» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

தனிநபருக்கான வருமான வரி உச்சவரம்பு 12 லட்சமாக உயர்வு : மத்திய பட்ஜெட் முக்கிய அம்சங்கள்

சனி 1, பிப்ரவரி 2025 3:20:59 PM (IST)



தனிநபருக்கான வருமான வரி உச்சவரம்பு 7 லட்சத்தில் இருந்து 12 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இனி மாதம் 1 லட்சம் வரை சம்பாதிப்பவர்கள் வரி கட்ட தேவையில்லை" என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.

2025-26-ம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. 8வது முறையாக நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கிடையே பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

பட்ஜெட் உரையில் பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தனிநபருக்கான வருமான வரி உச்சவரம்பு 7 லட்சத்தில் இருந்து 12 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இனி மாதம் 1 லட்சம் வரை சம்பாதிப்பவர்கள் வரி கட்ட தேவையில்லை" என்று அறிவித்தார்.

மேலும் பேசிய அவர், வருமான வரிவிதிப்பு எளிமைப்படுத்தப்படும். வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான வரம்பு 4 ஆண்டுகளாக உயரத்தப்ட்டுள்ளது. வருமான வரி அடுக்குகளில் மாற்றம் கொண்டுவரப்படும். அடுத்த வாரம் புதிய வருமான வரி சட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. நடுத்தர மக்களின் சுமையை குறைக்கும் விதமாக புதிய வருமான வரி சட்ட மசோதா இருக்கும். புதிய சட்ட மசோதாவில் பழைய சட்டத்தின் 50% விதிகள் இருக்கும்.

புதிய வரி முறையின் வரி அடுக்கில் சில திருத்தங்களை நான் முன்மொழிகிறேன். ஆண்டுக்கு ரூ.4 லட்சம் வரையிலான வருமானத்திற்கு வரி இல்லை. ரூ.4-8 லட்சம் வரையிலான வருமானத்திற்கு 5% வரி செலுத்த வேண்டும். ரூ.8-12 லட்சம் வரையிலான வருமானத்திற்கு 10% வரியும் ரூ.12-16 லட்சம் வரையிலான வருமானத்திற்கு 15% வரியும் ரூ.16-20 லட்சம் வரையிலான வருமானத்திற்கு 20% வரியும் ரூ.20-24 லட்சம் வரையிலான வருமானத்திற்கு 25% வரியும் 24 லட்சத்திற்கும் மேலான வருமானத்திற்கு 30% வரியும் விதிக்கலாம்" என்று தெரிவித்தார்.

முக்கிய அம்சங்கள் 

* சிறு குறு தொழில் நிறுவனங்களுக்கு கடன் உச்சவரம்பு ரூ.10 கோடியாக உயர்வு

* உலக அளவில் பொம்மை தயாரிப்பு மையமாக இந்தியாவை மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

* 5 லட்சம் எஸ்.சி., எஸ்.டி., பெண் தொழில் முனைவோருக்கு ரூ.2 கோடி வரை கடன் வழங்கப்படும்.

* பருப்பு உற்பத்தியில் தன்னிறைவு அடைய இலக்கு நிர்ணயம் செய்யப்படுகிறது.

* மக்கானா ( தாமரை விதைகள்) உற்பத்தியை அதிகரிக்க மக்கானா வாரியம் அமைக்கப்படும்.

* அசாமில் 12.7 லட்சம் மெட்ரிக் டன் யூரியா உற்பத்தி செய்யும் விதமாக தொழிற்சாலை அமைக்கப்படும்.

* 2025-26ஆம் நிதியாண்டில் நாட்டில் 200 புற்றுநோய் மையங்கள் அமைக்கப்படும்.

* சுவிகி, சோமோட்டோ உள்ளிட்ட ஆன்லைன் செயலி ஊழியர்களுக்கு அரசு சார்பில் அடையாள அட்டை வழங்கப்படும். இதன்மூலம் ஒரு கோடி ஊழியர்கள் பயன்பெறுவர்.

* சாலையோர வியாபாரிகளுக்கான கடன் உதவி ரூ.30,000 ஆக அதிகரிக்கப்படும்.

* புதிய வரி சீர்திருத்தத்தில் நடுத்தர வருமான வகுப்பினருக்கு சிறப்பு கவனம் செலுத்தப்படும்,

* புதிய வருமான வரி மசோதாவில் பழைய சட்டங்களில் உள்ள சரத்துகளில் 50 சதவிகிதம் இடம்பெறும்.

