்கள்:

ஆட்சியர் குளச்சல் மற்றும் பத்மநாபபுரம் தொகுதிகளுக்குட்பட்ட பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிகளை ஆய்வு செய்தார்: 

குளச்சல் தொகுதி: சரவிளை அரசு நடுநிலைப்பள்ளி (குறும்பனை), இலப்பவிளை அரசு உயர்நிலைப்பள்ளி, மாடத்திட்டுவிளை புனித அலோசியஸ் தொடக்கப்பள்ளி.

பத்மநாபபுரம் தொகுதி: திருவிதாங்கோடு அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள், மணலிக்கரை புனித ஜோசப் தொடக்கப்பள்ளி, தக்கலை அரசு தொடக்கப்பள்ளி.

மேலும், திருவிதாங்கோடு அரசு நடுநிலைப்பள்ளியில் அமையவுள்ள மாதிரி வாக்குச்சாவடியையும் (Model Polling Station) அவர் பார்வையிட்டார்.
ஆட்சியரின் முக்கிய அறிவுறுத்தல்கள்:

ஆய்வின் போது மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது:   பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் காவலர்கள், நுண் பார்வையாளர்கள் (Micro Observers) மற்றும் மத்திய பாதுகாப்புப் படையினர் பணியமர்த்தப்படுவார்கள்.

அனைத்துப் பதற்றமான வாக்குச்சாவடிகளிலும் கண்காணிப்பு கேமரா வசதிகள் ஏற்படுத்தப்படும். இவற்றைத் தொடர்ச்சியாகக் கண்காணிக்கத் தனி கட்டுப்பாட்டு அறை அமைக்கப்படும். வாக்காளர்களுக்குத் தேவையான குடிநீர், நிழற்குடை, மின்சாரம் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான சாய்வுதளம் (Ramp) ஆகியவை தயார் நிலையில் இருப்பதை அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும். வாக்காளர்கள் எந்தவித அச்சுறுத்தலுமின்றி தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்றுவதை தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அலுவலர்களும் காவல்துறையினரும் உறுதி செய்ய வேண்டும்.

இந்த ஆய்வின் போது மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சுகிதா, பேரூராட்சிகள் உதவி இயக்குநர் கோமதி, வட்டாட்சியர்கள் சுனில் (கல்குளம்), மரகதவல்லி (திருவட்டார்), உசூர் மேலாளர் தாஜீ நிஷா, உதவிச் செயற்பொறியாளர் பாண்டிராஜன் மற்றும் காவல்துறை அதிகாரிகள், தலைமையாசிரியர்கள் கலந்துகொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory