» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

திமுக கூட்டணியில் இருந்து மதிமுக விலக முடிவு: பொதுக்குழு கூட்டத்தைப் புறக்கணித்த 2 எம்எல்ஏக்கள்

சனி 27, ஜூன் 2026 12:40:00 PM (IST)

சென்னையில் நடைபெறும் மதிமுக பொதுக்குழு கூட்டத்தை அக்கட்சியின் 2 சட்டமன்ற உறுப்பினர்களும் புறக்கணித்துள்ள சூழலில், திமுக கூட்டணியில் இருந்து விலகி தமிழக வெற்றி கழகத்திற்கு (தவெக) ஆதரவளிப்பது குறித்த அதிகாரப்பூர்வ முடிவை வைகோ இன்று மதியம் அறிவிக்க உள்ளார்.

நடந்து முடிந்த 17-ஆவது சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் மதிமுக இடம்பெற்றிருந்தது. அக்கட்சிக்கு மொடக்குறிச்சி, மதுரை தெற்கு, கடையநல்லூர், சீர்காழி ஆகிய 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இந்தத் தொகுதிகளில் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட மதிமுக, கடையநல்லூர் (ராஜேந்திரன்) மற்றும் சீர்காழி (செந்தில் செல்வன்) ஆகிய 2 இடங்களில் வெற்றி பெற்றது.

தற்போது திமுக கூட்டணியில் இருந்து விலகி தவெக அரசுக்கு ஆதரவளிக்க மதிமுக பொதுச் செயலாளர் வைகோ முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. சமீபத்தில் அவர் முதலமைச்சர் விஜயைச் சந்தித்துப் பேசினார். இருப்பினும், மதிமுக உறுப்பினர்கள் திமுக சின்னத்தில் வென்றுள்ளதால், கட்சி மாறினால் பதவி இழக்க நேரிடும் என்ற சட்டச் சிக்கல் நிலவுகிறது.

சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற உயர்நிலைக் குழு கூட்டத்தை சீர்காழி உறுப்பினர் செந்தில் செல்வன் புறக்கணித்தார். திமுக கூட்டணியில் இருந்து விலகுவதை அவர் விரும்பவில்லை என்றும், திமுகவில் இணைய வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாயின.

இதன் தொடர்ச்சியாக, இன்று சென்னை அண்ணாநகரில் நடைபெறும் மதிமுக பொதுக்குழு கூட்டத்தைக் கடையநல்லூர் உறுப்பினர் ராஜேந்திரனும் புறக்கணித்துள்ளார். 2 சட்டமன்ற உறுப்பினர்களும் கூட்டத்தில் பங்கேற்காதது கட்சித் தலைமையைத் தீவிர ஆலோசனைக்கு உள்ளாக்கியுள்ளது.

மதிமுக தவெக-வுக்கு ஆதரவளித்தால், இந்த 2 உறுப்பினர்களும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்ய வேண்டியிருக்கும். அவ்வாறு ராஜினாமா செய்தால், தவெக சார்பில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு கிடைக்குமா என்ற சந்தேகம் அவர்களுக்கு உள்ளது.

அதே நேரத்தில், மதிமுக முதன்மைச் செயலாளரும் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோவைத் நாடாளுமன்றப் பதவியை ராஜினாமா செய்ய வைத்து, இடைத்தேர்தலில் போட்டியிட வைக்கக் கட்சித் தலைமை ஆலோசித்து வருவதாகவும், அவர் வெற்றி பெற்றால் தவெக அமைச்சரவையில் இடம் பெற வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இன்றைய பொதுக்குழு கூட்டத்தில் துரை வைகோவும் பங்கேற்கவில்லை.

இந்த அரசியல் நகர்வுகளுக்கு மத்தியில், மதிமுகவின் அடுத்தகட்ட அரசியல் நிலைப்பாடு மற்றும் இறுதி முடிவு என்ன என்பது குறித்து இன்று மதியம் 3:30 மணிக்கு நடைபெறும் செய்தியாளர்கள் சந்திப்பில் பொதுச் செயலாளர் வைகோ அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory