» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

போலி பாஸ்போர்ட் தயாரித்து வெளிநாடு சென்ற நபர் : விமான நிலையத்தில் அதிரடி கைது!

வெள்ளி 19, ஜூன் 2026 8:05:43 AM (IST)

நெல்லை மாவட்டம் உவரி பகுதியில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு இறந்த நபரின் பெயரில் போலி பாஸ்போர்ட் தயாரித்து வெளிநாட்டிற்குத் தப்பியோடிய தூத்துக்குடியைச் சேர்ந்த நபரை உவரி காவல் ஆய்வாளர் பிரேமா தலைமையிலான போலீசார் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் வைத்து அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் மணப்பாடு மீனவர் காலனியைச் சேர்ந்தவர் லாசர் மகன் பனிச்செல்வின் (47). இவர் கடந்த 20 வருடங்களுக்கு முன்பு நெல்லை மாவட்டம் பரதர் உவரி வடக்கு தெருவில் வசித்து வந்தார். அப்போது அவரது வீட்டின் அருகில் வசித்து வந்த போரஸ் மகன் ஜார்ஜ் என்பவரது முகவரி மற்றும் விபரங்களைப் பயன்படுத்தி, பனிச்செல்வின் போலி பாஸ்போர்ட் தயாரித்து அதன் மூலம் வெளிநாட்டிற்குத் தப்பிச் சென்றுள்ளார். இதற்கிடையே, உண்மையான பாஸ்போர்ட் சொந்தக்காரரான ஜார்ஜ் சில காலத்திற்கு முன்பு உயிரிழந்துவிட்டார்.

வெளிநாட்டில் இருந்தபடியே பனிச்செல்வின் தனது பாஸ்போர்ட்டை புதுப்பிப்பதற்காக ஆன்லைனில் விண்ணப்பித்துள்ளார். பாஸ்போர்ட் சரிபார்ப்பு நடைமுறைக்காக உவரி போலீசார், விண்ணப்பத்தில் இருந்த உவரி வடக்கு தெரு முகவரிக்குச் சென்று விசாரணை நடத்தினர். அப்போது பாஸ்போர்ட்டில் இருந்த புகைப்படத்தைக் காண்பித்து அப்பகுதி மக்களிடம் விசாரித்த போது, அது இறந்துபோன ஜார்ஜ் என்பதும், தற்போது வெளிநாட்டில் இருக்கும் நபர் மணப்பாட்டைச் சேர்ந்த பனிச்செல்வின் என்பதும், அவர் ஜார்ஜ் பெயரில் போலி பாஸ்போர்ட் பெற்று வெளிநாடு சென்றதும் வெளிச்சத்திற்கு வந்தது.

இதனைத் தொடர்ந்து உவரி போலீசார் பனிச்செல்வின் மீது மோசடி வழக்குப் பதிவு செய்து தீவிரமாகக் கண்காணித்து வந்தனர். இந்த நிலையில், வெளிநாட்டில் இருந்து நேற்று விமானம் மூலம் கேரளா மாநிலம் திருவனந்தபுரம் விமான நிலையத்திற்கு வந்து இறங்கிய பனிச்செல்வினை, அங்கு விரைந்து சென்ற உவரி காவல் இன்ஸ்பெக்டர் பிரேமா கையும் களவுமாக மடக்கிப் பிடித்து அதிரடியாகக் கைது செய்தார். கைதான பனிச்செல்வினிடம் போலீசார் இந்த மோசடிக்கு வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என்பது குறித்துத் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory