» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

திமுக, அதிமுகவில் சீட் கிடைக்காதவர்களுக்கே த.வெ.க-வில் வாய்ப்பு: அமைச்சர் கீதா ஜீவன் கிண்டல்!

செவ்வாய் 31, மார்ச் 2026 8:26:02 AM (IST)

திமுக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகளில் இருந்து விலகியவர்களையும், வாய்ப்பு கிடைக்காதவர்களையும் தேடிப்பிடித்து தமிழக வெற்றிக் கழகம் வேட்பாளர்களாக நிறுத்தியுள்ளதாக அமைச்சர் கீதா ஜீவன் விமர்சித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி திட்டங்குளத்தில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது: "கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதியில் இந்த முறை திமுக நேரடியாகக் களம் காண்கிறது. திமுக வேட்பாளராகப் போட்டியிடும் கருணாநிதி (கோவில்பட்டி நகர்மன்றத் தலைவர்) நிச்சயமாகப் பெரும் வெற்றி பெறுவார்."

அதிமுகவின் தேர்தல் அறிக்கையை திமுக காப்பி அடித்துள்ளதாக எடப்பாடி பழனிசாமி கூறுவது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது. தமிழக தேர்தல் வரலாற்றில் எப்போதும் திமுகவின் தேர்தல் அறிக்கைதான் 'கதாநாயகன்' மற்றும் 'கதாநாயகி'யாக இருக்கும். தற்போதைய தேர்தல் அறிக்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 'சூப்பர் ஸ்டார்' என்று வர்ணித்துள்ளார். மக்கள் திமுகவின் வாக்குறுதிகளை மட்டுமே நம்புவார்கள்."

"எங்களது தேர்தல் அறிக்கையில் பெண்களுக்கு ரூ. 8,000 மதிப்பிலான பரிசுக்கூப்பன் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது அதிமுகவைப் பார்த்து நகல் எடுக்கப்பட்டது அல்ல. மகளிர் உரிமைத் தொகை உயர்த்தப்படும் என்று ஏற்கனவே முதலமைச்சர் அறிவித்திருந்தார். அதன் பிறகுதான் எடப்பாடி பழனிசாமி இது குறித்துப் பேசினார். எங்களது தேர்தல் குழு ஒரு மாதமாகத் திட்டமிட்டு, மக்களுக்கான பயனுள்ள திட்டங்களைச் செயல்படுத்தக் கூடிய வகையில் இந்த அறிக்கையை வடிவமைத்துள்ளது."

"தமிழக வெற்றிக் கழகம் வேட்பாளர்களைத் தேடிப் பிடித்த கதை அனைவருக்கும் தெரியும். உதாரணமாக, ஆர்.எஸ். முருகன் என்பவர் திமுகவில் போட்டியிட வாய்ப்புக் கேட்டார்; இங்கு வாய்ப்பு கிடைக்காததால் இன்று த.வெ.க வேட்பாளராகியுள்ளார். அதேபோல், அதிமுகவைச் சேர்ந்த ரெட்டியார்பட்டி நாராயணன் நாங்குநேரியில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காததால் தற்பொழுது த.வெ.க வேட்பாளராகிவிட்டார்.

திமுக மற்றும் அதிமுகவில் இருந்து விலகியவர்களைத் தேடிப் பிடித்து சீட் வழங்குவதுதான் அக்கட்சியின் தற்போதைய நிலைமையாக உள்ளது. தேர்தல் முடிந்த பிறகுதான் நடிகர் விஜய் தனது கட்சியின் உண்மை நிலையை அறிந்துகொள்வார்." இவ்வாறு அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory