» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

திருப்பரங்குன்றத்தில் குடமுழுக்கு கோலாகலம்: லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!

திங்கள் 14, ஜூலை 2025 11:03:01 AM (IST)



திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயில் குடமுழுக்கு விழா இன்று கோலாகலமாக நடைபெற்றது. லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். 

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதற்படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் குடமுழுக்கு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. இதற்காக கடந்த பிப்.10 ஆம் தேதி இரண்டரை கோடி மதிப்பீட்டில் திருப்பணிகள் முழுவீச்சில் நடந்து வந்தன. கோயிலுக்குள் உள்ள கம்பத்தடி மண்டபம், மகா மண்டபம், திருவாச்சி மண்டபம், வல்லப கணபதி சன்னதி உள்ளிட்ட பல்வேறு மண்டபங்களின் அனைத்துப் பகுதிகளிலும் கமல வர்ணம் பூசப்பட்டு புதுப்பொலிவுடன் காட்சியளிக்கின்றது. மேலும் ஒவ்வொறு மண்டபத்தின் கல்தூண்களிலும் வாழைப் பூக்கள் சிம்ம முகங்கள்இயாழிகள் யாவும் பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டுள்ளது.கோயிலில் கம்பீரமாக காட்சியளிக்க கூடிய ராஜ கோபுரம் முழுவதும் கலை நுனுக்கத்துடன் வர்ணம் தீட்டப்பட்டு புதுப்பொலிவுடன் காட்சியளிக்கிறது.

சுப்பிரமணிய சுவாமி, சத்தியகிரீஸ்வரர், துர்க்கை அம்மன் உள்ளிட்ட தெய்வங்களுக்கும் சக பரிவார மூர்த்திகளுக்குமாக ஆகம விதிப்படி 75 குண்டங்கள் அமைக்கப்பட்டு அதில் காசியிலிருந்து கங்கை தீர்த்தம் காவிரி பவானி அழகர் நடைபெற்று, நூபுர கங்கை தீர்த்தம் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலிருந்து விஷேசமாக கொண்டு வரப்பட்ட புனிதநீர் தங்கம், வெள்ளிக் குடங்களில் நிரப்பப்பட்டு கடந்த 4 ஆம் தேதி பூர்வாங்க பூஜைகள் ஆரம்பமாகி 9 ஆம் தேதி வரை நடைபெற்றது. இதனையடுத்து 10 ஆம் தேதி வியாழக்கிழமை மாலை முதற்கால யாக பூஜை தொடங்கி தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை வரை காலை மற்றும் மாலை முறையே ஏழுகால யாக பூஜை நடைபெற்று, ஞாயிற்றுக்கிழமை இரவு தர்ப்பைக் கயிறு, பட்டு நூல் கொண்டு (ஸ்பாரிசாகுதி)சுவாமிக்கு சக்தி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.

திங்கள்கிழமை காலை 3.30 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, புனித நீர் தெளித்தல் நடைபெற்று எட்டாம் கால யாக பூஜை நடைபெற்று 4.30 மணிக்கு மஹாபூர்ணாஹூதி நடைபெற்றது. பின்பு சிவாச்சாரியார்கள் புனித நீர் வைக்கப்பட்டு பூஜித்த இரண்டு தங்கக் குடம் மற்றும் வெள்ளிக் கலசங்களுடன் மேளதாளங்கள் முழங்க 5 மணிக்கு வள்ளி தேவசேனா மண்டபங்கள் வழியாக ராஜ கோபுரத்தில் 7 நிலைகள், வல்லப கணபதி, கோவர்தனாம்பிகை அம்மன், பசுபதீஸ்வரர் விமானங்களுக்கு எடுத்து சென்றனர். காலை 5.25 மணிக்கு இந்து அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு பச்சைக் கொடி அசைக்க, ராஜகோபுரம் மற்றும் ஏனைய விமானங்களுக்கு சமகாலத்தில் மஹா குடமுழுக்கு விழா நடைபெற்றது.

5:31 மணிக்கு தேவசேனா உடனுரை சுப்பிரமணியசுவாமி மற்றும் ஏனைய பரிவார மூர்த்திகளுக்கும் மஹா குடமுழுக்கு நடைபெற்றது. மாலை 4.30 மணிக்கு மஹாபிஷேகம், தீபாராதனை நடைபெற்று இரவு 7 மணிக்கு சுப்பிரமணியசுவாமி தெய்வானையுடன் தங்கமயில் வாகனத்திலும், கோவர்தனாம்பிகை அம்மன் ரிஷப வாகனத்திலும், சத்தியகிரீஸ்வரர் அம்மானுடன் பெரிய ரிஷப வாகனத்திலும் எழுந்தருளி திருவீதி உலாவந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.கும்பாபிஷேகத்தை பக்தர்கள் காணும் வண்ணம் கோயிலின் மேல்தளத்திற்கு செல்ல கருணையில்லம், கம்பத்தடி மண்டபம், மடப்பள்ளி, லெட்சுமி தீர்த்தம் என நான்கு வழிகள் அமைக்கப்பட்டு சுமார் 1700 பேர் குடமுழுக்கு விழாவினைகாண கோயில் நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்தது.

மேலும் கோயிலின் வெளிப்புறங்களில் 26 இடங்களில் பெரிய அளவிலான திரைகள் அமைக்கப்பட்டு நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. குடமுழுக்கு விழாவில் மதுரை, சிவகங்கை, தேனி, ராமநாதபுரம், விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.விழாவில் இந்து அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, வணிகவரித்துறை அமைச்சர் பி.மூர்த்தி, சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா உள்பட பலர் பங்கேற்றனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர் குழு தலைவர் சத்யபிரியா பாலாஜி, அறங்காவலர்கள் சண்முகசுந்தரம், மணி செல்வம், பொம்ம தேவன், ராமையா, கோயில் துணை ஆணையர் சூரிய நாராயணன் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory