» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
தொழில் அதிபர் வீட்டில் ரூ.2 கோடி நகை - பணம் பறிமுதல் : தேர்தல் நெருங்கும் வேளையில் பரபரப்பு
ஞாயிறு 19, ஏப்ரல் 2026 9:50:44 AM (IST)
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், நெல்லையில் தொழில் அதிபர் ஒருவரது வீட்டில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ.2 கோடி மதிப்பிலான நகை மற்றும் பணம் பிடிபட்டுள்ளது.
தமிழக சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு வாக்காளர்களுக்குப் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் விநியோகம் செய்யப்படுவதைத் தடுக்க தேர்தல் ஆணையமும், வருமான வரித்துறையும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக, நெல்லை பாளையங்கோட்டை என்.ஜி.ஓ. காலனியில் உள்ள ஒரு தொழில் அதிபரின் வீட்டில் நேற்று வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
இந்தச் சோதனையின் போது, வீட்டில் கட்டுக் கட்டாகப் பணமும், தங்க நகைகளும் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அங்கிருந்து ₹25 லட்சம் ரொக்கப் பணம் மற்றும் ₹1.78 கோடி மதிப்பிலான 1¼ கிலோ தங்க நகைகள் என மொத்தம் ₹2.03 கோடி மதிப்பிலான சொத்துக்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட பணத்திற்கு உரிய ஆவணங்கள் இல்லாததால், இந்தத் தொகை வாக்காளர்களுக்கு விநியோகம் செய்யப் பதுக்கப்பட்டதா? என்ற கோணத்தில் வருமான வரித்துறையினர் மற்றும் தேர்தல் பிரிவினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களுக்கு உரிய கணக்கைச் சமர்ப்பிக்குமாறு சம்பந்தப்பட்ட தொழில் அதிபருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இது குறித்து நெல்லை மாவட்ட தேர்தல் பிரிவு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், மாவட்டத்தில் இதுவரை நடைபெற்ற சோதனைகளில் நெல்லை, பாளையங்கோட்டை மற்றும் நாங்குநேரி ஆகிய தொகுதிகளில் மட்டும் ₹1.41 கோடி ரொக்கப் பணமும், ₹1.80 கோடி மதிப்பிலான தங்கம் உள்ளிட்ட பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் நேரத்தில் தொழில் அதிபர் வீட்டில் ₹2 கோடி மதிப்பிலான சொத்துக்கள் சிக்கிய சம்பவம் நெல்லை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சட்டமன்ற பொதுத்தேர்தல் மினி மாரத்தான் போட்டி: ஆட்சியர் இரா.சுகுமார், தொடங்கி வைத்தார்
செவ்வாய் 21, ஏப்ரல் 2026 12:55:14 PM (IST)

வாக்காளர்களுக்கு தலா ரூ.1,000 வழங்கப்பட வேண்டும் : அதிமுக வேட்பாளரின் பேச்சால் சர்ச்சை!
திங்கள் 20, ஏப்ரல் 2026 5:51:43 PM (IST)

திருநெல்வேலியில் தேர்தல் விழிப்புணர்வு சதுரங்கப் போட்டி: ஆட்சியர் தொடங்கி வைத்தார்
திங்கள் 20, ஏப்ரல் 2026 5:08:41 PM (IST)

மகளிருக்கு 33% இடஒதுக்கீடு விரைவில் அமலாகும்: மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதி!
திங்கள் 20, ஏப்ரல் 2026 9:12:04 AM (IST)

மாற்றுத்திறனாளிகள் சிரமமின்றி வாக்களிக்க சக்சம் செயலி: ஆட்சியர் தகவல்!
சனி 18, ஏப்ரல் 2026 5:10:16 PM (IST)

திருநெல்வேலியில் தேர்தல் விழிப்புணர்வு: ராட்சத பலூனை பறக்கவிட்டார் மாவட்ட ஆட்சியர்!
சனி 18, ஏப்ரல் 2026 4:02:30 PM (IST)

