» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மாணவர்கள் இருவரை காப்பாற்றி உயிர் தியாகம் செய்தவரின் குடும்பத்திற்கு ரூ.10லட்சம் நிதியுதவி!

வியாழன் 5, ஜூன் 2025 11:50:04 AM (IST)



குழித்துறை தடுப்பணையில் தவறி விழுந்த இரண்டு மாணவர்களை காப்பாற்றி உயிர் தியாகம் செய்து இறந்தவரின் குடும்பத்தினருக்கு தமிழக அரசின் சார்பில் ரூ.10 இலட்சத்திற்கான காசோலையினை அமைச்சர் த.மனோ தங்கராஜ் வழங்கினார்.

தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைக்கிணங்க, பால்வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் , மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, தலைமையில் இன்று (05.06.2025) இரண்டு மாணவர்களை காப்பாற்றி உயிர் தியாகம் செய்து இறந்தவரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி, ரூ.10 இலட்சத்திற்கான நிதியுதவி வழங்கி, தெரிவிக்கையில் - கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோடு வட்டம், குழித்துறை நகராட்சிக்குட்பட்ட தபால் நிலையம் அருகில் வசித்து வந்தவர் பீட்டர் ஜான்சன் என்பவர் தினமும் குழித்துறை தடுப்பணையில் குளிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார். 

கடந்த 01.06.2025 அன்று சுமார் காலை 11.30 மணியளவில் மேற்படி பகுதியில் குளிக்கச் சென்றபோது தடுப்பணையில் வெட்டுமணி பகுதியிலிருந்து குழித்துறை, மதிலகம், நல்லூர் பகுதியைச் சேர்ந்த மனோ (வயது 17) மற்றும் சிறுவன் அகிலேஸ் (வயது 12) ஆகிய இருவரும் நடந்து வந்து கொண்டிருக்கும்போது தவறி தடுப்பணையின் கீழ்ப்பகுதியில் விழுந்ததைக் கண்ட பீட்டர் ஜான்சன் இரண்டு மாணவர்களின் உயிரையும் காப்பாற்றிய நிலையில் எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

அதனடிப்படையில் இச்சம்பவத்தில் தன் உயிரையும் பொருட்படுத்தாமல் இரண்டு மாணவர்களையும் காப்பாற்றிய பீட்டர் ஜான்சன் அவர்களின் வீரத்தையும் தியாகத்தையும் பாராட்டி, நமது மாவட்ட ஆட்சியர் அனுப்பிய பேரரணை அடிப்படையில், தமிழ்நாடு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.10 இலட்சம் நிதியுதவியினை தாயுள்ளத்துடன் அறிவித்தார்கள்.

அதனைத்தொடர்ந்து இன்றைய அன்னாரது குடும்பத்தினரை நேரில் சந்தித்து, ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க, பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.10 இலட்சத்துக்கான காசோலையினை வழங்கியுள்ளோம். இவ்வாறு பால்வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் தெரிவித்தார். 

நிகழ்வில் விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினர் முனைவர் தாரகை கத்பர்ட், பத்மநாபபுரம் சார் ஆட்சியர் வினய்குமார் மீனா, இ.ஆ.ப, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் ஷேக் அப்துல்காதர், விளவங்கோடு வட்டாட்சியர் லெயோலா பாய், நகர்மன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory