» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

வரதட்சணை கொடுமையால் இளம் பெண் தற்கொலை: கல்லூரிப் பேராசிரியர் மற்றும் அவரது தாய் கைது!

வெள்ளி 24, ஜூலை 2026 7:50:01 AM (IST)

நெல்லையில் வரதட்சணை மற்றும் குடும்பக் கொடுமை காரணமாகப் திருமணமான ஒரு ஆண்டிலேயே பெண் விஷம் குடித்துத் தற்கொலை செய்துகொண்ட வழக்கில், அவரது கணவரான கல்லூரிப் பேராசிரியர் மற்றும் அவரது தாயாரைச் சந்திப்பு காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள அரியகுளம் கிராமம் தெய்வநாயகப்பேரியைச் சேர்ந்தவர் குமார் (61). இவருடைய மகள் சுமதி (31). இவருக்கும் நெல்லை சந்திப்பு சி.என். கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவரின் மகன் வெங்கடேஷ் (37) என்பவருக்கும் கடந்த 2024-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. வெங்கடேஷ் நெல்லை பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார்.

திருமணமாகி ஓராண்டே ஆன நிலையில், கடந்த 2025-ஆம் ஆண்டு சுமதி தனது கணவர் வீட்டில் திடீரென விஷம் குடித்துத் தற்கொலை செய்துகொண்டார். இச்சம்பவம் குறித்து நெல்லை சந்திப்பு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும், திருமணமான சில களிலேயே பெண் உயிரிழந்ததால் உதவி ஆட்சியர் (RDO) விசாரணையும் நடைபெற்று வந்தது.

இந்நிலையில், சுமதியின் தந்தை குமார் நெல்லை சந்திப்பு காவல் நிலையத்தில் அளித்த விரிவான புகாரில் கூறியிருந்ததாவது: "சுமதியைத் திருமணம் செய்து கொடுக்கும்போது போதுமான ரொக்கப் பணம் மற்றும் நகைகளைச் சீர்வரிசையாகக் கொடுத்தோம். ஆனால், திருமணம் முடிந்த நாள் முதலே எனது மகளுக்கும், அவரது மாமியார் தங்கத்திற்கும் (60) இடையே மனக்கசப்பு ஏற்படுத்தப்பட்டு வந்துள்ளது.

கணவர் வெங்கடேஷும், மாமியார் தங்கமும் சேர்ந்து சுமதியைத் தொடர்ந்து கொடுமைப்படுத்தி வந்துள்ளனர். பெற்றோர் மற்றும் உறவினர்களுடன் தொலைபேசியில் கூடப் பேசக்கூடாது எனக் கடும் நெருக்கடிகளையும் கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளனர். இதனால் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளான சுமதி, வேறு வழியின்றி விஷம் குடித்து உயிரிழந்துள்ளார். எனவே எனது மகளின் தற்கொலைக்குக் காரணமான அவரது கணவர் மற்றும் மாமியார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்."

புகாரின் பேரில் காவல்துறையினர் மற்றும் உதவி ஆட்சியர் நடத்திய தீவிர விசாரணையின் முடிவில், கணவர் மற்றும் மாமியாரின் தொடர் கொடுமையாலேயே சுமதி தற்கொலை செய்து கொண்டிருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, மனைவியைத் தற்கொலைக்குத் தூண்டியதாகக் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், கல்லூரிப் பேராசிரியர் வெங்கடேஷ் மற்றும் அவரது தாய் தங்கம் ஆகிய இருவரையும் நேற்று முன்தினம் அதிரடியாகக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory