» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

வீடுபுகுந்து பேராசிரியையை அரிவாளால் தாக்கி 14 பவுன் நகை கொள்ளை: நெல்லையில் துணிகரம்!

புதன் 22, ஏப்ரல் 2026 8:13:10 AM (IST)

நெல்லை அருகே பல்கலைக்கழகப் பெண் பேராசிரியையை முகமூடி அணிந்த கும்பல் அரிவாளால் தாக்கி, 14 பவுன் தங்க நகைகளைக் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை கீழமுன்னீர்பள்ளம் வி.ஜி.பி. டவுன் பகுதியைச் சேர்ந்தவர் ஜெனித்தா (45). இவர் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியையாகப் பணியாற்றி வருகிறார். கடந்த 18-ஆம் தேதி இரவு, இவர் தனது வீட்டின் குப்பைகளைக் கொட்டுவதற்காகக் கதவைத் திறந்து வெளியே வந்துள்ளார்.

அப்போது அங்கு மறைந்திருந்த முகமூடி அணிந்த 4 பேர் கொண்ட கும்பல், திடீரென ஜெனித்தாவின் வாயைப் பொத்தி வீட்டிற்குள் இழுத்துச் சென்றனர். அவரிடமிருந்த நகை மற்றும் பணத்தைக் கேட்டு மிரட்டிய அந்தக் கும்பல், அவர் மறுக்கவே மறைத்து வைத்திருந்த அரிவாளால் அவரைத் தாக்கியுள்ளனர்.

தாக்குதலால் காயமடைந்தும், உயிருக்கு அஞ்சியும் ஜெனித்தா தான் அணிந்திருந்த மற்றும் வீட்டில் வைத்திருந்த நெக்லஸ், தங்கச் சங்கிலி, கம்மல் உள்ளிட்ட 14 பவுன் நகைகளைக் கொள்ளையர்களிடம் ஒப்படைத்தார். நகைகளைப் பெற்றுக்கொண்ட அந்தக் கும்பல், தாங்கள் கொண்டு வந்த மோட்டார் சைக்கிள்களில் தப்பியோடிவிட்டது. கொள்ளை போன நகைகளின் மதிப்பு சுமார் ₹13 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

தப்பியோடிய வாலிபர் - போலீஸ்காரர் காயம்:

இச்சம்பவம் குறித்து முன்னீர்பள்ளம் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, வீரவநல்லூர் பகுதியில் சந்தேகத்திற்கிடமான வாலிபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் செல்வது தெரியவந்தது. அவரைப் பிடிக்க முயன்றபோது, அவர் அதிவேகமாக வாகனத்தை ஓட்டி ஒரு போலீஸ்காரர் மீது மோதிவிட்டுத் தப்பினார். இதில் காயமடைந்த போலீஸ்காரர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தேர்தல் நேரத்தில் பாதுகாப்புப் பணிகள் தீவிரமாக உள்ள நிலையிலும், பல்கலைக்கழகப் பேராசிரியையைத் தாக்கி நடைபெற்றுள்ள இந்தத் துணிகரக் கொள்ளைச் சம்பவம் நெல்லை மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தப்பியோடிய முகமூடி கும்பலைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் வலைவீசித் தேடி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory