» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

வடகிழக்கு மழையை எதிர்கொள்ள தயார்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உறுதி

திங்கள் 14, அக்டோபர் 2024 8:17:09 AM (IST)



வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அரசு தயாராக இருப்பதாக துணை முதல் - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உறுதிபட தெரிவித்தார்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்க வாய்ப்பு உள்ளது. அதே நேரம் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சீபுரம், திருவள்ளூர் உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதை முன்னிட்டு, சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகள் குறித்தும், ரிப்பன் கட்டிட வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தின் செயல்பாடுகள் குறித்தும் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று ஆய்வு செய்தார்.

அப்போது பொதுமக்களிடம் இருந்து கட்டுப்பாடு மையத்துக்கு வந்த புகார் தொடர்பாக, அவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி கேட்டறிந்தார். பொதுமக்களின் புகார் மீது உடனடி நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

பின்னர், துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நிருபர்களிடம் கூறியதாவது: வடகிழக்குப் பருவமழை தொடங்கவுள்ள நிலையில், தமிழக அரசு துரிதமாக நடவடிக்கை எடுத்து வருகிறது. வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்வதற்காக வருவாய்த்துறை மற்றும் சென்னை மாநகராட்சியின் சார்பில் மாநில அவசர கால கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது. வரும் நாட்களில் தமிழ்நாட்டில் அதிதீவிர கனமழை பெய்யக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது 20 செ.மீ.க்கு மேலான மழைப்பொழிவு இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

எனவே, அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம். பொதுமக்களின் உயிரும், உடைமைகளும் காக்கப்பட வேண்டும் என்பது தான் முக்கியத்துவம். அதை மனதில் வைத்தே பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மழைக்காலத்தில் பொதுமக்களுக்கு 1913 என்ற பிரத்யேக உதவி எண் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான கட்டுப்பாட்டு அறையில் மொத்தம் 150 பேர் சுழற்சி முறையில் பணிபுரிந்து வருகிறார்கள். பொதுமக்களுக்குத் தேவையான தகவல்களை உடனுக்குடன் வழங்குவார்கள். இதேபோல, சமூக ஊடகம், வாட்ஸ் - ஆப், ‘நம்ம சென்னை' தளம் போன்றவற்றிலும் மழை பற்றிய தகவல்கள் உடனுக்குடன் வழங்கப்படும்.

மேலும், அரசுடன் இணைந்து செயல்படுவதற்கு 13 ஆயிரம் தன்னார்வலர்கள் தயார் நிலையில் உள்ளனர். தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கினால் வெளியேற்றுவதற்காக 100 மோட்டார் பம்புகள் தாழ்வான பகுதிகளில் வைக்கப்பட்டுள்ளன. சென்னை மாநகராட்சியின் அனைத்து வார்டுகளிலும் நிவாரண மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

எம்.எல்.ஏ.க்கள் நிவாரண மையங்களுக்கு தேவையான உணவு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளை அரசு அதிகாரிகளுடன் இணைந்து நிறைவேற்றி தருவார்கள். தமிழக அரசின் சார்பில் ‘டி.என். அலர்ட்' புதிய செயலியும் உருவாக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் இந்த செயலியை பதிவிறக்கம் செய்து மழைப்பற்றிய தகவல்களை உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம்.

வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடிய அனைத்துப் பகுதிகளும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. மழைநீர் வடிகால் பணிகள் நிறைவு பெறாமல் உள்ள ஓரிரு இடங்களில், அவற்றை சுற்றி பாதுகாப்பு வேலிகள் அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், மூடப்படாமல் இருக்கும் கழிவுநீர் பாதைகள் பற்றி தகவல் தெரிந்தால், பொதுமக்கள் மாநகராட்சிக்கு சமூக வலைதளத்தில் தெரிவிக்கலாம். அதன்மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

தரையின் மேல் உள்ள அனைத்து கேபிள்களையும் மூடுவதற்கு தேவையான அறிவுறுத்தல்கள் மின்சாரத்துறைக்கு வழங்கப்பட்டுள்ளது. தாழ்வான மின்மாற்றிகள் அதிக உயரத்திற்கு மாற்றப்பட்டுள்ளன. மற்ற மாவட்டங்களில் இருந்து கூடுதல் மின்சாரத்துறை ஊழியர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். ஜெட்ராடிங், தூர்வாரும் எந்திரங்கள், சூப்பர் சக்கர் உள்ளிட்ட 373 எந்திரங்கள் வரவழைக்கப்பட்டுள்ளன.

மழை காலத்தில் தமிழ்நாடு அரசு தரும் வழிகாட்டுதல்களை முறையாகப் பின்பற்றி, பொதுமக்களும் அரசுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அனைத்துக்கும் தயாராக இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்வில் சென்னை மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ் குமார், மாநகராட்சி கமிஷனர் குமரகுருபரன், சிறப்பு திட்ட செயலாக்கத்துறை செயலாளர் தாரேஷ் அகமது மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Tirunelveli Business Directory