* விவசாயிகளுக்கான 'கிசான் கிரெடிட் கார்டு' உச்சவரம்பு ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்படும்.

* தனம், தானிய கிஷான் திட்டம் மாநில அரசின் பங்களிப்புடன் செயல்படுத்தப்படும். இந்த திட்டத்தில் உற்பத்தி குறைவாக உள்ள 100 மாவட்டங்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும்.

* வேலைவாய்ப்புகளை எளிதாக்கும் வகையில் மக்கள் வாழக்கூடிய இடங்களிலேயே தொழில்துறையை உருவாக்கும் முயற்சிகளை மத்திய அரசு மேற்கொள்ளும்.

* சிறு குறு நிறுவனங்களுக்கு ரூ.20 கோடி கடன் உத்தரவாதம் வழங்கப்படும்.

* ஏ,ஐ. (AI) தொழில்நுட்பத்தை விவசாயம் உள்ளிட்ட துறைகளுக்கு பயன்படுத்தும் வகையில் 500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

* ஆன்லைன் தொழில் சார்ந்த ஊழியர்களுக்கு புதிய காப்பீட்டு திட்டம் கொண்டுவரப்படும்.

* அணு உலைகள் மூலம் 2047-ஆம் ஆண்டிற்குள் 100 ஜிகாவாட் மின் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்படுகிறது.

* 52 சுற்றுலாத் தளங்கள் மாநில அரசின் பங்களிப்புடன் மேம்படுத்தப்படும்.

* அடுத்த வாரம் புதிய வருமான வரி சட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

* வெளிநாட்டு முதலீடுகளை அதிகளவில் ஈர்க்க தனி அமைப்பு உருவாக்கப்படும்.

* பருப்பு உற்பத்தியை அதிகரிக்க 6 ஆண்டு திட்டம் செயல்படுத்தப்படும்.

* சுகாதாரம், வேளாண் உள்ளிட்ட 3 துறைகளில் ஏ.ஐ. (AI) மையம் அமைக்கப்படும்.

* 36 உயிர் காக்கும் புற்றுநோய் மருத்துகளுக்கு வரி விலக்கு அளிக்கப்படும்.

* அடுத்த ஆண்டு மருத்துவக் கல்லூரிகளில் 10,000 கூடுதல் இடங்கள் ஏற்படுத்தப்படும்.

* உள்கட்டமைப்பு முதலீடுகளுக்காக ரூ.1.5 லட்சம் கோடி, மாநிலங்களுக்கு வட்டியில்லாத கடன் வழங்கப்படும்.

* அடுத்த 3 ஆண்டுகளில் அனைத்து மாவட்ட மருத்துவமனைகளில் புற்றுநோய் சிகிச்சை மையம் அமைக்கப்படும்.

* ஒவ்வொரு வீட்டுக்கும் குடிநீர் குழாய் என்ற திட்டத்தில் 100 சதவீத இலக்கை அடைய, ஜல் ஜீவன் திட்டம் 2028ஆம் ஆண்டு வரை நீட்டிக்கப்படுகிறது.

* பாரத் நெட் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் உள்ள அரசு உயர்நிலை பள்ளிகளில் பிராட்பேண்ட் இணைய வசதி செய்யப்படும்.

* கடன்களுக்கு வட்டி செலுத்த 2025-26 பட்ஜெட்டில் ரூ12.76 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

துறை வாரியாக நிதி ஓதுக்கீடு விபரம்

பாதுகாப்புத்துறை – ரூ.4.91 லட்சம் கோடி

ஊரக வளர்ச்சித்துறை – ரூ.2.66 லட்சம் கோடி

உள்துறை – ரூ.2.33 லட்சம் கோடி

விவசாயம் – ரூ.1.17 லட்சம் கோடி

கல்வி – ரூ.1.28 லட்சம் கோடி

மருத்துவம் – ரூ.98,311 கோடி

நகர்ப்புற வளர்ச்சி – ரூ.96,777 கோடி

தகவல் தொழில்நுட்பம் – ரூ.95,298 கோடி

ஆற்றல் – ரூ.81,174 கோடி

வர்த்தகம் – ரூ.65,553 கோடி

சமூக நலன் – ரூ.60,052 கோடி

அறிவியல் சார்ந்த துறைகள் – ரூ.55,679 கோடி

இதனைத்தொடர்ந்து பட்ஜெட் உரை முடிந்த நிலையில் பிப்.3-ம் தேதிக்கு நாடாளுமன்ற அவைகள் ஒத்திவைக்கப்பட்டன.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory