» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

நடிகர்கள் அல்லு அர்ஜுன், எஸ்.ஜே. சூர்யாவுக்கு விருது : தெலங்கானா அரசு அறிவிப்பு

வெள்ளி 30, மே 2025 10:30:16 AM (IST)



தெலங்கானா அரசு சார்பில் சிறந்த நடிகர் விருது அல்லு அர்ஜுனுக்கு வழங்கப்பட உள்ளது. துணை நடிகராக எஸ்.ஜே. சூர்யா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தெலங்கானாவில் முதல் முறையாக திரைத் துறை விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டது. இந்த விருதுகள் வரும் ஜூன் 14-ம் தேதி வழங்கப்பட உள்ளது. ஒருங்கிணைந்த ஆந்திர அரசு சார்பில் திரைப்படக் கலைஞர்களுக்கா ஆண்டுதோறும் நந்தி விருதுகள் வழங்கப்பட்டு வந்தன. ஆனால், தெலங்கானா தனி மாநிலமாக பிரிந்த பிறகு திரைத் துறை விருதுகள் தெலங்கானா சார்பில் வழங்கப்படவில்லை.

இந்நிலையில், அம்மாநிலத்தின் சிறந்த நாட்டுப்புற பாடல் கலைஞரான மறைந்த கத்தர் பெயரில் திரைத் துறை விருதுகளை வழங்க அம்மாநில அரசு சமீபத்தில் முடிவு செய்தது. இதற்காக நடிகை ஜெயசுதா தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இதில் மாநிலம் உருவான கடந்த 2014-ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் 2023-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி வரை வெளியான திரைப்படங்களில் இருந்து சிறந்த திரைப்படம் என்ற ஒரு பிரிவில் மட்டும் ஆண்டுக்கு ஒரு விருது வழங்க முடிவு செய்யப்பட்டது.

இதன்படி, சிறந்த திரைப்படங்கள் பட்டியலை ஜெயசுதா தலைமையிலான குழு நேற்று அறிவித்தது. அதேநேரம், 2024-ம் ஆண்டுக்கு மட்டும் 14 பிரிவுகளில் சிறந்த விருது பெறுவோர் பட்டியலை இக்குழு நேற்று அறிவித்தது. அதன்படி 2024-ல் வெளியான கல்கி 2898 திரைப்படம் சிறந்த படமாக தேர்வு செய்யப்பட்டது. சிறந்த இயக்குநராக இப்படத்தை இயக்கிய நாக் அஷ்வின் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 2-வது சிறந்த திரைப்படமாக பொட்டேல், 3-வது சிறந்த திரைப்படமாக லக்கி பாஸ்கர் திரைப்படமும் தேர்வாகி உள்ளது.

சிறந்த நடிகர் விருது அல்லு அர்ஜுனுக்கு வழங்கப்பட உள்ளது. இவர் புஷ்பா-2 திரைப்படத்துக்காக இவ்விருதினை பெற உள்ளார். சிறந்த நடிகையாக நிவேதா தாமஸ் (35 இதி சின்ன கத காது) தேர்வு செய்யப்பட்டுள்ளார். சிறந்த துணை நடிகராக எஸ்.ஜே. சூர்யா (சரிபோதா சனிவாரம்) தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

மேலும், சிறந்த பாடகராக சித் ஸ்ரீராமும், சிறந்த பாடகியாக ஸ்ரேயா கோஷலும், தேர்வாகி உள்ளனர். தெலுங்கு திரைப்படம் மட்டுமின்றி சிறந்த உருது திரைப்படத்துக்கும் வரும் ஜூன் 14-ம் தேதி, தெலங்கானா அரசு 21 விருதுகளை வழங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory