» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

தென் மாநிலங்களை அதிகாரமற்றதாக மாற்ற பாஜக முயற்சி: ராகுல் காந்தி கடும் குற்றச்சாட்டு

வெள்ளி 17, ஏப்ரல் 2026 4:36:14 PM (IST)

நாட்டின் அரசியல் வரைபடத்தை மாற்றவும், தென் மாநிலங்களை அதிகாரமற்றதாக ஆக்கவும் பாஜக முயற்சிப்பதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் மகளிர் இடஒதுக்கீடு மற்றும் தொகுதி மறுவரையறை குறித்து ராகுல் காந்தி பேசியதாவது: தற்போது கொண்டு வரப்பட்டுள்ள மசோதா உண்மையான மகளிர் இடஒதுக்கீடு மசோதா கிடையாது. இது பெண்களுக்கு அதிகாரம் அளிக்காது; மாறாக, இந்தியாவின் தேர்தல் வரைபடத்தை மாற்றும் முயற்சியாகும். சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பைத் தவிர்க்கவும், ஓபிசி (OBC) பிரிவினருக்கான பிரதிநிதித்துவத்தைப் பறிக்கவும் இந்த மசோதா பயன்படுத்தப்படுகிறது. அடுத்த 15 ஆண்டுகளுக்குச் சாதிவாரி அடிப்படையில் பிரதிநிதித்துவம் கிடைப்பதைத் தடுக்கும் நோக்கில் மத்திய அரசு செயல்படுகிறது.

பாஜக ஆட்சியில் நீடிக்க வேண்டும் என்பதற்காகத் தெற்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களின் பங்களிப்பைப் பறிக்க முயல்கிறது. மகளிர் இடஒதுக்கீடு என்ற போர்வையில் தொகுதி மறுவரையறையைக் கொண்டு வருவது தேச விரோத செயல். தென் மாநிலங்கள் மற்றும் சிறிய மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை யாராலும் தொட முடியாது என்பதை உறுதி அளிக்கிறேன். பாஜகவின் இந்த முயற்சி ஒருபோதும் நிறைவேறாது.

"நாட்டில் நிலவும் அரசியல் சூழலைக் கண்டும், தங்கள் பலம் குறைந்து வருவதைக் கண்டும் அஞ்சி பாஜக இத்தகைய முயற்சிகளில் இறங்கியுள்ளது. அசாம் மற்றும் ஜம்மு காஷ்மீரில் செய்ததைப் போல தேசிய அளவிலும் செய்துவிடலாம் என அவர்கள் கற்பனை செய்கிறார்கள். அரசமைப்பை விட மனுஸ்மிருதியே பாஜகவுக்கு முக்கியமாக உள்ளது," என ராகுல் சாடினார்.

மசோதா நிறைவேறாது என்பது தெரிந்தும், பிரதமர் மோடி இரண்டு செய்திகளை மக்களிடம் கொண்டு செல்ல முயல்கிறார். ஒன்று, அரசியல் வரைபடத்தை மாற்றுவது; மற்றொன்று, தான் பெண்களுக்கு ஆதரவானவர் எனக் காட்டுவது. பணமதிப்பிழப்பு உள்ளிட்ட திட்டங்களைக் கொண்டு வந்த 'வித்தைக்காரர்' இப்போது பிடிபட்டுவிட்டார் எனப் பிரதமர் மோடியை ராகுல் காந்தி விமர்சித்தார்.

பிரதமர் மோடி குறித்த ராகுல் காந்தியின் விமர்சனத்திற்கு பாஜக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அவையில் கோஷங்களை எழுப்பிய அவர்கள், ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தினர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory