» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர் மழை: பாபநாசம் அணை நீர்மட்டம் 100 அடியை தாண்டியது
ஞாயிறு 19, நவம்பர் 2023 9:14:04 AM (IST)
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த தொடர் மழையால் பாபநாசம் அணை நீர்மட்டம் 100 அடியை தாண்டியது.
தென்மாவட்ட விவசாயிகள் ஒவ்வொரு ஆண்டும் பாபநாசம் அணையில் நீர்மட்டம் உயர்வதை பெரிதும் எதிர்பார்ப்பார்கள். ஏனெனில் இந்த அணையின் மூலமாகத்தான் நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும். இந்த அணையின் நீர்மட்டம் 80 அடியில் இருந்தாலே பாசனத்திற்காக தண்ணீர் திறக்க வேண்டும் என்று கோரிக்கை வைப்பார்கள்.
இந்தநிலையில் வடகிழக்கு பருவமழை காரணமாக, அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து நேற்று காலை நிலவரப்படி 100.10 அடியாக உள்ளது. இந்த ஆண்டில் முதன் முறையாக பாபநாசம் அணை நீர்மட்டம் 100 அடியை கடந்துள்ள நிலையில் 2 மாவட்டங்களிலும் நெல் நாற்று நடவு செய்யும் பணியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
அதே நேரத்தில் அரசும் பிசான பருவ சாகுபடிக்காக அணையில் இருந்து தண்ணீர் திறந்துள்ளதால் சுமார் 86 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும். இதுதவிர 118 அடி கொள்ளளவு கொண்ட மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 68 அடியாக உள்ள நிலையில், அதில் இருந்தும் பெருங்கால் பாசன கால்வாய் வழியாக விவசாயத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது. அதன்மூலம் சுமார் 2,700 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும்.
நேற்று காலை நிலவரப்படி பாபநாசத்தில் 10 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது. சேர்வலாறு அணை நீர்மட்டம் 113 அடியை எட்டியுள்ளது. அந்த 2 அணைகளுக்கும் வினாடிக்கு 852 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. பாபநாசம் அணையில் இருந்து வினாடிக்கு 335 கனஅடி நீர் திறந்துவிடப்படுகிறது.
நாங்குநேரி, மூலைக்கரைப்பட்டி, களக்காடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்தது. அதிகபட்சமாக நாங்குநேரியில் 11 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. மூைலக்கரைப்பட்டியில்7 மில்லிமீட்டர் மழை பெய்தது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்துவரும் தொடர்மழையால் களக்காடு பகுதியில் காட்டாற்று வெள்ளம் குறையவில்லை. இதனால் தலையணையில் வெள்ளம் அதிக அளவில் செல்வதன் காரணமாக நேற்று 2-வது நாளாக அங்கு சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறை தடை விதித்துள்ளது.
தென்காசி மாவட்டத்திலும் அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த தொடர்மழை காரணமாக ராமநதி, கடனா நதி, கருப்பாநதி உள்ளிட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வந்த நிலையில் நேற்று முன்தினம் கருப்பாநதி அணை நிரம்பியது. அங்கிருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருவதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடையநல்லூர் சுற்றுவட்டார பகுதி கால்வாய்களில் வெள்ளம் அதிகமாக செல்கின்றது.
ராமநதி, கருப்பாநதி ஆகிய அணைகளில் இருந்து விவசாய பணிக்காக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் நெல் நடவு பணிகள் நடைபெற்று வருகிறது. அடவிநயினார் அணை பகுதியில் 11 மில்லிமீட்டர் மழை பெய்தது. அந்த அணை நீர்மட்டம் 107.50 அடியாக உள்ளது. குண்டாறு அணை தொடர்ந்து நிரம்பி வழிகிறது. ராமநதி அணை நீர்மட்டம் 78.25 அடியாகவும், கடனா அணை நீர்மட்டம் 75.80 அடியாகவும் உள்ளது.ராமநதி அணைக்கு தண்ணீர் வரும் ஆற்றில் தலைமலை சாஸ்தா கோவில் அருகில் ஏராளமான பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த இளம்பெண் தற்கொலை: 4 குழந்தைகள் பரிதவிப்பு
ஞாயிறு 13, ஜூலை 2025 10:59:59 AM (IST)

பேட்டை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் தேசிய தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம்
சனி 12, ஜூலை 2025 4:17:07 PM (IST)

ஆசிரியைகள் பணியிட மாற்றத்தை ரத்து செய்ய வலியுறுத்தி ஆசிரியர் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்!
சனி 12, ஜூலை 2025 3:38:39 PM (IST)

வணிகர் நல வாரியத்தில் உறுப்பினராக சேர ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்
வெள்ளி 11, ஜூலை 2025 4:08:36 PM (IST)

உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு பேரணி: மாவட்ட வருவாய் அலுவலர் துவக்கி வைத்தார்
வெள்ளி 11, ஜூலை 2025 12:50:40 PM (IST)

சுங்கச்சாவடியில் டிரைவர், கண்டக்டர்களிடம் கையெழுத்து வாங்கி அரசு பஸ்களை அனுமதித்த ஊழியர்கள்
வெள்ளி 11, ஜூலை 2025 8:22:12 AM (IST)
