» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தாயைக் கொன்று ஜாமீனில் வந்த வாலிபர் பக்கத்து வீட்டுப் பெண்ணைக் குத்திக் கொன்ற கொடூரம்!
செவ்வாய் 25, ஆகஸ்ட் 2026 8:48:42 AM (IST)
களியக்காவிளை அருகே தாயைக் கொலை செய்த வழக்கில் ஜாமீனில் வெளிவந்த வாலிபர், பக்கத்து வீட்டுப் பெண்ணைக் கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே உள்ள கைதக்குழி நாரகம்விளை பகுதியைச் சேர்ந்தவர் ஸ்டீபன். இவரது மகன் சிஜூ (24). சிஜூ கடந்த 2021-ஆம் ஆண்டு தனது தாயைக் கொலை செய்த வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். மனநலம் பாதிக்கப்பட்டவராகக் கருதப்படும் இவர், சமீபத்தில் ஜாமீனில் வெளியே வந்து தந்தையுடன் வசித்து வந்தார்.
நேற்று முன்தினம் சிஜூ ரத்தம் வடிந்த கத்தியுடன் தெருவில் அங்குமிங்கும் சுற்றித் திரிந்துள்ளார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாகக் களியக்காவிளை காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சிஜூவை மடக்கிப் பிடித்து கத்தியைப் பறிமுதல் செய்தனர். விசாரணையில் மனநிலை சரியில்லாமல் இருந்ததால் அவரைப் பக்குவமாக அவரது வீட்டிற்கு அழைத்துச் சென்றனர்.
சிஜூவின் வீட்டிற்குச் சென்ற போலீசார், அவரது பக்கத்து வீட்டிற்குச் சென்று பார்த்தபோது அங்கே பெண் ஒருவர் ரத்த வெள்ளத்தில் பிணமாகக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். விசாரணையில், கொல்லப்பட்டவர் அசோக்குமாரின் மனைவி லீலா (56) என்பதும், அவர் சிஜூவிற்கு உறவினர் என்பதும் தெரியவந்தது.
மனநலம் பாதிக்கப்பட்ட சிஜூ வழக்கமாக லீலாவின் வீட்டிற்குச் சென்று சாப்பிடுவது வழக்கம். லீலாவும் அவரை மென்மையாகக் கவனித்து வந்துள்ளார். இந்நிலையில், எதிர்பாராதவிதமாகச் சிஜூ, லீலாவைக் கத்தியால் குத்தியும், தலையில் கல்லைத் தூக்கிப் போட்டும் படுகொலை செய்துள்ளது வெளிச்சத்திற்கு வந்தது.
இதையடுத்து லீலாவின் உடலைக் கைப்பற்றிய போலீசார், உடற்கூறாய்விற்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தாயைக் கொன்ற வாலிபர் மீண்டும் ஒரு பெண்ணைக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

குமரி மாவட்டத்தில் ரூ.1041 கோடியில் நெடுஞ்சாலை பணிகள் : ஆட்சியர் மு.பிரதாப் ஆய்வு!
புதன் 26, ஆகஸ்ட் 2026 12:04:00 PM (IST)

திருச்செந்தூருக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கம்: அரசுப் போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு!
புதன் 26, ஆகஸ்ட் 2026 10:46:24 AM (IST)

ஆகாஷ் டெலிஷன் மரணத்தில் 16 பேர் மீது புகார்; 6 பேர் மட்டுமே சேர்ப்பு: தாயார் ஆனந்தி ஆதங்கம்!
புதன் 26, ஆகஸ்ட் 2026 10:41:02 AM (IST)

தோவாளையிலிருந்து கேரளாவுக்கு மலர்கள் கொண்டு செல்ல சிறப்பு 'மேமு' ரயில்: பயணிகள் சங்கம் கோரிக்கை!
செவ்வாய் 25, ஆகஸ்ட் 2026 5:52:59 PM (IST)

கொளத்தூரில் த.வெ.க. வெற்றியை எதிர்த்து ஸ்டாலின் வழக்கு: அடுத்த வாரம் விசாரணை!
செவ்வாய் 25, ஆகஸ்ட் 2026 5:02:57 PM (IST)

இது என்ன பொதுக்கூட்டமா? சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிசாமி பேச்சால் சபாநாயகர் ஆவேசம்!
செவ்வாய் 25, ஆகஸ்ட் 2026 4:35:13 PM (IST)


