» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

கோடை விடுமுறையில் மாணவர்கள் தங்கள் திறமைகளை மெருகேற்றிக் கொள்ள வேண்டும்.: பிரதமர் மோடி

திங்கள் 31, மார்ச் 2025 8:31:11 AM (IST)

கோடை விடுமுறையில் மாணவர்கள் தங்கள் திறமைகளை மெருகேற்றிக் கொள்ள வேண்டும்  என்று மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி தெரிவித்தார்.

ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை ‘மனதின் குரல்’ என்கிற வானொலி நிகழ்ச்சியின் மூலம் பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். அந்த வகையில் மார்ச் மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையான நேற்று பிரதமர் மோடி 120-வது மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசினார்.

அப்போது அவர் பல்வேறு மாநிலங்களில் கொண்டாடப்படும் பண்டிகைகள், யோகா தினம், தண்ணீர் சேமிப்பு, கோடைகால விடுமுறை தொடர்பாக மாணவர்களுக்கான அறிவுரை என பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினார். நிகழ்ச்சியில் மோடி பேசியதாவது: பல்வேறு மாநிலங்கள் இன்று தங்கள் பாரம்பரிய புத்தாண்டைக் கொண்டாடுகின்றன. மேலும் பல மாநிலங்கள் வரும் நாட்களில் புத்தாண்டை கொண்டாட உள்ளன. ரமலான் பண்டிகையும் வருகிறது. இதனால் நாடு முழுவதும் உற்சாகமான சூழ்நிலை நிலவுகிறது. இந்த பண்டிகைகளை கொண்டாடும் மக்கள் அனைவருக்கும் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

நமது இந்தப் பண்டிகைகள் வெவ்வேறு பகுதிகளில் இருக்கலாம். ஆனால் அவை இந்தியாவின் பன்முகத்தன்மையில் ஒற்றுமை எவ்வாறு பின்னிப் பிணைந்துள்ளது என்பதைக் காட்டுகின்றன. நமது முன்னேற்றப் பாதையில், இந்த ஒற்றுமை உணர்வை நாம் தொடர்ந்து வலுப்படுத்த வேண்டும்.

மாணவர்களுக்கு அறிவுரை

பள்ளி மாணவர்களுக்கான கோடை விடுமுறை இன்னும் சில வாரங்களில் வரவிருக்கிறது. இந்த விடுமுறை நாட்களை மாணவர்கள் தங்கள் திறமைகளை மெருகேற்றிக் கொள்வதற்கும், புதிய பொழுதுபோக்கை கற்றுக் கொள்வதற்கும் பயன்படுத்த வேண்டும்.

மாணவர்களுக்கு பல்வேறு செயல்பாடுகளை வழங்குபவர்கள் #myholidays என்ற ஹேஷ்டேக்கைப் பயன்படுத்துமாறும், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் #holidaymemories என்ற ஹேஷ்டேக்குடன் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளுமாறும் நான் கேட்டுக் கொள்கிறேன்.

தண்ணீரை சேமிக்க வலியுறுத்தும் "மழையைப் பிடிக்கவும்” என்கிற பிரசாரத்தை இங்கே நினைவுபடுத்த விரும்புகிறேன். மழைத்துளிகளை பாதுகாப்பதன் மூலம், வீணாகாமல் ஏராளமான தண்ணீரை நாம் சேமிக்க முடியும்.

கடந்த 7-8 ஆண்டுகளில், புதிதாக கட்டப்பட்ட தொட்டிகள், குளங்கள் மற்றும் பிற நீர் மறுசீரமைப்பு கட்டமைப்புகள் மூலம் 1.10 கோடி கன மீட்டருக்கும் அதிகமான நீர் சேமிக்கப்பட்டுள்ளது.

நாட்டு மக்களின் சிறிய முயற்சிகள் மூலம், 1.10 கோடி கன மீட்டர் தண்ணீரை சேமிக்க முடிந்தது. இது போன்ற முயற்சிகளை பாராட்டுகிறேன். சமூக அளவில் இதுபோன்ற முயற்சிகளில் இணையுமாறு மக்களை வலியுறுத்துகிறேன்.

சர்வதேச யோகா தினத்துக்கு 100 நாட்களுக்கும் குறைவான நாட்களே உள்ளன. நீங்கள் இன்னும் உங்கள் வாழ்க்கையில் யோகாவைச் சேர்க்கவில்லை என்றால், இப்போதே அதைச் செய்யுங்கள்.

ஜூன் 21-ந் தேதி கொண்டாடப்படும் சர்வதேச யோகா தினம் தற்போது ஒரு பிரமாண்டமான கொண்டாட்டமாக மாறியுள்ளது. இந்த ஆண்டுக்கான யோகா தினம், ‘ஒரே பூமி ஒரே ஆரோக்கியத்துக்கான யோகா’ என்பதை கருப்பொருளாக கொண்டுள்ளது.

யோகாவை மூலமாக கொண்டு உலகம் முழுவதையும் ஆரோக்கியம் நிறைந்ததாக மாற்ற விரும்புகிறோம். இது இந்தியாவிலிருந்து மனிதகுலத்திற்கு கிடைத்த விலைமதிப்பற்ற பரிசு. இது எதிர்கால சந்ததியினருக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இவ்வாறு மோடி பேசினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory