» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தூத்துக்குடி கோவில்களில் சூரசம்ஹார விழா கோலாகலம் : திரளான பக்தர்கள் தரிசனம்!
சனி 12, அக்டோபர் 2024 9:21:08 PM (IST)
தூத்துக்குடியில் தெப்பக்குளம் மாரியம்மன் கோவில், பத்திரகாளியம்மன் கோயில், சந்தனமாரியம்மன் கோயில் உள்பட 25 அம்மன் கோவில்களில் சூரசம்ஹாரம் நடந்து.
தூத்துக்குடியில் வட பாகம் சந்தன மாரியம்மன் கோவில், மட்டக்கடை உச்சினிமாகாளி அம்மன் கோவில், தெப்பக்குளம் ஸ்ரீ மாரியம்மன் கோவில், மேலூர் பத்ரகாளியம்மன் கோவில், சண்முகபுரம் வடக்கு பத்திரகாளியம்மன் உள்ளிட்ட 25 அம்மன் கோவில்களில் நவராத்திரி விழா கடந்த 3ஆம் தேதி தொடங்கியது.
விழாவையொட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு அலங்கார பூஜைகள் நடந்தன. விழா நாட்களில் அம்மன் பல்வேறு அலங்காரங்களில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். மேலும் அம்மனுக்கு தினமும் சிறப்பு பூஜைகள் நடந்து வந்தன. விழாவின் சிகர நிகழ்ச்சியாக சூரசம்ஹாரம் நிகழ்ச்சி இன்று மாலையில் நடந்தது.
தூத்துக்குடி தெப்பக்குளம் மாரியம்மன் கோவில் வளாகத்திற்குள் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடந்தது. நரகாசுரனின் 7 தலைகள் சூரசம்ஹாரம் செய்யப்பட்டது. இதில் சூரன் தலை, கஜமுகன் தலை, சிங்கம் தலை, மான் தலை, ரிஷி முகம் தலை, நரகாசுரன் தலை இறுதியாக மகிஷாசூரன் தலை வெட்டப்பட்டு அம்மனின் பாதத்தில் வைக்கப்பட்டது.
பின்னர் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் தீபாரதனை நடந்தது. இது போல் மாநகரில் பல்வேறு பகுதியில் உள்ள அம்மன் கோவில்களிலும் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.