» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மேயர் பிரியா - தவெக எம்எல்ஏ பல்லவி இடையே மோதல்! – அரசு விழாக்களில் பெரும் சர்ச்சை!

வியாழன் 4, ஜூன் 2026 3:53:39 PM (IST)

சென்னையில் நடைபெற்ற அரசு விழாக்களில், குத்துவிளக்கு ஏற்றுவது தொடர்பாக மேயர் பிரியா மற்றும் தவெக எம்எல்ஏ பல்லவி இடையே நேரிடையான மோதல் ஏற்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையை அடுத்த புளியந்தோப்பு பகுதியில் அமைந்துள்ள உருது நடுநிலைப் பள்ளியின் புதிய கட்டடத் திறப்பு விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்டு, புதிய கட்டடத்தை முறைப்படி திறந்து வைத்து விழாக் குத்துவிளக்கினை ஏற்றினார்.

விளக்கேற்றி முடித்தவுடன், மரபுப்படி தனக்கு அருகில் நின்றிருந்த தவெக சட்டமன்ற உறுப்பினர் பல்லவியிடம் மெழுகுவர்த்தியைக் கொடுக்காமல், அவரைத் தாண்டி அடுத்ததாக நின்றிருந்த இந்திய ஆட்சிப் பணி அதிகாரியிடம் மேயர் பிரியா அதனை நேரடியாக வழங்கியுள்ளார். 

மெழுகுவர்த்தியை வாங்குவதற்காகச் சட்டமன்ற உறுப்பினர் பல்லவி கையை நீட்டி முற்பட்டபோதும், மேயர் அதனைப் பொருட்படுத்தாமல் தவிர்த்ததாகக் கூறப்படுகிறது. இதனால் மேடையில் பகிரங்கமாகத் தனக்கு நேர்ந்த அவமதிப்பால் கடும் அதிருப்தியடைந்த சட்டமன்ற உறுப்பினர் பல்லவி, விழா நிறைவடையும் முன்பே நிகழ்ச்சியிலிருந்து உடனடியாக வெளியேறினார்.

நம்மாழ்வார்பேட்டையில் இரண்டாவது மோதல்:

இந்த முதல் சம்பவத்தின் பரபரப்பு அடங்குவதற்குள், அடுத்ததாக நம்மாழ்வார்பேட்டை சுப்பராயன் தொடக்கப்பள்ளியில் மற்றொரு அரசு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியிலும் மேயர் பிரியா மற்றும் சட்டமன்ற உறுப்பினர் பல்லவி ஆகிய இருவரும் ஒன்றாகப் பங்கேற்றனர்.

முந்தைய கசப்பான சம்பவத்தைச் சரிசெய்யும் நோக்கில், இம்முறை மேயர் பிரியா குத்துவிளக்கை ஏற்றிவிட்டு, கையில் இருந்த மெழுகுவர்த்தியைச் சட்டமன்ற உறுப்பினர் பல்லவியிடம் நேரடியாக நீட்டினார். ஆனால், புளியந்தோப்பு பள்ளியில் தனக்கு ஏற்பட்ட அவமதிப்பைக் மனதில் வைத்து ஆத்திரத்திலிருந்த சட்டமன்ற உறுப்பினர் பல்லவி, மேயர் பிரியா கொடுத்த மெழுகுவர்த்தியை வாங்க அடியோடு மறுத்துவிட்டார்.

இதனைத் தொடர்ந்து, அங்கிருந்த அதிகாரிகள் மற்றும் மேயர் தரப்பில் அவரை மீண்டும் குத்துவிளக்கேற்ற வருமாறு வற்புறுத்தி அழைத்தபோதும், அவர் தனது முடிவில் தீர்க்கமாக இருந்து அதனைத் திட்டவட்டமாக நிராகரித்தார்.

பொதுமக்கள் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் இருவேறு அரசுப் பள்ளி மேடைகளில் அரங்கேறிய இந்த மெழுகுவர்த்தி விவகாரம், தற்போது சென்னை மற்றும் தமிழக அரசியல் வட்டாரங்களில் தவெக - திமுக இடையே நிலவும் உள்ளூர் அதிகாரப் போட்டியின் வெளிப்பாடாகப் பார்க்கப்பட்டுப் பெரும் விவாதத்தையும் சர்ச்சையையும் கிளப்பியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory