» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

நாகர்கோவில் கிளைச் சிறையில் கைதிகளின் பாதுகாப்பு கேள்விக்குறி: சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு!

வெள்ளி 17, ஜூலை 2026 3:43:19 PM (IST)

Nagarcoilmurder.jpg

நாகர்கோவில் கிளைச் சிறையில் கைதி சபரிவர்மன் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் எதிரொலியாக, கைதிகளின் பாதுகாப்பை உறுதி செய்யச் சிறைத்துறையும் தமிழக அரசும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம் ஈத்தங்காடு பகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி சபரிவர்மன் (33), தனது பெட்டிக்கடையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை (குட்கா) விற்றதாக கடந்த ஜூலை 9 அன்று கைது செய்யப்பட்டு நாகர்கோவில் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த ஜூலை 13 அன்று அதிகாலை அவர் உயிரிழந்துவிட்டதாக அவரது குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

சபரிவர்மன் அடைக்கப்பட்டிருந்த அறையில் அவருடன் 21 கைதிகள் இருந்தனர். சிறைச்சூழல் காரணமாக அவர் உணவு உட்கொள்ள மறுத்து, ஜூலை 12 இரவில் தன்னை விடுவிக்குமாறு கூச்சலிட்டு வார்டன்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். நள்ளிரவிலும் அவர் சத்தமிட்டதால் தங்களுக்கு இடையூறு ஏற்படுவதாகக் கூறி சக கைதிகள் அவருடன் தகராறு செய்து தாக்கியுள்ளனர். அப்போது அங்கு வந்த சிறை வார்டன்கள் திருமலைநம்பி, ஜெகன் மற்றும் சிவகுமார் ஆகியோரும் சபரிவர்மனைத் தாக்கியுள்ளனர். ஜூலை 13 அதிகாலை 2:30 மணியளவில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு சபரிவர்மன் உயிரிழந்ததைத் தொடர்ந்து, அவரது உடல் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது.

பிரேதப் பரிசோதனை அறிக்கையின்படி, சபரிவர்மன் உடலில் 19 காயங்களுடன் கடுமையான ரத்தக்கட்டு இருந்தது உறுதியானது. கழுத்தின் பின்பகுதி மற்றும் தலையின் மேல் பகுதியில் பலமான தாக்குதல்கள் நடத்தப்பட்டதும், கை மற்றும் கால்கள் அழுத்தமாகக் கட்டப்பட்டதற்கான தழும்புகளும் கண்டறியப்பட்டுள்ளன. கடுமையான மூச்சுத்திணறல் காரணமாக அவர் உயிரிழந்திருப்பது நுரையீரலில் உள்ள அடையாளங்கள் மூலம் தெளிவாகியுள்ளது.

நாகர்கோவில் சிறையில் தலா 800 சதுரஅடி கொண்ட 10 அறைகள் உள்ளன. மொத்தம் 300 கைதிகளை அடைக்கும் வசதி கொண்ட இச்சிறையில், உடல் சோர்வு மற்றும் பலவீனமானவர்களைப் பெரும் குற்ற வழக்குகளுடன் தொடர்புடைய கைதிகளுடன் ஒரே அறையில் அடைப்பது பாதுகாப்பற்ற சூழலை உருவாக்குவதாகப் புகார்கள் எழுந்துள்ளன. 

கடந்த 1996-ஆம் ஆண்டு இச்சிறைக்குள் புகுந்து பிரபல ரவுடி லிங்கம் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்குப் பிறகு, தற்போது மீண்டும் ஒரு கொலைச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. எனவே, சிறை கைதிகளின் பாதுகாப்பை உறுதி செய்யச் சிறைத்துறையும் தமிழக அரசும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory