» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தூத்துக்குடியில் குட்கா விற்பனை செய்த 5பேர் கைது: கார், பைக் பறிமுதல்
புதன் 16, அக்டோபர் 2024 5:39:42 PM (IST)
தூத்துக்குடியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை தொடர்பாக 5பேரை போலீசார் கைது செய்துள்னர். 132 கிலோ புகையிலை பொருட்கள், கார், பைக் பறிமுதல் செய்யப்பட்டது.
தூத்துக்குடியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் உத்தரவின்படி தூத்துக்குடி நகர உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் மதன் மேற்பார்வையில் வடபாகம் காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன் தலைமையில் உதவி ஆய்வாளர்கள் சிவக்குமார், சுப்புராஜ் மற்றும் போலீசார் இன்று (16.10.2024) அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை நடைபெறுவதை தடுக்கும் விதமாக ரோந்து பணியில் ஈடுபட்டபோது வடபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சேதுபாதை ரோட்டில் உள்ள ஒரு பள்ளி அருகே புகையிலை பாக்கெட்டை கையில் வைத்திருந்த ஒருவரை அழைத்து விசாரணை செய்து,
அடுத்தடுத்த விசாரணையில் தூத்துக்குடி திரேஸ்புரம் பூபல்ராயர்புரம் பகுதியைச் சேர்ந்தவர்களான ஜெபஸ்டின் மகன் ராஜா (42), பாலகிருஷ்ணன் மகன் விஜயகுமார் (26), தாளமுத்துநகர் சமீர்வியாஸ்நகர் பகுதியைச் சேர்ந்த மரிய இன்னாசி மகன் சுரேஷ் (40) மற்றும் தூத்துக்குடி கோவில்பிள்ளைவிளை பகுதியைச் சேர்ந்த ஜான்கோவர் மகன் எபனேசர் (32) மற்றும் தூத்துக்குடி ஆரோக்கியபுரம் பகுதியைச் சேர்ந்த பால்துரை மகன் சுந்தர்ராஜ் (42) ஆகிய 5 பேரும் தமிழ்நாடு அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை வெளிமாநிலத்தில் இருந்து வாங்கிவந்து சட்டவிரோத விற்பனையில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்தது.
இதனையடுத்து மேற்படி போலீசார் ராஜா, விஜயகுமார், சுரேஷ், எபனேசர் மற்றும் சுந்தர்ராஜ் ஆகிய 5 நபர்களை கைது செய்து அவர்களிடமிருந்த ரூபாய் 1,50,000/- மதிப்புள்ள 132 கிலோ தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள், அதற்காக பயன்படுத்திய ஒரு கார், ஒரு இருசக்கர வாகனம் மற்றும் ஒரு சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து வடபாகம் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பள்ளிகள் அருகே தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், உணவு பாதுகாப்புதுறையினருடன் இணைந்து காவல்துறையினர் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்யும் கடைகளுக்கு சீல் வைப்பது, அபராதம் விதிப்பது மற்றும் வங்கி கணக்குகள் முடக்கம் போன்ற நடவடிக்கைகள் எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் உத்தரவிட்டார்.