» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.10,000 சிறப்புத் தொகை : எடப்பாடி கே. பழனிசாமி பிரசாரம்!

செவ்வாய் 31, மார்ச் 2026 8:12:31 AM (IST)



அனைத்துக் குடும்ப அட்டைதாரர்களுக்கும் சிறப்புத் தொகையாக ரூ. 10,000 வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்தார்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் கடம்பூர் செ. ராஜுவை ஆதரித்து, கழுகுமலையில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அவர் பேசியதாவது: அதிமுக ஆட்சியில் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை நாங்கள் நிறைவேற்றினோம். குறிப்பாக, தரமான சாலைகள் மற்றும் குடிமராமத்துத் திட்டத்தின் கீழ் நீர்நிலைகள் தூர்வாரப்பட்டு, மழைநீர் சேமிக்கப்பட்டு விவசாயிகளுக்குத் தேவையான தண்ணீர் கிடைக்க வழிவகை செய்யப்பட்டது. 

ஆனால், தற்போதைய திமுக ஆட்சியில் அந்தத் திட்டம் நிறுத்தப்பட்டுவிட்டது. மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்தவுடன் குடிமராமத்துத் திட்டம் முன்னுரிமை அடிப்படையில் செயல்படுத்தப்படும்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் கழுகுமலை பேரூராட்சி புராதன நகரமாக அறிவிக்கப்பட்டு, அதன் வளர்ச்சிக்காக ரூ. 1 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. கடந்த 2016-21 அதிமுக ஆட்சியில், சுற்றுலாத் துறை மூலம் ரூ. 50 லட்சம் மதிப்பீட்டில் வெட்டுவான் கோயில் முதல் உச்சிப் பிள்ளையார் கோயில் வரை கைப்பிடிகள் மற்றும் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டன.

மேலும், கழுகுமலை - நாலாட்டின்புதூர், கழுகுமலை - கயத்தாறு மற்றும் சங்கரன்கோவில் சாலைகள் இருவழிச் சாலைகளாக மாற்றப்பட்டன. தற்போது பழுதடைந்துள்ள அந்தச் சாலைகள், அதிமுக ஆட்சி அமைந்தவுடன் உடனடியாகச் சீரமைக்கப்படும்.

கோவில்பட்டி நகருக்கு வழங்கப்பட்டது போல, கழுகுமலை பேரூராட்சிக்கும் தனியாகக் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு மக்களின் தேவை பூர்த்தி செய்யப்படும். கழுகுமலை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் குளிர்சாதன வசதியுடன் கூடிய புதிய தானியச் சேமிப்புக் கிடங்குகள் அமைக்கப்படும். கழுகாசலமூர்த்தி கோயில் தேரோடும் வீதிகளில் உள்ள மின் கம்பிகள் பூமிக்கடியில் செல்லும் வகையில் மாற்றப்படும்.

திமுக ஆட்சியில் விலைவாசி மற்றும் வரிகள் உயர்த்தப்பட்டதால் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இதிலிருந்து மக்களை மீட்க அதிமுக தேர்தல் அறிக்கையில் முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன:

அனைத்துக் குடும்ப அட்டைதாரர்களுக்கும் சிறப்புத் தொகையாக ரூ. 10,000 வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.

மகளிர் உரிமைத் தொகை ரூ. 2,000 ஆக உயர்த்தி வழங்கப்படும்.

பொங்கல் தொகுப்புடன் ரூ.1,000 ரொக்கம் வழங்கப்படும்.

நகரப் பேருந்துகளில் ஆண்களுக்கும் கட்டணமில்லாப் பயண வசதி நடைமுறைப்படுத்தப்படும்.

"தமிழகத்தில் தற்போது போதைப்பொருள் விற்பனை தாராளமாக நடைபெறுகிறது. அதிமுக ஆட்சிக்கு வந்த 3 மாதங்களில் இது முற்றிலும் ஒழிக்கப்படும். வேலைவாய்ப்பைப் பெருக்கப் புதிய தொழிற்சாலைகள் உருவாக்கப்படும். இது ஒரு குடும்ப ஆட்சியை அகற்றுவதற்கான தேர்தல்," என்று அவர் பேசினார். இந்தக் கூட்டத்தில் வேட்பாளர் கடம்பூர் செ. ராஜு மற்றும் கூட்டணிக் கட்சியினர் திரளானோர் கலந்துகொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory