» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக பா.ஜனதா கையெழுத்து இயக்கம்: அண்ணாமலை

புதன் 19, பிப்ரவரி 2025 8:42:41 AM (IST)

தமிழகத்தில் மார்ச் 1-ந் தேதி முதல் 90 நாட்கள் மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் வீடு, வீடாக கையெழுத்து இயக்கம் நடத்த இருப்பதாக அண்ணாமலை தெரிவித்து உள்ளார்.

சென்னை கமலாலயத்தில் தமிழ்நாடு பா.ஜனதா தலைவர் அண்ணாமலை நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் இந்தியை வைத்து அரசியல் செய்கிறார்கள். இந்தி எங்கேயும் திணிக்கப்படவில்லை. புதிய கல்வி கொள்கையின்படி முதலாவது தாய் மொழி, 2-வது ஆங்கில மொழி, மூன்றாவதாக ஏதாவது ஒரு இந்திய மொழியை படிக்க வேண்டும்.

ஆனால், இங்கு தி.மு.க.வினர் மும்மொழி கல்விக் கொள்கை என்றால் இந்தி திணிப்பு என தவறாக பிரசாரம் செய்கின்றனர். தமிழகத்தில் 52 லட்சம் மாணவர்கள் அரசு பள்ளியிலும், 56 லட்சம் மாணவர்கள் தனியார் பள்ளியிலும் படிக்கிறார்கள்.

சி.பி.எஸ்.இ. பள்ளியில் படிப்பவர்கள் இந்தி படிக்கிறார்கள், மெட்ரிக்குலேஷன் பள்ளிகளில் விருப்ப மொழியாக தெலுங்கு, அரபி, மலையாளம், கன்னடம், இந்தி, குஜராத்தி, சமஸ்கிருதம், பிரெஞ்சு, உருது மொழிகள் இருக்கின்றன. எனவே அரசு பள்ளிகளை விட தனியார் பள்ளிகளில் அதிக அளவில் மாணவர்கள் படிப்பதன் மூலம் தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கை தோல்வி அடைந்துள்ளது வெட்ட வெளிச்சமாக நிரூபணமாகி உள்ளது.

நாம் தமிழர் கட்சியின் 2016 தேர்தல் அறிக்கையில் முதலில் தமிழ் பயிற்று மொழியாக இருக்க வேண்டும். 2-வது ஆங்கிலம் கட்டாய பாட மொழியாக இருக்க வேண்டும். 3-வது விருப்ப மொழியாக இந்தி உள்பட உலகத்தில் இருக்கும் எல்லா மொழியும் இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் படூரில் விஜய் வித்யாஸ்ரம் என்ற பெயரில் சி.பி.எஸ்.இ. பள்ளி நடத்துகிறார். அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரின் பெயரிலான அறக்கட்டளை மூலம் இந்த பள்ளி நடத்தப்படுகிறது.

இப்படி அரசியல் தலைவர்கள் சி.பி.எஸ்.இ. பள்ளியை நடத்திக் கொண்டு, தங்கள் சொந்த குழந்தைகளை பிரெஞ்சு படிக்க வைத்துக் கொண்டு எந்த லட்சணத்தில் வெளியே வந்து அரசு பள்ளி மாணவர்கள் மட்டும் 2 மொழிகளை படிக்க வேண்டும் என்கிறார்கள்?.

தமிழகத்தில், பா.ஜனதா சார்பில் அடுத்த மாதம் (மார்ச்) 1-ந் தேதி முதல் மே மாதம் வரை 90 நாட்கள் வீடு வீடாக சென்று மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்து இயக்கம் நடத்தி ஜனாதிபதியிடம் அந்த அறிக்கையை கொடுக்க இருக்கிறோம். 2026 சட்டமன்ற தேர்தலில், பா.ஜனதாவின் தேர்தல் அறிக்கையில் மும்மொழிக் கொள்கை இடம்பெறும்.

தமிழ்நாட்டுக்கு வர வேண்டிய கல்வி நிதிகள் வந்து கொண்டு தான் இருக்கின்றன. பிரதம மந்திரி திட்டத்தின் கீழ் அமைந்துள்ள சமக்ர சிக்சா என்ற ஒரே ஒரு கல்வித் திட்டத்திற்கான நிதிதான் நிறுத்தப்பட்டுள்ளது. அதனை நிறைவேற்றுவதாக தலைமை செயலாளர் மத்திய அரசுக்கு கடிதம் எழுதிவிட்டு, தற்போது அதை செயல்படுத்தாததால் தான் அந்த நிதி நிறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது மாநில துணைத் தலைவர்கள் வி.பி.துரைசாமி, நாராயணன் திருப்பதி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory