» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

நடத்தை சந்தேகத்தில் மனைவியை வெட்டிக்கொன்ற கணவர்: மகன் கெஞ்சியும் கேட்காமல் கொடூரம்!

சனி 6, ஜூன் 2026 12:07:22 PM (IST)

தெலுங்கானாவில் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால், தனது மகன் காலில் விழுந்து கெஞ்சியதையும் பொருட்படுத்தாமல், மனைவியை வீதி வரை விரட்டி விரட்டிக் கத்தியால் வெட்டிக்கொலை செய்த ஆட்டோ ஓட்டுநரை போலீசார் கைது செய்துள்ளனர்.

தெலுங்கானா மாநிலம் அட்டப்பூர் அடுத்த தேஜஸ்வினி நகர் பகுதியைச் சேர்ந்தவர் அவினாஷ். இவர் ஆட்டோ ஓட்டுநராகப் பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி கோமளி (31). இந்தத் தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். குடும்பப் பொருளாதாரச் சூழ்நிலை காரணமாகக் கோமளி அப்பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் காவலாளியாகவும், மேலும் அங்குள்ள சில வீடுகளில் பகுதிநேர வீட்டு வேலைகளையும் செய்து வந்தார்.

கோமளி தனது அன்றாட வீட்டு வேலைகளை முடித்துவிட்டு வீட்டிற்குத் தாமதமாகத் திரும்புவதை வழக்கமாகக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அவினாஷிற்குத் தனது மனைவியின் நடத்தையில் பலத்த சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாகக் கணவன், மனைவி இடையே கடந்த சில மாதங்களாகவே வீட்டில் அடிக்கடி கடுமையான வாக்குவாதங்களும் தகராறுகளும் ஏற்பட்டு வந்துள்ளன.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு அவினாஷ் வழக்கம் போலக் குடித்துவிட்டு முழு மதுபோதையில் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது கோமளியிடம் மீண்டும் நடத்தைக் குறித்துக் கேட்டு வம்பிழுத்துள்ளார். இந்த வாக்குவாதம் முற்றி, இரவு தொடங்கி அடுத்த நாள் காலை வரை விடிய விடியத் தகராறு நீடித்துள்ளது.

இதனால் கடுமையான ஆத்திரத்திற்குள்ளான அவினாஷ், திடீரென வீட்டிலிருந்த கூர்மையான கத்தியை எடுத்துத் தனது மனைவி கோமளியை வெறித்தனமாகத் தாக்கத் தொடங்கினார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர்களின் மூத்த மகன், அலறியடித்து ஓடிவந்து தனது தந்தையின் காலைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு, "அம்மாக்களை ஒன்றும் செய்ய வேண்டாம், கொன்றுவிடாதீர்கள்" எனக் கண்ணீர் மல்கக் கெஞ்சியுள்ளார்.

மகன் தனது காலைப் பிடித்துக் கெஞ்சிய அந்தச் சிறிய இடைவெளியைப் பயன்படுத்திக் கொண்ட கோமளி, கணவரின் பிடியிலிருந்து எப்படியோ நழுவி, உயிரைக் காப்பாற்றிக் கொள்ள வீட்டை விட்டு வெளியே வீதிக்கு ஓடினார். எனினும், ஆத்திரம் அடங்காத அவினாஷ் கத்தியுடன் மனைவியைப் பின்தொடர்ந்து ஓடி, தெருவில் வைத்து அவரை ஓட ஓட விரட்டிச் சரமாரியாக வெட்டினார்.

கோமளியின் மரண ஓலமும் அலறல் சத்தமும் கேட்டு அடுக்குமாடி குடியிருப்பில் இருந்த பொதுமக்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் உடனே வெளியே ஓடி வந்தனர். பொதுமக்கள் திரளுவதைக் கண்ட அவினாஷ், கத்தியுடன் அங்கிருந்து தப்பியோடினார். ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த கோமளியை அங்கிருந்தவர்கள் உடனடியாக மீட்டு, அவசர சிகிச்சைக்காக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். 

ஆனால், அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றிச் சிறிது நேரத்திலேயே கோமளி பரிதாபமாக உயிரிழந்தார். இக்கொடூரச் சம்பவம் குறித்துப் பெறப்பட்ட புகாரின் அடிப்படையில், உள்ளூர் போலீசார் முறைப்படி வழக்குப் பதிவு செய்து, தலைமறைவாக இருந்த ஆட்டோ ஓட்டுநர் அவினாஷை சில மணி நேரங்களிலேயே அதிரடியாகக் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory