» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

இபிஎஸ் தலைமையில் அதிமுக தள்ளாடுகிறது: தவெகவில் இணைந்த விஜய பாஸ்கர் பேட்டி

வியாழன் 2, ஜூலை 2026 5:06:22 PM (IST)



எடப்பாடி பழனிசாமியின் தவறான முடிவுகளால் அதிமுக தள்ளாடுகிறது என்று தவெகவில் இணை்நத அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், மற்றும் எம்.ஆர். விஜயபாஸ்கர் குற்றம்சாட்டினர். 

அதிமுக முன்னாள் அமைச்சர்களான சி.விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர் மற்றும் அவர்களின் ஆதரவாளர்கள் தமிழக வெற்றிக் கழகத்தில் இணையும் விழா சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் இன்று நடைபெற்றது. இந்த விழாவில் தவெக பொதுச் செயலாளரும் அமைச்சருமான ஆனந்த், அமைச்சர் செங்கோட்டையன், அமைச்சர் ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

விழாவில் செங்கோட்டையன் வரவேற்புரை ஆற்றினார். தொடர்ந்து, தவெக பொதுச் செயலாளர் ஆனந்த், சி.விஜயபாஸ்கர் மற்றும் எம்.ஆர். விஜயபாஸ்கர் ஆகிய இருவருக்கும் கட்சித் துண்டு அணிவித்து வரவேற்றார். அவர்களுடன் இணைந்த பல அதிமுக நிர்வாகிகளுக்கும் தவெக துண்டு அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.

இணைப்பு விழாவில் பேசிய சி.விஜயபாஸ்கர், புதுக்கோட்டை மாவட்ட மக்களின் கருத்துகளின் அடிப்படையில் இந்த முடிவை எடுத்துள்ளதாகக் குறிப்பிட்டார். தவெக உடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று தேர்தலுக்கு முன்பும் பின்பும் அதிமுக தலைமையிடம் கடுமையாக வலியுறுத்தியும் தலைமை அதற்குச் செவிமடுக்கவில்லை எனக் குற்றம் சாட்டினார். 

எம்ஜிஆரால் தீய சக்தி என அடையாளம் காட்டப்பட்ட திமுகவோடு கூட்டு சேர்ந்து ஆட்சி அமைக்க எடப்பாடி பழனிசாமி முயன்றதில் தங்களுக்கு உடன்பாடு இல்லை என்றும் சாடினார். மேலும், தமிழகத்தின் அரசியல் திசையைத் தீர்மானித்திருக்கும் மக்கள் விரும்பிய மாற்றத்தின் சக்தி முதல்வர் விஜய் என்றும், டெல்டாவில் தமிழகமே திரும்பிப் பார்க்கும் வகையில் அடுத்த மாபெரும் இணைப்பு விழா நடக்கும் என்றும் தெரிவித்தார்.

தலைமை தவறான முடிவுகளை எடுக்கிறது

முன்னதாகப் பேசிய எம்.ஆர். விஜயபாஸ்கர், எடப்பாடி பழனிசாமியைத் தாங்கள் சேர்ந்துதான் அதிமுக பொதுச் செயலாளராக ஆக்கினோம் என்றும், ஆனால் அவரது தவறான முடிவுகளால் அந்த இயக்கம் தள்ளாடிக் கொண்டிருக்கிறது என்றும் விமர்சித்தார். 

உண்மையை எடுத்துச் சொல்பவர்களை அவர் துரோகி எனக் கூறுவதாகக் குறிப்பிட்ட அவர், ஒட்டுமொத்த கரூர் மாவட்ட அதிமுக நிர்வாகிகளும் இன்று தவெகவில் இணைந்துள்ளதாகத் தெரிவித்தார். மேலும், முதல்வர் விஜய் இன்னும் சில தினங்களில் கரூர் வரவிருப்பதாகவும், அந்த நிகழ்ச்சியில் இன்னும் அதிக அளவில் தொண்டர்கள் தவெகவில் இணைவார்கள் என்றும் கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory