» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

பழைய குற்றாலத்தில் ரூ.20 நுழைவு கட்டணம் : காலை 7 முதல் மாலை 5 வரை மட்டுமே அனுமதி!

வியாழன் 7, மே 2026 10:35:05 AM (IST)

பழைய குற்றாலம் அருவிக்குச் செல்ல ரூ. 20 நுழைவு கட்டணமாக வசூலிக்கப்படும் என்று வனத்துறை அறிவித்துள்ளது.

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கவுள்ள நிலையில், குற்றாலத்தில் இந்த மாத இறுதியில் 'சீசன்' தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி, பழைய குற்றாலம் அருவியில் சுற்றுச்சூழல் சுற்றுலா நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்த வனத்துறை புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளது.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய 'வண்ணப்பூரணி சுற்றுச்சூழல் சுற்றுலா குழு' அமைக்கப்பட்டு, பல்வேறு விதிகள் உடனடியாக அமலுக்கு வருகின்றன: பழைய குற்றாலம் அருவிக்குச் செல்ல ஒருவருக்கு ரூ. 20 நுழைவு கட்டணமாக வசூலிக்கப்படும்.

தனியார் வாகனங்கள் சுற்றுலா பகுதிக்குள் அனுமதிக்கப்பட மாட்டாது. சாலையோரங்களில் வாகனங்களை நிறுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. வனத்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வாகனங்களில் செல்ல ஒருவருக்கு ரூ. 10 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அங்கீகரிக்கப்பட்ட ஆட்டோக்கள் மட்டும் குறிப்பிட்ட தூரம் வரை அனுமதிக்கப்படும்.

நேரக் கட்டுப்பாடு: சுற்றுச்சூழல் சுற்றுலா மையம் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.

தடை செய்யப்பட்ட பொருட்கள்:

அருவியின் இயற்கை வளத்தைப் பாதுகாக்கப் பின்வருவனவற்றிற்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது:

சோப்பு, ஷாம்பு, எண்ணெய் மற்றும் டிடர்ஜென்ட் போன்ற ரசாயனப் பொருட்கள்.

ஒற்றை பயன்பாட்டு பிளாஸ்டிக் பொருட்கள்.

காட்டு விலங்குகள் மற்றும் குரங்குகளுக்கு உணவு வழங்குதல்.

கண்காணிப்பு:

இந்த விதிமுறைகளைச் செயல்படுத்த வனத்துறை பணியாளர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. மேலும், விதிகளை மீறுபவர்களைக் கண்காணிக்கப் பகுதி முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் (CCTV) பொருத்தப்பட்டுள்ளன.

இந்தத் திட்டம் உள்ளூர் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், வனப் பாதுகாப்பை உறுதி செய்யவும் கொண்டு வரப்பட்டுள்ளதால், பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனத் தென்காசி மாவட்ட வன அலுவலர் கேட்டுக்கொண்டுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory