» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஜன நாயகன் ஓடிடி ஒப்பந்தம் ரத்து? – ரூ. 120 கோடியைத் திரும்பக் கேட்கும் முன்னணி நிறுவனம்!

வியாழன் 12, மார்ச் 2026 4:19:27 PM (IST)

நடிகர் விஜய்யின் கடைசித் திரைப்படமாக உருவெடுத்துள்ள 'ஜன நாயகன்' படத்தின் ஓடிடி உரிமம் தொடர்பான ஒப்பந்தத்தை, பிரபல நிறுவனம் ரத்து செய்ய உள்ளதாக வெளியாகியுள்ளது.

எச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஜன நாயகன்' திரைப்படம், உலகம் முழுவதும் ஜனவரி 9-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தணிக்கை வாரியத்தின் சான்றிதழ் கிடைப்பதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக கடைசி நேரத்தில் படத்தின் வெளியீடு நிறுத்தி வைக்கப்பட்டது.

உச்ச நீதிமன்றம் மற்றும் சென்னை உயர் நீதிமன்றம் வரை சென்ற படக்குழு, இறுதியில் வழக்கை வாபஸ் பெற்று, படத்தை மறுதணிக்கைக்கு (Re-censoring) அனுப்பி வைத்தது. தற்போது வரை மறுதணிக்கை குழுவின் முடிவு இழுபறியாகவே நீடிக்கிறது.

நடிகர் விஜய் 'தமிழக வெற்றிக் கழகம்' என்ற கட்சியைத் தொடங்கி அரசியலில் களம் இறங்கியுள்ள நிலையில், விரைவில் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட உள்ளன. 'ஜன நாயகன்' திரைப்படம் அரசியல் மற்றும் தேர்தல் தொடர்பான பிரசாரப் படமாக கருதப்பட வாய்ப்புள்ளதால், தேர்தல் ஆணையம் இதற்கு அனுமதி மறுக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. இதன் காரணமாக, தேர்தல் முடிந்த பிறகு மே அல்லது ஜூன் மாதத்தில்தான் படம் வெளியாகும் சூழல் நிலவுகிறது.
ரூ. 120 கோடி ஒப்பந்தம் முறியுமா?

கே.வி.என் (KVN) தயாரிப்பு நிறுவனம் சுமார் ரூ. 500 கோடி பட்ஜெட்டில் இப்படத்தைத் தயாரித்துள்ளதாகக் கூறப்படுகிறது. திட்டமிட்ட தேதியில் இருந்து 5 மாதங்கள் வரை தள்ளிப்போவதால், பெரும் நிதி இழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.

இப்படத்தின் ஓடிடி உரிமையை ரூ. 120 கோடிக்கு வாங்கியிருந்த அமேசான் பிரைம் (Amazon Prime) நிறுவனம், காலதாமதத்தைக் காரணம் காட்டி ஒப்பந்தத்தை ரத்து செய்ய முடிவெடுத்துள்ளதாகத் தெரிகிறது. வழங்கப்பட்ட தொகையைத் திரும்பக் கேட்டு தயாரிப்பு நிறுவனத்திற்கு அழுத்தம் கொடுத்து வருவதாகத் தகவல்கள் கசிகின்றன.

இதேபோல், விநியோகஸ்தர்களும் தங்களுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி குறித்து தயாரிப்பு நிறுவனத்திடம் கேள்வி எழுப்பி வருகின்றனர். இருப்பினும், இந்த ஒப்பந்த ரத்து குறித்து தயாரிப்பு நிறுவனமோ அல்லது ஓடிடி நிறுவனமோ இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory